வடசென்னையை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ள தமிழ்ப் படங்களில் தவிர்க்க முடியாத படமாக இந்த வடசென்னை இருக்கும். படம் பார்க்கும் ரசிகர்கள் இதை நிச்சயம் உணர்வார்கள்.
1987-ல் நடைபெறும் ஒரு கொலை சம்பவத்துடன் படம் தொடங்குகிறது. அந்தக் கொலைக்கு காரணமாக இருக்கும் குணா மற்றும் செந்தில் கூட்டணி இரு வன்முறைக் கும்பலாகப் பிரிகிறார்கள். திறமையான கேரம் போர்டு வீரனான அன்பு (தனுஷ் கதாபாத்திரம்) இந்த இரண்டு கும்பல்களுடன் எப்படி இணைகிறான், அதன் பிறகு வன்முறைகள் நிறைந்த அவனுடைய வாழ்க்கை எத்திசையில் செல்கிறது என்பதுதான் வடசென்னை படத்தின் முதல் பாகம். ஆனால், இதோடு அல்லாமல் அன்பு கதாபாத்திரத்துக்கும் படத்தின் பல கதாபாத்திரங்களுக்கும் ஒரு தொடர்பு இருந்துகொண்டே இருக்கும்.
இந்த கதைக் களத்தின் ஊடாக வடசென்னைப் பகுதி மக்களின் வாழ்க்கை முறையை விவரிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது வடசென்னை படம்.
ஒரு வெற்றிகரமான திரைக்கதையின் அடித்தளமே கதாபாத்திரங்களை விவரிப்பதுதான். கதையில் இருக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் பதியவில்லை என்றால் அது எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் தோல்வியில் தான் முடியும். வடசென்னை படத்தில், எண்ணற்ற கதாபாத்திரங்கள். இருப்பினும், அனைத்துக்கும் கதையில் முக்கியத்துவம் அளித்து கதையின் மகத்துவத்தை ரசிகர்கள் மனதில் பதிய வைத்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
தனுஷ், சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, கிஷோர், அமீர், பவன், டேனியல் பாலாஜி என இத்தனை நடிகர்கள் இருந்தாலும் அனைவரும் தங்களது கதாபாத்திரத்துக்கு ஏற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஒவ்வொருவரின் நடிப்பிலும் வித்தியாசத்தை உணரமுடிகிறது. அனைவருமே கதையை முன்னகர்த்திச் செல்ல உதவியிருக்கிறார்கள். குறிப்பாக அமீர் ஏற்று நடித்திருக்கும் ராஜன் கதாபாத்திரம் ரசிகர்களின் கைத்தட்டல்களை பெற்றுள்ளது.
முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகள் சிறைச்சாலையில் நடைபெறுகிறது. அதில், ஒரு சிறைச்சாலைக்குள் எப்படி பீடி, செல்போன், போதைப்பொருள் போன்றவை கடத்தப்படுகின்றன எனக் காண்பித்து ஒரு சிறைச்சாலைச் சூழலை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார்கள்.
வடசென்னை என்றால் வன்முறை, கடத்தல், கொலை என்கிற ஒரு பிம்பம் படங்களின் வழியே நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இந்தப் படம், வடசென்னைப் பகுதியில் நிகழும் வன்முறை மற்றும் கடத்தல் சம்பவங்களை மட்டும் வெளிப்படுத்தாமல் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல், கட்சிகளின் அரசியல் செயல்பாடுகள, நில உரிமை அரசியல், கல்வியின் அவசியம் என வடசென்னையின் அடிமட்ட பிரச்னைகள் வரை தோண்டிச்சென்று புதிய வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது.