விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 100 நாள்கள் மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் சிநேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் போட்டியிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமும் பெற்றார்கள். வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார்.
இந்நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பானது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெற்றன.
அனைவரும் எதிர்பார்க்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி, ஜூன் 17 முதல் ஆரம்பமாகவுள்ளது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். திங்கள் முதல் ஞாயிறு வரை வாரத்தின் அனைத்து நாள்களிலும் தினமும் இரவு 9 மணிக்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்கள் குறித்த விவரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் நடிகை சிநேகா இந்நிகழ்ச்சியில் பங்குபெறப்போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதை சிநேகா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்குபெறவில்லை என்று அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அடிப்படை ஆதாரமில்லாத வதந்தி இது. எங்கு, என்னவாக இருக்கிறேனோ அதில் மகிழ்ச்சியாகவே உள்ளேன். இந்தச் செய்தியைப் பதிவு செய்வதற்கு முன்பு ஊடகங்கள் என்னிடம் ஒருமுறை கேட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.