விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - இரும்புத்திரை. இசை - யுவன் சங்கர் ராஜா.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் விஷால் பேசியதாவது: சமூகப் பிரச்னையைப் பற்றி படத்தில் பேசும்போது அது மிகப்பெரிய அளவில் வெற்றியைத் தரும். இரும்புத்திரை மிகப்பெரிய ஊழலைப் பற்றி பேசும் திரைப்படம். அதை இந்திய இராணுவத்தோடு சம்பந்தப்படுத்தி எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் மித்ரன். இப்படத்தில் இடம்பெறும் ஊழல் எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்ற ஒன்றாக இருக்கும். இப்படம் தாமதமாக வெளியாவதற்கு நான்தான் காரணம் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த டிஜிட்டல் யுகத்தில் இரும்புத்திரை முக்கியமான திரைப்படமாக இருக்கும். இப்படத்தில் வரும் பிரச்னையை என்னுடைய தந்தையும் தன் வாழ்வில் சந்தித்துள்ளார். என்னுடைய தந்தை போல் எனக்கும் ராணுவ அதிகாரி ஆகவேண்டும் என்கிற ஆசை இருந்தது. இப்போது இந்தப் படத்தில் இராணுவ வீரனாக நடித்துள்ளேன்.
யுவன் ஷங்கர் ராஜா என்னுடைய குடும்ப நண்பர். அவருடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும். யுவன் இசையில் பாடல் நன்றாக வந்துள்ளது. படத்தின் பின்னணி இசைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.