பயோபிக் என்று சொல்லப்படக் கூடிய வாழ்க்கைச் சித்திரத் திரைப்படங்களின் காலம் இது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமான மனிதர்களாக புகழின் உச்சியில் வாழ்ந்து மறைந்தவர்களின் வாழ்க்கை திரைப்படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழில் பாரதி, பெரியார், காமராஜர் உள்ளிட்டோர் குறித்து வாழ்க்கைச்சித்திர திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்தியிலும் டங்கல், மாஞ்சி, மேரிகோம், மில்கா சிங் உள்ளிட்ட திரைப்படங்களை அந்த வரிசையில் சேர்க்கலாம். தெலுங்கில் தற்போது வெளிவரத் தயாராகவிருக்கும் ‘மகாநதி’ திரைப்படம் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கைச் சித்திரத்தைப் பின்பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தயாரிப்பில் இயக்குனர் தேஜா இயக்கத்தில் பழம்பெரும் நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான நந்தமூரி ராமாராவ் எனப்படும் என்டிஆர்இன் வாழ்க்கைச் சித்திரம் திரைப்படமாகவிருக்கிறது. அதில் தனது தந்தையின் பாத்திரத்தில் நடிக்கவிருப்பது சாட்ஷாத் பாலகிருஷ்ணாவே தான். என் டி ஆரின் மனைவி பசவதாரகமாக நடிக்க வைக்க யாரை அணுகலாம் என யோசிக்கையில் மேட்ச் ஹண்டர் எனும் செயலி மூலமாக இயக்குனர் தரப்பு தேடுதல் வேட்டையில் இறங்கியது. முதலில் நடிகை நித்யா மேனன் அந்தக் கதாபாத்திரத்துக்காக அணுகப்பட்டார். ஆனால், என்ன காரணத்தாலோ அவர் அந்தக் கதாபாத்திரத்தைத் தவிர்க்கவே தற்போது நடிகை வித்யா பாலன் அணுகப்பட்டிருக்கிறார்.
இந்தியில் டர்ட்டி பிக்சர், கஹானி, துமாரி சுலு உள்ளிட்ட திரைப்படங்கள் வாயிலாக வலிமையான பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் வித்யாபாலன் பசவதாரகம் கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவராக இருப்பார் என இயக்குனர் மற்றும் பாலகிருஷ்ணா தரப்பு நம்பியதால் அந்த வாய்ப்பு வித்யா பாலனுக்குச் சென்றிருக்கிறது.