தனுஷின் அடுத்தப் படத்தை இயக்கவுள்ள ‘பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜ்!
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அதிகக் கவனம் ஈர்த்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.
இத்தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தனுஷ். கடைசியாக பெரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்துவிட்டேன். அட்டகாசமான படம். நிஜ வாழ்க்கையை வெளிப்படுத்திய விதத்தில் நீங்களும் கதையுடன் கலந்துவிடுவீர்கள். என்னுடைய அடுத்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் (கலைப்புலி தாணு) தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். அவரைப் போன்ற ஒரு திறமைசாலியுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன் என்று கூறியுள்ளார் தனுஷ்.
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய பா.இரஞ்சித் தயாரிப்பாளராக அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர், பரியேறும் பெருமாள் என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் கதாநாயகனாகவும் ஆனந்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு - ஸ்ரீதர். கலை - ராமு. செப்டம்பர் 28 அன்று வெளியான இப்படத்துக்கு நல்ல விமரிசனங்களும் பாராட்டுகளும் கிடைத்துள்ளன.