சிம்புவின் மறுபெயர் சர்ச்சை எனும் அளவுக்கு தமிழ் ஹீரோக்களில் அதிகம் விமரிசனத்துக்குள்ளானவர் சிம்பு ஒருவரே. இயக்குநர் மணி ரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற செய்தியை அறிந்த சிம்பு வெறுப்பாளர்கள் சிம்புவை கலாய்த்து பல மீம்ஸ்களை இணையத்தில் பரப்பினர்.
கடந்த ஆண்டு சிம்புவாலும் அவர் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தினாலும் நான் படுபாதளத்துக்குச் சென்றுவிட்டேன் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பரபரப்பான குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான படம் - அன்பானவன் அசராதவன் அடங்காதவன். யுவன் இசையமைத்த இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் போன்றோர் நடித்தார்கள். சிம்பு மூன்று விதமான கெட்டப்களில் நடித்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் - மைக்கேல் ராயப்பன்.
படம் வெளியானதும் சிம்பு குறித்து மைக்கேல் ராயப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில் சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அந்த அறிக்கையில், 'கடந்த 9 வருடங்களில் 12 படங்களைத் தயாரித்துள்ளேன். பல படங்கள் சுமாராக ஓடினாலும் எப்படியும் வெற்றி அடைந்தே தீருவேன் என்கிற வெறியில் படத் தயாரிப்பைத் தொடர்ந்தேன். ஆனால் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம், சிம்பு அவர்களால் என்னைப் படுபாதாளத்துக்குக் கொண்டு செல்லும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை’ என்று விரிவான புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிம்புவுக்கு ரெட் கார்ட் போடும் அளவுக்கு பிரச்னை நீண்டது.
அண்மையில்தான் சிம்பு அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து வெளியேறி, இயக்குநர் மணி ரத்னம் படத்தில் நடிக்க பயிற்சி எடுத்து மெருகேறி வருகிறார்.
சிம்பு அச்சமயத்தில் தனி பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தினார், அதில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கலந்துக்கொண்டார். அவரும் சிம்பு மீது பல குற்றங்களை சுமத்தினார். இந்நிலையில் தற்போது சிம்பு-ஆதிக் பேசியதாக வலையேற்றப்பட்ட ஒரு ஆடியோ ஒன்று யூட்யூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆதிக்கை சிம்பு திட்டுவதும் அதற்கு மறுத்தும் அமைதி காத்தும் ஆதிக் பதில் கூறுவதும் பதிவாகியது.
இப்படி நடந்துக்கிட்டதால உனக்கு பைசா பிரயோஜனம் இருந்தாலும் எனக்கு வருத்தம் இருந்திருக்காது. ஆனா உனக்கும் ஒரு யூஸ் இல்லை. என்னுடன் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பழகிவிட்டு என்னை பற்றி நன்றாக தெரிந்த நீயே இப்படி செய்யலாமா’ என்று அந்த தொலைபேசி அழைப்பில் பேசியுள்ளார்.
சிம்பு திரைப்படங்களை இயக்கி, இசையமைத்து, நடிப்பதில் வல்லவர் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் இணையத்தில் வெளியிடும் விடியோ மற்றும் ஆடியோ இவை தனது சொந்த வாழ்க்கையிலிருந்து எடுத்து பொதுவெளியில் பகிரப்படுவதால் அவரிடம் பேசும் போதும் பழகும் போதும் உஷாராக இருக்க வேண்டும் என்று எதிர்வினை ஆற்றிவருகிறார்கள் நெட்டிசன்கள். ஐஸ்வர்யா, நயன் தாரா, ஹன்ஷிகா விடியோக்களைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இந்த ஆடியோவும் சிம்பு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், எதிராளியை காயப்படுத்தவும் எடுக்கும் கீழ்த்தரமான முயற்சி என்று கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்கள்.