தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை என்றொரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழி ஜான்வி கபூருக்கு எதில் பொருந்துகிறதோ இல்லையோ? அறிமுகப்படமான ‘தடக்’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் ஒன்று அதை நிரூபித்திருக்கிறது. இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள், அப்படியே ‘இங்லிஷ், விங்லிஷ்’ திரைப்படத்தில் ஸ்ரீதேவி தழையத் தழைய புடவை உடுத்தி கற்றை முடி முகத்தில் விழ நீளப்பின்னல் காற்றில் அசைய குடும்பக் குத்துவிளக்காக எந்தக் கோலத்தில் வந்து தனது ரசிகர்களை மனதார மகிழ்வித்தாரோ அதே ஹோம்லி லுக்கில் அசத்துகிறார் ஜான்வி. தாயின் மரணத்தைத் தொடர்ந்து உடனடியாகப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. துக்கம் ஒரு சிறிதாவது குறைந்த பின் நிதானமாகப் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டால் போதும் என தயாரிப்பாளர் கரண் ஜோஹர் கூறிய பின்னும் ஜான்வி ஓய்வில் இருக்க விரும்பவில்லை. ஸ்ரீதேவி இறந்த 13 நாட்களுக்குள் மீண்டும் இதோ படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து விட்டார். ஜூலையில் வெளியாகவிருக்கும் ‘தடக்’ திரைப்படம் ஜான்வியின் முதல் திரைப்படம். இதில் தன் தாய் ஸ்ரீதேவியை நினைவூட்டும் விதத்தில் அவரைப் போலவே புடவை உடுத்தி, ஒற்றை முடிக்கற்றை முகத்தில் விழ போஸ் தரும் இந்தச் சிறுமியின் சின்சியாரிட்டி கண்டு வியக்கிறதாம் பாலிவுட். என்ன இருந்தாலும் ஸ்ரீதேவியின் மகள் அல்லவா? அவருக்கிருந்த பெர்ஃபெக்சன் உணர்வு மகளுக்கும் இருக்காதா பின்னே?!