எனது திரை வாழ்க்கை முழுமையாகிவிட்டது! 'பேட்ட’ நாயகி த்ரிஷா உருக்கம்!

அக்டோபர் 4-ம் தேதி ரிலீஸாகவிருக்கும் 96 படத்தை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா.
எனது திரை வாழ்க்கை முழுமையாகிவிட்டது! 'பேட்ட’ நாயகி த்ரிஷா உருக்கம்!

அக்டோபர் 4-ம் தேதி ரிலீஸாகவிருக்கும் 96 படத்தை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா.

இந்நிலையில் அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதன் முறையாக பேட்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். தன்னுடைய திரை வாழ்க்கைக்கு ஒரு நிறைவு கிடைத்துவிட்டதாக உணர்வதாகக் கூறினார். பேட்ட படத்தில் நடிப்பதன் மூலம் தனது திரை வாழ்வு முழுமையாகிவிட்டது என்று நெகிழ்ச்சியடைகிறார். அவரது நேர்காணலின் ஒரு பகுதி :

‘வருடக்கணக்கில் என்னைத் தொடரும் ஒரு கேள்வி என்னென்னா, சூப்பர் ஸ்டாருடன் எப்போ நடிப்பீங்கங்கறதுதான். உண்மையிலேயே இந்தக் கேள்வி என்னை பாதிச்சது. அப்படி கேட்டவங்க எல்லாம் வாயடைச்சுப் போகற அளவுக்கு அதுக்கான பதில் இப்போதான் கிடைச்சிருக்கு. பேட்ட ஷூட்டிங்கிற்காக போன திங்கள்கிழமை ஸ்பாட்டுக்கு வந்தேன். இன்னும் ஒரு மாசம் தொடர்ந்து ஷூட்டிங். இந்த வாய்ப்பு நான் மிகவும் எதிர்பார்த்துட்டு இருந்த ஒண்ணு, அதனால ஒரு மன நிறைவு எனக்குக் கிடைச்சிருக்கு. என்னுடைய திரை வாழ்க்கையே முழுமையாகிவிட்டதா உணர்கிறேன்’ என்று நெகிழ்ச்சியாகக் கூறினார் த்ரிஷா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிப்பது தனது நீண்ட நாள் கனவு என்று மனம் திறந்து கூறினார். 'அவரை நிறைய தடவை சந்தித்து பேசியிருக்கேன், இப்பத்தான் முதல் தடவையா நடிக்கறேன். நிச்சயம் அவரோட நடிக்கறது மறக்க முடியாத அனுபவமா இருக்கும்'. என்றார்.

வரும் வியாழக்கிழமை வெளியாகவிருக்கும் 96 படம் குறித்தும் சந்தோஷத்தில் இருக்கிறார் த்ரிஷா. ப்ரேக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக அந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அது குறித்து கூறுகையில், ‘நான் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிற படம் 96. இந்தப் படத்தை ரசிகர்கள் எப்படி எடுத்துப்பாங்கங்கற டென்ஷன் இருக்கு. இதுவரைக்கும் பாஸிட்டிவ் எதிர்ப்பார்ப்பு தான் இருக்கு. சோஷியல் நெட்வொர்க்ல ரசிகர்கள் எழுதற பதிவுகளை படிச்சிட்டு வரேன். அவங்க ஏற்கனவே இந்தப் படத்தை கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க, அதுவே இன்னும் டென்ஷனை ஏத்துது. நாங்க நல்ல படத்தை எடுத்திருக்கோம்ங்கற நம்பிக்கை இருக்குது. ஆனால் ரிலீஸுக்கு முன்னாடி இந்தளவுக்கு எதிர்ப்பார்ப்பு உருவாகும்னு நாங்களே நினைக்கலை.

இந்தப் படத்தைப் பத்தி சொல்லணும்னா, எனக்கு முதல்ல கதையைக் கேட்டதுமே பிடிச்சு போச்சு. அடுத்து விஜய் சேதுபதி ஹீரோன்னதும் இதுல நடிக்கறதுக்குண்டான ஆர்வம் அதிகமாச்சு. இதுக்கு முன்னாடி நாங்க சேர்ந்து நடிச்சதில்லை. இது ஒரு லவ் ஸ்டோரி. ஒரு அழகான கதையில், புதிய ஜோடி பண்ணினா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. உடனே சம்மதிச்சேன். ராம், ஜானு இவங்க ரெண்டு பேரும் 1996-ம் ஆண்டு ஒண்ணா ஸ்கூல்ல படிச்சவங்க. இருபது வருஷம் கழிச்சு ஸ்கூல் ரீ-யூனியன்ல மறுபடியும் சந்திக்கறாங்க.  இதான் கதையோட ஒன் லைன்.

அவங்களுக்குள்ள சொல்லப்படாத ஒரு காதல் இருந்திருக்கு. ஆனா அவங்க ஒவ்வொரு செய்கையும் அதை உணர்த்தும். உங்களுக்கு நிச்சயம் இந்தக் கதையும் எங்களோட நடிப்பும் பிடிச்சிடும். காரணம் இதுல எதார்த்தமா அந்தக் கதாபாத்திரங்களை உள்வாங்கி ஜானுவாகவும் ராமாகவும் திரையில வாழ்ந்திருக்கோம். இதுக்கு முக்கிய காரணம் எங்க இயக்குநர்னு சொல்லலாம். ப்ரேம் எப்படி பட்ட டைரக்டர்னா, நடிக்கற சீனை ஆல்மோஸ்ட் ஒரே டேக்ல ஓகே பண்ணிடுவார். நிறைய டேக்ஸ் போக மாட்டார். காரணம் முதல் டேக்ல தான் அசல்தன்மை இருக்கும்னு சொல்வார். டயலாக் தப்பா இருந்தா கூட பரவாயில்லை, டப்பிங்கில சரி பண்ணிக்கலாம்னு சொல்லி அந்த சீனை சிறப்பா எடுத்து முடிச்சிடுவார். எங்களைப் பொருத்தவரையில் இந்தப் படத்துல நடிச்ச மாதிரியே தெரியலை. அந்தளவுக்கு ஈஸியாக நேச்சுரலா இருந்தது.

விஜய் சேதுபதியைப் பற்றி கேட்ட போது, 'நான் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள்ல அவரைப் போல ஒரு லகுவான ஒரு நடிகரை சந்திச்சது இல்லை. யாரையும் டென்ஷன் பண்ணாம, தன்னைப் பத்தின பிம்பம், இமேஜ் எதுவுமில்லாம மிகவும் எளிமையாக இருக்கறவர் விஜய் சேதுபதி. ஷூட்டிங் முதல் நாள்லேர்ந்து லகுவா ஃபீல் பண்ண வைச்சார்.

நயன்தாரா, அனுஷ்காவைத் தொடர்ந்து த்ரிஷாவும் தற்போது தன்னுடைய கதாபாத்திரங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடிப்பதை கடைபிடித்து வருகிறார். மோகினி, நாயகி என்று அண்மையில் த்ரிஷா நடித்த படங்கள் பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வலுவான படங்கள். இதே போன்ற படங்களில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, 'இந்த மாதிரி படங்கள்ல மட்டும்தான் நடிப்பேன்னு உறுதியா எந்த முடிவும் எடுக்கலை. ஆனால் அந்த ரோல் சுவாரஸ்யமா இருந்துச்சுன்னா நிச்சயம் நடிப்பேன்.’ என்றார். 

பேட்டையைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. இதில் த்ரிஷாவுடன் நயன்தாராவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com