2010-ம் ஆண்டு சிம்பு, திரிஷா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய 'விண்ணைத் தாண்டி வருவாயா' பெரும் வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் சமந்தா, நாக சைதன்யாவின் நடிப்பில் 'ஏ மாய சேஷாவே’ என்ற பெயரில் ரீமேக்காகி வெற்றி பெற்றது இப்படம். கெளதம் மேனன் படங்களுள் அதிகளவு இளைஞர்களால் விரும்பப்பட்ட படமிது எனலாம்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தைக் குறித்து அண்மையில் கெளதம் மேனன் ஒரு பேட்டியில் கூறினார். விடிவி 2 என்றில்லாமல், அதன் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை இருக்கும் என்றார். மேலும் இப்படத்தின் டைட்டில் ‘ஒன்றாக' என்றும் கூறியிருந்தார் கெளதம் மேனன். விடிவி 1-ல் நடித்த சிம்புவே இதில் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இயக்குநர் மணி ரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் சிம்பு பிஸியாக இருப்பதால் வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாத சூழலில் அவர் உள்ளார்.
தற்போது கார்த்திக் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கிறார் என்கிறது கெளதம் மேனன் வட்டாரம். அலைபாயுதே படத்தில் மாதவனின் பெயர் கார்த்திக் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் மாதவன், கன்னடத்தில் புனித் ராஜ்குமார், மலையாளத்தில் டொவினோ தாமஸ் என ஒவ்வொரு மொழியிலும் அந்தந்த மொழி நடிகர்கள் நடிக்கவிருக்கிறார்களாம். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கலாம். ஆனால் இன்னும் முடிவாகவில்லை. இது குறித்து எவ்வித அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவராததால் ரசிகர்கள் யார் கார்த்திக் என்று ஆவலாக காத்திருக்கிறார்கள்.