அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா? சட்டம் சொல்வதென்ன?

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 பிரிவு.2(3)-ன் படி, ஒரு அரசு ஊழியர்கள் என்பவர் அரசு தன் ஆட்சியின் காரியங்களை ஆற்ற பணி அல்லது பதவிக்கு அமர்த்தும் நபர் என வரையறுக்கபடுகின்றது.
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா? சட்டம் சொல்வதென்ன?

அரசு ஊழியர் யார்?

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 பிரிவு.2(3)-ன் படி, ஒரு அரசு ஊழியர்கள் என்பவர் அரசு தன் ஆட்சியின் காரியங்களை ஆற்ற பணி அல்லது பதவிக்கு அமர்த்தும் நபர் என வரையறுக்கபடுகின்றது. இது இந்திய ஆட்சிப் பணியிலிருந்து (I.A.S) கடைநிலை ஊழியர் வரை பொருந்தும்.

”Officer” என்பது அலுவலர் அதாவது அலுவல்களை செய்பவர் ஆவார். ”Minister’ என்பது செயலாற்றுப் பணியாளர், என பொருள்படும். ”அமைச்சு’ என்றால் பணி செய்தல், உதவியாயிருத்தல், கொடுத்துதவுதல் என பொருள். அதிகாரி என்றால் அரசு நிர்வாகத்தில் ஆனைகளை நடைமுறைபடுத்தும் பொறுப்பிலுள்ள அலுவலர் என பொருள். ஆக அனைத்தும் மக்களுக்கு பணி செய்யவே ஒழிய. அதிகாரி என அதிகாரம் செய்தல் சட்ட விரோதம் ஆகும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: (Classification of Government Employees)

அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது..

1.     தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 6,600ம் அதற்கு மேலும் பெறும் அரசு அலுவலர்களை வகை l (கிரேடு) என்றும், (முன்பு A Class)

2.     தர ஊதியம் ரூபாய் 4,400 முதல் 6,600க்குள் பெறும் அரசு அலுவலர்கள்/ஆசிரியர்களை வகை II (கிரேடு) என்றும், ( முன்பு B Class)

3.     தர ஊதியம் ரூபாய் 4,400க்கு கீழ் பெறும் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களை வகை III & lV (கிரேடு) என்றும் பிரிக்கப்படுகிறது. (முன்பு C & D Class).

அரசு ஊழியர் பெறும் சம்பளம்

அடிப்படை சம்பளம்( Basic salary), பஞ்சப்படி எனும் அகவிலைப்படி(Dearness Allowances), பயணப்படி (Travelling Allowances), வீட்டுவாடகை படி (House allowance), அரசு ஊழியர் ஆரோக்கிய இன்சூரன்ஸ் திட்டம் (Govt. Employees Health Fund Scheme), வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பு (provident fund) பொங்கல் பரிசு (Pongal Gift), விழா முன்பணம்(Festival Advance), மருத்துவ படி (Medical Allowance) விடுப்பு பணம்(Encashment of Leave) ஓய்வூதியம், இன்னும் பல

அரசு ஊழியர்களுக்கான செலவு

மாநில அரசின் மொத்த வருவாயில் மாநில வரிவருவாய் ரூ. 99,590.13 கோடி வரி அல்லாத ஏனைய வருவாய் 12,318. கோடியில் ரூ.66,908 அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதிற்கும் செலவிடப்படுகிறது.

அரசின் முக்கிய துறைகள்

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை, வேளாண்மை துறை,கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை

எரிசக்தி, சுற்றுச்சூழல் (ம) வனத்துறை, நிதி துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை

மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை, உயர்கல்வி துறை,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழில் துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை, தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை, சட்டத்துறை, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை, திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொது துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக் கல்வி துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, சுற்றுலா,பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து துறை, இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, பொது (தேர்தல்கள்) துறை,பொதுப்பணி துறை.   இத்தனை துறைகளில் ஊழியர்கள் உண்டு.

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 சொல்வது என்ன?

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்விக்கூட ஆசிரியர்கள் மற்றும், மாநில அரசிடம் ஊதியம் பெறும் சட்ட சபை உறுப்பினர்களும், அமைச்சர்களும், வாரியத்தலைவர்களும் அரசு ஊழியர்கள் ஆவார். எனவே இவர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்களே.

விதி-3

எந்த அரசு ஊழியரும் வரதட்சணை கொடுக்கவோ, பெறவோ கூடாது.

விதி-3-A

எந்த அரசு ஊழியரும் தனியார்களின் கௌரவ விழா, ஓய்வி விழா, நிறுவனங்கள், பொதுமக்கள் அவர்களுடன் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களை அரசின் முன் அனுமதியின்றி செய்தல் கூடாது.

விதி-5

எந்த அரசு ஊழியரும் பங்குச் சந்தையில் ஈடுபடுதல், வேறு முதலீடுகள் செய்தல், தன் சார்பாக குடும்ப உறுப்பினர்களை ஈடுபடச் செய்தல், எந்த தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.

விதி-6 (4) (aa)

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி யாருக்கும் 10,000 ரூபாய்க்கு மேல் அசையும் சொத்தை குத்தகை, அடமானம், வாங்குதல், விற்றல், கொடை செய்தல், பரிமாற்றம் செய்தல் போன்றவற்றை அரசின் அனுமதியின்றி செய்தல் கூடாது.

விதி-7

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி எந்த வியாபாரம், தொழிலில் ஈடுபடக்கூடாது.

விதி-11

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி நாளிதழ், தொலைக்காட்சி, வானொலி பிரசுரம் போன்றவற்றை ஈடுபடுதல் கட்டுரை வரைதல் செய்தல் கூடாது.

விதி-12

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி பொதுவிழாவில் நடந்த விசயங்களை, கருத்தை சொல்லக் கூடாது. அரச்சின் கொள்கைகள், அரசு பரிபாலனம், அரசின் மற்ற அரசுகளுடனான உறவுகள் பற்றி பேசுதல் கூடாது. அலுவலகம் சாராத கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், தலைமை ஏற்றல் கூடாது.

விதி-14

எந்த அரசு ஊழியரும் தன் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் ஈருபடுதலை தடுக்க வேண்டும்.

விதி-14-A

எந்த அரசு ஊழியரும் மதம், இனம், இடம், பிறந்த இடம், குடியிருப்பு, மொழி, ஜாதி சம்மந்தமான எந்த அமைப்பிலும் உறுப்பினராகவோ, சம்மந்தப்பட்டோ இருத்தல் கூடாது

விதி-17

எந்த அரசு ஊழியரும் நெருங்கிய சொந்தங்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியவோ, தன் பணி சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணியமர்ந்திருப்பதையோ அனுமதிக்கக் கூடாது.

விதி-20

எந்த அரசு ஊழியரும் முழுமனதுடன், முழு ஈடுபாட்டுடன் பணியில் இருக்க வேண்டும்.

விதி-20-B

எந்த அரசு ஊழியரும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்திரவு கொடுத்தல், பாலியல் ஆசையை முன்மொழிதல், தொடுதல், கேட்டல், வேண்டல், சைகை, ஆபாசப்படம் காட்டுதல் போன்ற தேவையற்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது.

பிரிவு-21

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி அலுவலக நேரத்தில் அல்லது அலுவலின் போது குடித்திருக்கக் கூடாது.

இதையெல்லாம் ஊழியர்கள் கடைபிடிக்கிறார்களா?

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா! சட்டம் சொல்வதென்ன?

     அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து.19.(1)(c) அமைப்புகள் மற்றும் சங்கங்கள் வைத்துக் கொள்ள உரிமை அளிக்கிறது.

     ஆனால் ஷரத்து 19(4) இன் படி ”இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்தின் மீது அக்கரை கொண்டு, சொல்லப்பட்ட உரிமையில் நியாயமான கட்டுப்பாட்டை விதிக்கக் கூடிய நடைமுறையிலுள்ள சட்டம் எதையுமோ அரசு இயற்றிய உட்கூறுகள் பாதிக்கக் கூடாது.

     இதை  P.N.Ramasamy Vs The Commissioner  of Coimbatore AIR 1968 (Masdras) 383 Per Ramakrishna J.- என்ற வழக்கில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

     O.K.Ghosh Vs.E.X.Joseph, AIR 1963 SC 812 என்ற வழக்கில் சங்கங்கள் அமைப்புகளுக்கு உரிமை கொடுக்கப்பட்ட உரிமை ஒரு உத்திரவாதமான உரிமை என கொள்ள முடியாது, தகுந்த காரணங்கள்: இருப்பின் அவை திரும்பப் பெறப்படும் என் தீர்ப்பளித்துள்ளது.

     தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 விதி-16 இன் படி எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி சங்கத்தில் அமைப்பில் உறுப்பினராக இருக்கக் கூடாது. விதி-22-A இன் படி அலுவலக நேரத்தில், அலுவலக வளாகத்தில் ஊர்வலம் கூட்டங்கள் நடத்தகூடாதென சொல்லப்பட்டுள்ளது.

மேலும் All India Bank Employees’s Association Vs. National Industrial Tribunal என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம், “ வேலைநிறுத்தம் என்பது அரசியலமைப்பு சட்டம் ஷரத்து-19-இன் படி அடிப்படை உரிமையில்லை, ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை குறிப்பிட்ட எல்லைக்குள் வெளிப்படுத்தலாம் எனவும், தங்கள் குறைகளை வேலைநிறுத்தல் என்ற உரிமையை கோரமுடியாது எனவும் தீர்ப்பளித்தது.

இறுதியாக!

எப்படியாவது அரசு வேலைக்கு செல்வது என பெரு முயற்சி எடுத்து சேர்ந்து, அரசின் அத்தனை பணப்பலன்களையும் பெற்று பணிக்கு வந்தது மக்கள் பணி ஆற்றவே. 2002ல் தமிழகத்தில் டெஸ்மா (Tamil Nadu Essential Services Maintenance Act (TESMA), 2002) போன்ற சட்டத்தை  இயற்ற அரசை தள்ளியது யார் என எண்ண வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீத அரசு ஊழியர்களுக்கு அரசு செலவிடும் தொகை 60 சதவீதத்துக்கும் மேல்.என்பதை நினைவுக்கூர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென்பதே மக்களின் விருப்பம்

மேலும், ஊழியர்கள், அலுவலர்கள் வரும் நேரம், செல்லும் நெரம், அலுவலர்கள் கள ஆய்வு செல்லும் இடம் நேரம்,என அனைத்து பணிகளைச் குறிப்பிடும் மாவட்ட அலுவல கையேடு(District Office Manual), அரசு ஊழியர் நடத்தை விதிகள்(the tamil nadu government servants' conduct rules, 1973), தமிழ்நாடு அரசு சார்நிலை ஊழியர்கள் பணி விதிகள்(tamilnadu government subordinate service rules) என ஒவ்வொரு துறைக்கும் உள்ள பணிவிதிகளை அனைவரும் தெரிந்து அதன்படி நடந்தால் அரசு இயந்திரம் சிறக்கும்

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

references::

1.     Classification of Employees-Government Order G.O.Ms.No. 296 Finance (Allowances) Department, dated 13-07-2009

2.     Tamilnadu Government Servants` Conduct Rules_K.Samivel

3.     THE FUNDAMENTAL RULES OF THE TAMIL NADU GOVERNMENT

4.     Budget Memorandum

5.     THE TAMIL NADU CIVIL SERVICES (DISCIPLINE AND APPEAL) RULES

6.     TAMIL NADU GOVERNMENT SERVANTS (CONDITIONS OF SERVICE) ACT, 2016

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com