36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் போன்ற பெண் மையக் கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார் ஜோதிகா.
36 வயதினிலே படத்தில் நடுத்தர வயதுப் இல்லத்தரசியாகத் தோன்றி பெண்களின் ஒட்டுமொத்த கவனத்தைப் பெற்றார் ஜோ. அதன் பின் மகளிர் மட்டும் படத்தில் பத்திரிகையாளராக நடித்து வித்யாசமான கோணத்தில் பெண்களின் பிரச்னைகளை பதிவு செய்தார்.
நாச்சியாரில் அதிரடியாக போலீஸாக நடித்து திரை ஆர்வலர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றார். இந்நிலையில் ஜோவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று கோலிவுட் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க, ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் வித்யா பாலன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தும்ஹாரி சுலு என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப் போகிறாராம். இந்த படத்தில் வித்யா பாலன் ஆர் ஜெவாக நடித்திருப்பார். தமிழ் ரசிகர்களுக்காக கதையில் சில மாற்றங்களை உள்ளடக்கி திரைக்கதையை எழுதியிருக்கிறார் இப்படத்தை இயக்கவிருக்கும் ராதா மோகன். ராதா மோகன் இயக்கிய 'மொழி’ ஜோதிகாவின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.