பழங்குடியினத்தைச் சேர்ந்த மது என்ற இளைஞர், அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அரிசியைத் திருடியதாகக் கூறி பத்துக்கும் மேற்பட்டோர் மதுவை அடித்துக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி கண்டனக் குரல்களும் எழுந்தன. கேரளாவை மட்டுமல்ல உலக மக்கள் பலரையும் குற்றவுணர்வுக்குள்ளாக்கியுள்ளது இச்சம்பவம். மனிதம் மரித்துப் போனதற்கான மற்றொரு உதாரணம்தான் இது. கேரள முதல்வர் மற்றும் சமூக ஆர்வலகர்கள் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மலையாள நடிகர் மம்முட்டி இச்சம்பவத்தை தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
'மதுவை ஆதிவாசி என சொல்லாதீர்கள். அவன் என் இளைய தம்பி. அவனை எல்லோருடம் சேர்ந்து கும்பலாக கொன்றுவிட்டீர்கள். மதுவை உங்கள் தம்பியாக, மகனாக கூட நினைக்கவேண்டாம் ஒரு மனிதனாக நினைத்திருந்தாலும் கூட இப்படி செய்திருக்க மாட்டீர்கள். அவனும் நம்மை போல ஒருவன் தானே? பசிக்காக திருடியவனை திருடன் என்று சொல்ல முடியாது. இந்த இருண்ட சமூகத்திலிருந்து நீங்கள் பசியையும் பட்டினியையும் தான் அழிக்க வேண்டும். ரத்தமும் சதையுமாக அதற்கு பலியாகும் மனிதனை அல்ல. அவன் இந்த சமூகத்தில் வாழ வேண்டிய ஒருவன். அவனுக்கு அதற்கான உரிமைகள் உள்ளது. எங்களை மன்னித்து விடு மது’ என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார் மெகா ஸ்டார் மம்முட்டி.