தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலை எதிர்த்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க சஞ்சய் தத் முடிவு!

இனிமேல் என்னையோ என் குடும்பத்தையோ காயப்படுத்தும் புத்தகத்தின் அத்தியாயங்கள் வெளிவராது என எண்ணுகிறேன்... 
தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலை எதிர்த்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க சஞ்சய் தத் முடிவு!

தி கிரேஸி அண்டோல்ட் ஸ்டோரி ஆஃப் பாலிவுட்ஸ் பேட் பாய் என்கிற பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியாகியுள்ளது. ஜுக்கர்நட் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலை எழுதியுள்ளவர் யாசீர் உஸ்மான். 

இந்நிலையில் தன்னுடைய அனுமதியின்றி வெளியாகியுள்ள இந்த நூலை எதிர்த்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க சஞ்சய் தத் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளதாவது: 

ஜுக்கர்நட் பதிப்பகத்தையோ யாசீர் உஸ்மானையோ என்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதும்படி நான் அதிகாரபூர்வ அனுமதி அளிக்கவில்லை. இதுதொடர்பாக என் வழக்கறிஞர்கள் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். அதற்கு ஜுக்கர்நட் பதிப்பகம், பொதுத்தளத்தில் உள்ள ஆதாரமான தகவல்களின் அடிப்படையில் புத்தகத்தின் உள்ளடக்கம் உள்ளதாக பதில் அளித்துள்ளது.

ஆனால், இந்தப் புத்தகத்தின் சில அத்தியாயங்கள், செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளன. அவற்றில் ஒருபகுதிதான் என்னுடைய பழைய பேட்டிகளிலிருந்து எழுதப்பட்டவை. மற்ற தகவல்கள் அனைத்தும்
1990களின் பத்திரிகைகள், கிசுகிசு செய்திகளிலிருந்து எழுதப்பட்டவை. அவற்றில் பெரும்பாலானவை கற்பனையாக எழுதப்பட்ட பொய்யான செய்திகள். என்னுடைய சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளேன். 

இனிமேல் என்னையோ என் குடும்பத்தையோ காயப்படுத்தும் புத்தகத்தின் அத்தியாயங்கள் வெளிவராது என எண்ணுகிறேன். என்னுடைய அதிகாரபூர்வ சுயசரிதை விரைவில் வெளிவரும். அதில் ஆதாரபூர்வமான தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com