ராகவா லாரன்ஸ் மனத்தில் பட்டதை வெளிப்படையாக கூறும் இயல்புடையவர். சமீபத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசியது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்விதமாக அமைந்தது.
இவ்வளவு நாள், நாம் அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லி வந்தோம். அந்த அசுத்தத்தை ஆன்மீக அரசியல் மூலம் சுத்தம் செய்யவே ரஜினி அரசியலுக்கு வந்திருக்கிறார். ஆன்மீகத்துக்கும், மதவாதத்துக்கும் வித்தியாசம் உள்ளது. ‘மனசாட்சிப்படி உன் மனதில் ஆண்டவன் இருக்கிறான்’ என்றால் அது ஆன்மீகம். அதுவே, ‘உன் மனதில் ஜீசஸ் தான் இருக்கிறார், அல்லா தான் இருக்கிறார், சிவன் தான் இருக்கிறார்’ என்றால் அதுதான் மதவாதம்.
எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் ரஜினிகாந்த். மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்றால், எனது மனசாட்சி என்னை வாழ்நாள் முழுவதும் குத்திக் கொண்டே இருக்கும் என்று ரஜினி கூறியதைப் போல், என்னை வாழவைத்த ரஜினி அவர்கள், மக்களை பாதுகாக்க செல்லும் போது, அவருக்கு ஆதரவாக நான் நிற்கவில்லை என்றால், என் மனசாட்சி என்னை வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ விடாது’ என்று நெகிழ்ச்சியாக பேசிய லாரன்ஸ், ரஜினிகாந்த் கூறுவதை கேட்டு அதன்படி ரசிகர்கள் நடந்தால், அவர் கோட்டையை பிடிப்பது உறுதி’ எனக் கூறினார்.
ராகவா லாரன்ஸ் தற்போது 'காஞ்சனா 3' படத்தில் நடித்து வருகிறார். இதில் ஓவியா, வேதிகா, நிகிதா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அண்மையில் பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ள கதையில் லாரன்ஸ் இயக்கி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் பரபரப்பானது. தற்போது அந்தப் படத்திற்கு 'கால பைரவா' என தலைப்பு வைத்துள்ளார் ராகவா. இது ஹாரர் படமாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்றும் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
'காஞ்சனா 3' பட வேலைகள் பாதி முடிவடைந்த நிலையில் முழுவதும் முடிந்தவுடன் 'கால பைரவா' படத்தைத் தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி நடிக்கவிருப்பதாக ராகவா முடிவெடுத்துள்ளாராம்.