கோச்சடையான் பட விவகாரம்: செளந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்!

கோச்சடையான் திரைப்படம் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் ஆட்-பீரோ நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய...
கோச்சடையான் பட விவகாரம்: செளந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்புப் பணிக்காக லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள "மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்' நிறுவனத்துக்கு "ஆட்-பீரோ' விளம்பர நிறுவனம் கடன் அளித்திருந்தது. இந்நிலையில், வாங்கிய கடன் தொகையில் ரூ.8.70 கோடியை மட்டுமே திருப்பித் தந்ததாகவும், மீதமுள்ள தொகையைத் தரவில்லை என்றும் "ஆட்-பீரோ' நிறுவனம் புகார் அளித்தது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் லதா ரஜினிகாந்துக்கு எதிராக தொடுத்த வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "லதா ரஜினிகாந்த் தலைமையிலான குளோபல் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் 12 வாரங்களுக்குள் கடன் நிலுவைத் தொகை ரூ. 6. 20 கோடியை "ஆட் -பீரோ' நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கோச்சடையான் திரைப்படம் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் "ஆட்-பீரோ' நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 6.20 கோடியை லதா ரஜினிகாந்த் ஏன் வழங்கவில்லை என அதிருப்தி தெரிவித்ததுடன், வழக்கு விசாரணைக்கு உத்தரவிட வேண்டி வரும் எனவும் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர். பானுமதி அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது "ஆட் -பீரோ' நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் லதா ரஜினிகாந்த் இன்னும் வழங்கவில்லை' என்றார். 

இதையடுத்து,"நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் "ஆட் பீரோ' நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை லதா ரஜினிகாந்த் ஏன் வழங்கவில்லை?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது லதா ரஜினிகாந்த் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன், "லதா ரஜினிகாந்தின் ஒப்புதல் இல்லாமல் உறுதிமொழியை முன்பிருந்த வழக்குரைஞர் பதிவு செய்துள்ளார்' என்றார். இதையடுத்து, லதா ரஜினிகாந்த் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரும் ஜூலை 10-ஆம் தேதி இறுதி விசாரணையின் போது பணத்தை திரும்பச் செலுத்த தயாராக உள்ளீர்களா என்பது குறித்து இறுதியாகத் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு குறித்த விசாரணையைத் தொடர உத்தரவிட வேண்டி வரும்' என்றுஎச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து,வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து வெளியான செய்திகளுக்கு ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

வழக்கின் விபரங்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை 3-ம் தேதி நீதிமன்ற அதிகாரபூர்வ ஆணையில் லதா ரஜினிகாந்த் பற்றிக் குறிப்பிட்டிருந்ததைச் செய்தி நிறுவனங்கள் முழுமையாகக் குறிப்பிடவில்லை. உச்ச நீதிமன்ற ஆணையின் தமிழாக்கம்:

‘மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனத்தின் பொறுப்புத் துறப்பு மட்டுமின்றி, முதல் எதிர் மனுதாரரான லதா ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த பதிலானது, எதிர்மனுதாரரின் கருத்தினைக் கேட்காமல் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு ஆணையில் குறிப்பிட்ட அளவுக்கு அவருடைய பொறுப்புகள் இல்லை. எனவே ஏப்ரல் 16 தேதியிட்ட நீதிமன்ற ஆணை செயல்படுத்த முடியாததாகக் கூறப்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, அந்த நிறுவனப் பொறுப்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்நுழைவதை விட, மனுவின் மீது தீர விசாரணை நடத்தி அதன்படி முடிவெடுப்பது உசிதமானது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.’

வழக்கு இறுதித் தீர்ப்புக்காக ஜூலை 10-ம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது என்று தனது அறிக்கையில் செளந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com