நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தால் பிரபல நடிகை சோனம் கபூரின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உறவினரின் இல்லத் திருமண நிகழ்ச்சிக்காக துபை சென்றிருந்த ஸ்ரீதேவி, அவர் தங்கியிருந்த ஹோட்டலில் திடீரென உயிரிழந்தார். அதையடுத்து, அவரது உடல் பிரதே பரிசோதனைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு தனி விமானத்தில் மும்பை கொண்டு வரப்பட்டது. மும்பையில் நடிகை ஸ்ரீதேவியின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஸ்ரீதேவிக்கு கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் உள்ளனர்.
பிரபல நடிகையும் கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவருமான சோனம் கபூர் தனது காதலரும் தொழிலதிபருமான ஆனந்த் அகுஜாவை இந்த வருடம் ஜூன் - ஜூலையில் திருமணம் செய்வதாக இருந்தார். சோனம் - ஆனந்த் ஆகிய இருவரும் கடந்த இரு வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள்.
ஆனால் ஸ்ரீதேவியின் மரணத்தால் உடனடியாகத் திருமணம் நடப்பதை சோனம் கபூரும் அவரது குடும்பத்தினரும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த வருடத்தில் சோனம் கபூர் - ஆனந்த் அகுஜா திருமணம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை சோனம் கபூர், நடிகர் அனில் கபூரின் மகள். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், அனில் கபூரின் அண்ணன்.