ஏற்கெனவே புகழின் உச்சியில் இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு இது அடுத்தக்கட்ட முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவே எதிர்பார்க்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷின் கதவைத் தட்டியுள்ளது.
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த வருடம் வெளியான படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மகத்தான சாதனைகளைப் படைத்தது.
ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் ராஜமெளலி அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார். இவர்கள் மூவரும் இணைவதால் இப்போதைக்கு இந்தப் படம் சமூகவலைத்தளங்களில் ஆர்ஆர்ஆர் எனக் குறிப்பிடப்படுகிறது. டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் ராஜமெளலி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அனுஷ்கா போல தமிழ், தெலுங்கு என இரு மொழிகளுக்கும் பொருத்தமான நடிகையாக இருப்பார் என்பதால் கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார் என்று அறியப்படுகிறது.
வருகிற செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி, 2020-ல் வெளியாகவுள்ள இப்படம் குறித்த கூடுதல் அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.