எக்ஸ்கியூஸ்மீ... உங்களுக்கு சொந்த வீடா? வாடகை வீடா?

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வாடகை கொடுத்து குடியிருக்கும் நபருக்கே அந்த வீடு சொந்தம் என்ற சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறதா!
எக்ஸ்கியூஸ்மீ... உங்களுக்கு சொந்த வீடா? வாடகை வீடா?

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கென்று இதுவரை சட்ட உரிமைகள் எதுவும் கண்டடையப்படவே இல்லையா? இல்லை எனில்... ஏன்? ஏன்? ஏன்

மிக அதிக வாடகை கொடுத்து ஒரு வீட்டில் குடி இருந்தாலும் யாருக்கோ பயந்து கொண்டு வாழ்வதைப் போலான ஒரு நிலைமையை ஏற்படுத்தும் வீட்டு உரிமையாளர்களின் சர்வாதிகாரப் போக்கை கட்டுப்படுத்த சட்ட உரிமைகள் தேவையா இல்லையா? 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வாடகை கொடுத்து குடியிருக்கும் நபருக்கே அந்த வீடு சொந்தம் என்ற சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறதா! நடுத்தர குடும்பஸ்தர்களுக்கு தமது ஒட்டு மொத்த வாழ்நாளுக்கும் சேர்த்து தமக்கென்று ஒரே ஒரு சொந்த வீடு என்பது தான் வாழ்நாள் லட்சியம்... கனவு என்று சொல்லலாம், அப்படி கட்டிய வீட்டை விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டு மீண்டும் வாடகை வீட்டுக்கு குடியேறும் நிலை வந்தால் அந்த வாழ்வின் அர்த்தம் என்ன?!

வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு குடி இருப்பவர்கள் என்பதைத் தாண்டி இடைத்தரகர்கள் என்றொரு பிரிவு வாடகை வீடு தேடுபவர்களின் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறதே, இதை எல்லாம் முறைப்படுத்த சட்ட ரீதியாக எதுவும் செய்ய இயலாதா? அகஸ்மாத்தாக மனிதத் தன்மையும் கொஞ்சம் நேர்மையும் கலந்த வீட்டு உரிமையாளர்கள் அல்லது சட்ட நிபுணர்கள் இதற்கு பதில் அளிக்க முயற்சிக்கலாம்.

800 சதுர அடி வீட்டுக்கு 10000 ரூபாய் வாடகை அட்வான்ஸ் வீட்டு உரிமையாளர்களின் நோக்கம் போல அவர்களது மனநிலைக்குத் தக்க தீர்மானிக்கப்படும் , குறைந்த பட்சம் 50000 லிருந்து 1 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்ட தொகை, முகப்பேரில் உறவினர் ஒருவர் வீடு தேடிக் கொண்டிருந்தார் நகர சந்தடி அற்ற புறநகர் பகுதி வீடு ஒன்றிற்கே, 900 சதுர அடி வீட்டுக்கு 8000 ரூ வாடகை 80,000 ரூ அட்வான்ஸ் கேட்கப் பட்டது ,இந்த அட்வான்ஸ் தொகையை எந்த அடிப்படையில் நிர்ணயிக்கிறார்கள் என்று தெரியவில்லை, ரொம்பத் தெரிந்தவர்கள் என்றால் தொகை குறையுமாம், அறிமுகமற்றவர்கள் என்றால் 10 மாத வாடகையை அட்வான்ஸ் தொகையாகத் தர வேண்டியதாய் இருக்கும்.வாடகைக்கு வீடு தேடும் பலரும் இந்த அட்வான்ஸ் தொகையையே பெர்சனல் லோனில் தான் வாங்க வேண்டிய நிலையிலிருப்பார்கள், ஆக மொத்தம் வீட்டு வாடகையோடு இந்த பெர்சனல் லோன் டியூவும் மாதாந்திர செலவில் சேர்ந்து கொள்ளும்,

இன்னொரு சகிக்க முடியாத கஷ்டம், இடைத் தரகர்கள் இல்லாமல் வீடு வாடகைக்குக் கிடைத்தால் சரி இல்லையேல்; அவர்களுக்கு ஒரு மாத வாடகைத் தொகையை கமிஷனாகத் தர வேண்டும். சரி இப்படி கமிஷன் அடிக்கிறார்களே அதில் ஒரு நேர்மை, குறைந்தபட்ச நியாயம் இருக்குமா? என்றால் அதுவும் இல்லை, வீட்டு உரிமையாளர் நிர்ணயித்திருக்கும் வாடகைத் தொகையைக் காட்டிலும் இந்த இடைத் தரகர்கள் 500 அல்லது 1000 ரூ அதிகமாக சொல்லித் தான் வீட்டையே கண்ணில் காட்டுவார்கள்,

எங்களது ஏரியாவில்  400 சதுர அடிகள் கொண்ட சிங்கிள் பெட் ரூம் பிளாட் ஒன்று சென்ற மாதம் காலி ஆனது, முன்பு இருந்தவர்கள் அந்த வீட்டுக்கு கொடுத்து வந்த வாடகை 5000 ரூ ,வீட்டுக்கு வெள்ளை அடித்து புதுபித்து இருக்கும் அதன் உரிமையாளர் இப்போது அந்த வீட்டுக்கு நிர்ணயித்த வாடகைத் தொகை 7000 ரூ ஆனால் உரிமையாளர் இந்தப் பணியை ஒப்டைத்திருக்கும் இடைத்தரகர் அந்த வீட்டுக்கு நிர்ணயித்திருக்கும் வாடகைத் தொகை 8000 ரூபாய்.

இது தவிர குடிநீருக்கு மாதம் 500 ரூபாய், கரண்ட் யூனிட் ஒன்றிற்கு வாடகைக்கு குடி இருப்பவர்கள் மாத்திரம் 5 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை தீர்மாணிக்கிறார்கள், இதில் வீட்டு உரிமையாளர்கள் வைத்தது தான் சட்டம், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தது யூனிட்டிற்கு 5 ரூபாய்க்கு கீழ் வாங்குவதே இல்லை. அதன்படி பார்த்தால் ஜெ அறிவிப்பின் படி வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம், எனும் சலுகையை அனுபவிப்பவர்கள் பெரும்பாலும் சொந்த வீடு வைத்திருப்பவர்களும், வாடகைக்கு வீடு விட்ட புண்ணியாத்மாக்களும் தான். இதற்கெல்லாம் கேள்விமுறைகளே இல்லை. அப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதும் இல்லை.

வாடகைக்கு வீடு தேடும் போது, இடைத் தரகர்களின் சாகசப் பேச்சு வலையில் சிக்காமல் ஒரு வீட்டுக்கு இத்தனை வாடகை தான் தகும் என நியாயமான வாடகைக்கு குடி போக மக்களுக்கு ஆலோசனை தரும் மையங்கள் எதுவும் தமிழகத்தில் இது வரை உருவானதுண்டா!?அரசு நிர்ணயித்துள்ள மின்சார கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூ, அதை பொருட்படுத்தாமல் அல்லது அரசை மதிக்காமல் தான் யூனிட்டிற்கு 5 ரூபாய் அல்லது அதைவிட கூடுதல் தொகை வசூலிக்கப் படுகிறது எனும் போது, இது தண்டனைக்குரிய குற்றம் ஆகாதா? அரசாங்கத்தை அவமதிக்கும் செயல் ஆகாதா? இதற்கெல்லாம் என்ன வரைமுறைகள்?!

இந்தத் தொல்லைகளில் அலைக்கழிக்கப் பட்டு நொந்து போய் கட்டக் கடைசியாய் சொந்த வீடு இல்லை பிளாட் வாங்குவது என்று முடிவெடுத்தால் சிரமம் குறைந்து விடப் போவதில்லை, அதிகக் குடியிருப்புகள் கொண்ட ஃபிளாட்களில் தான் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பிச் செல்வோம். அங்கே மாதாந்திர மெயிண்டனன்ஸ் தொகை கண்டிப்பாக 2000 க்கு குறையாது, லோனில் வீடு வாங்கியிருந்தால அந்தத் தொகையோடு செலவுக் கணக்கில் இந்த மெயிண்டனன்ஸ் தொகையையும் சேர்த்து தான் கணக்கிட வேண்டியதாய் இருக்கும்.

ஆக மொத்தம் சொந்த வீடு என்று ஆகி விட்டால் செலவு குறையும் என்று ஆசுவாசப்பட்டுக் கொள்ள முடியாது. முன்பு வாடகை வீட்டில் முறைவாசல் செய்பவர்களுக்கும், வீடு பெருக்கி, பாத்திரம் கழுவ வருகிறவர்களுக்கும் கொடுக்கும் தொகை போக இப்போது ஜிம், பார்க், டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர், மெடிக்கல் சாப் வசதிகள் என்று ஃபிளாட்டில் அழ வேண்டியதாய் இருக்கும். இத்தனைக்கும் கூரை நமக்கில்லை, கீழே தரை தளமும் நமக்கில்லை. பாண்டி விளையாட்டில் கோடு கிழிப்பதைப் போல துண்டு துண்டாய் கோடு கிழித்து வைத்திருப்பார்கள், கார் பார்கிங் என்று அதற்கும் லட்சக் கணக்கில் அழுது விட்டு மூச்சுக் காட்டாமல் இருக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் ஒரு தேர்ந்த சொந்த ஃபிளாட்வாசி .

இதைக்காட்டிலும் சிரமம் ஒன்றுள்ளது, வாடகை வீட்டில் குடி இருப்பவர்களுக்கு இடையிலான நட்புறவு, நீ யாரோ! நான் யாரோ! என்பதெல்லாம் சாதாரணம், பழைய குடித்தனக்காரர்கள் புதிதாகக் குடி வருபவர்களை எதிரிகளைப் போல அல்லது நாங்கள் இங்கே பல வருடங்களாய் இருக்கிறோம்... நீ முந்தா நாள் மழையில் நேற்று முளைத்த காளான்! ரீதியில் எல்லாம் தெரிந்த ஏகாம்பர தொனியில் தான் கண்ணெடுத்துப் பார்க்கிறார்கள், இவர்களுக்கிடையே நல்ல நட்பு நீடிக்கவோ அல்லது முளைவிடவோ முடியுமா?

பழகும் முறை ரொம்பத் தான் பாழ்பட்டுக் கிடக்கிறது, எப்போதும் நம்மை யாராவது ஏமாற்றி விடுவார்களோ என்ற பயம், ஜாக்கிரதை உணர்வு நொடிக்கொரு முறை மண்டையில் அலாரம் அடிக்குமோ என்னவோ! யாரும் யாரோடும் சுமுகமாய் பழகுவதே இல்லை, வெளிப் பகட்டுப் பேச்சுக்கள் எத்தனை நிமிடங்களுக்கு! 

சரி போனாப் போகுது, யாரும் எப்படியும் இருந்து விட்டுப் போகட்டும். நமக்கு சொந்த ஃபிளாட் ஆயாச்சு, இனி என்ன கவலைன்னு கொஞ்சம் உட்கார்ந்து மூச்சு வாங்கி விட கூடாது, மாச செலவுன்னா அது ஹவுசிங் லோன் கட்றதும் வீட்டு வாடகை, தண்ணி பில், கரண்ட் பில் கட்டுவதோடு முடிந்து விடுகிறதா என்ன? இல்லையே, இரவில் தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... உங்கள் குழந்தை படுத்திருக்கும் பொசிஸனில் ஏதோ ஒரு கணத்தில் திடீரென்று அதற்கு கழுத்து சுழுக்கி விடுகிறது! இதென்ன கிராமமா சுழுக்கெடுப்பவர்களைத் தேடிக் கொண்டு ஓட?! இல்லாவிட்டால் வீட்டுக்கு வீடு சுழுக்கெடுக்கவென்றே அனுபவமிக்க பாட்டிகள் தான் இருக்கிறார்களா? தனிக்குடும்ப பேரவஸ்தைகளில் மாட்டிக் கொண்டவர்களால் தான் இந்த தருணத்தின் பேரவஸ்தையை மிக நன்றாக உணர முடியும். வேறு வழியே இல்லை குழந்தை வலியில் கதறும் கதறல், பெற்றவர்களான நம்மை குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடுராத்திரி, நடுப்பகல் என்றெல்லாம் பார்க்காமல் டாக்டர்களிடம் ஓட வைக்கும்.  ,டாக்டர் குழந்தையைத்  தொட்டுக் கூடப் பார்த்திருக்க  மாட்டார், ஆனால் கன்சல்டிங் கட்டணம் 500 ரூ க்கு குறையின்றி வாங்கி விடுவார். இல்லையேல் அவர் திறமையான டாக்டர் இல்லையென்றாகி விடுமாம்! மருத்துவமனையையும் சும்மா சொல்லக் கூடாது இன்டீரியர் டெகரேசன் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சில் மெயிண்டெயின் செய்திருப்பார்கள். அதற்கும் சேர்த்துத் தான் கன்சல்டிங் கட்டணம்  வாங்குகிறார்களோ என்றிருக்கும்.

என்னத்தை சொல்ல இதோடு நிறுத்திக் கொள்ளலாம்... ஏனெனில் நாம் எத்தனை விவாதித்தாலும் மேலே சொன்ன விசயங்கள் எதிலும் எந்த மாற்றமும் வந்து விடப் போவதில்லை. மோடியின் கருப்புப் பண ஒழிப்பு போராட்டத்தின் பின்னும் இதே தான் மாறா நிலை.

மாநகரங்களைப் பொறுத்தவரை சொந்த வீடோ... வாடகை வீடோ! எதுவானாலும் செலவுகள் சாமானியர்களின் மென்னியை முறித்துக் கொண்டு அமுக்கும் நிலையில் தான் எப்போதும் இருக்கின்றன. 
கையில வாங்கினேன்...பையில போடல; காசு போன இடம் தெரியல...” என்று பழைய பாடல் ஒன்றுண்டு.

அந்தக் கதை தான் இப்போதும் பலருக்கு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com