கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின. இதையடுத்து தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் யாரால் வெளியிட்பபட்டன என்று கேள்விகள் எழுந்தன.
இதுகுறித்து அக்ஷரா ஹாசன் ட்விட்டரில் கூறியதாவது:
இதை யார், எதற்காக வெளியிட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதை ஒவ்வொருமுறையும் பலர் பகிரும்போது எனக்கு அச்சம் ஏற்படுகிறது. என்னைத் துன்புறுத்துவதில் அவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். மீ 2 இயக்கம் எழுச்சி பெறுகிற சமயத்தில் ஓர் இளம் பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டு அதன்மூலம் நான் துன்புறுத்தப்பட்டுள்ளேன். இதைச் செய்தவர் யார் என்று கண்டுபிடிக்க மும்பைக் காவல்துறையை அணுகியுள்ளேன். என்னைத் துன்புறுத்துகிற வேலையை யாரும் தொடரமாட்டீர்கள் என நம்புகிறேன் என்று ட்விட்டரில் பதிவு எழுதினார்.
1980களில் உல்லாசப் பறவைகள், முரட்டு காளை போன்ற தமிழ்ப் படங்களில் நடித்த நடிகை ரதியின் மகனும் நடிகருமான தனுஜ் விர்வானியைக் காதலித்துவந்தார் அக்ஷரா. பிறகு கருத்துவேறுபாடுகள் காரணமாகச் சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டார்கள். தற்போது வெளியான புகைப்படங்கள், அக்ஷரா 2013 வரை பயன்படுத்திய ஐ போன் 6-ல் எடுக்கப்பட்டவை. தன்னுடைய புகைப்படங்களை 2013-ம் ஆண்டு தனுஜிடம் பகிர்ந்துள்ளார் அக்ஷரா. இதனால் சமீபத்தில் வெளியான அக்ஷராவின் தனிப்பட்ட புகைப்படங்கள் தனுஜால் கசியவிடப்பட்டதால் என்கிற கோணத்தில் மும்பைக் காவல்துறை விசாரணை செய்து வருவதாகவும் இதுகுறித்து தனுஜை விசாரணை செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அக்ஷராவின் புகைப்படங்களைத் தான் கசியவிடவில்லை என தனுஜ் கூறியுள்ளார். அவருடைய செய்தித்தொடர்பாளர் ஆங்கில நாளிதழுக்குக் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். அக்ஷரா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பலவருடங்கள் அக்ஷராவும் தனுஜும் டேட்டிங் செய்தார்கள். ஆனால் தற்போது அவர்கள் ஒன்றாக இல்லை. எனினும் அவர்கள் நண்பர்களாக நீடிக்கிறார்கள். அவர்கள் இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இருநாள்களுக்கு முன்புகூட கிண்டலாகப் பேசிக்கொண்டார்கள். அவர்களுடைய உரையாடல்களை தனுஜ் வைத்துள்ளார். தேவைப்பட்டால் அதையும் வெளியிடுவோம். நட்புரீதியில் அவர்கள் செய்துகொண்ட கிண்டல், அவர்களுடைய பிரிவினால் நட்பு மோசமடையவில்லை என்பதைக் காட்டுகிறது. அவர்கள் இன்னமும் நண்பர்களாகத்தான் உள்ளார்கள். ஒருவேளை தனுஜை அக்ஷரா குற்றம் சாட்டவேண்டுமென்றால் அவர் பல மாதங்களாக தனுஜிடம் பேசிக்கொண்டிருக்கமாட்டார். அவர்கள் பிரிந்து கிட்டத்தட்ட ஒருவருடமாகிறது.
அக்ஷரா எதிர்கொண்ட இந்தப் பிரச்னையை தனுஜ் நன்கு அறிவார். காவல்துறையின் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க தனுஜ் ஒத்துழைக்கத் தயாராக உள்ளார். குற்றம் செய்தவர் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.