காலா டீஸர் வெளியாகி இணையத்தில் வைரலாகி ட்ரெண்டிங் ஆகி சும்மா அதிர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த நுணுக்கமான விஷயங்களைப் பார்க்கத் தவறாதீர்கள்.
'கருப்பு உழைப்போட வண்ணம். என் சால்ல வந்து பாரு...அழுக்கு அத்தனையும் வண்ணமா தெரியும்' என்று ரஜினி தோரணையாக அமர்ந்து வசனம் பேசுகையில் அவர் வலது கை மேல்புறத்தில் பச்சை குத்தியிருப்பதைப் பார்க்க முடியும். அந்த டாட்டூவில் சரீனா என்ற பெயர் குத்தப்பட்டிருக்கும். படத்தில் ஹூமா குரேஷியின் பெயர் சரீனாவாக இருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள் டீஸர் பார்த்த ரசிகர்கள்.
அடுத்து, நானா படேகரின் அறையில் கேன்யாவின் சுற்றுச் சூழல் போராளியும் நோபல் பரிசு பெற்றவருமான வங்காரி ம்யூதா மாதாயின் புகைப்படத்தை வைத்திருப்பார். இயக்குநர் பா.ரஞ்சித் இதனை சன்னமாக பின்னணியில் வைத்திருப்பதை கவனிக்கத் தவறாதீர்கள். முன்னதாக கபாலி திரைப்படத்தில் சிறையில் ரஜினி படித்த புத்தகம் Y.B சத்யநாராயணா எழுதிய 'My Father Baliah' என்ற புத்தகம். படம் வெளியான சமயத்தில் புத்தகம் மேலும் கவனம் பெற்றது. தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறையைப் பற்றி பேசும் அந்தப் புத்தகம் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.
தற்போது சூழலியல் குறித்த அக்கறையை வெளிப்படுத்தும் வகையாக பா.ரஞ்சித் ஒரு காட்சியில் அந்தப் புகைப்படத்தை வைத்துள்ளது பாராட்டுக்குரியது.