மயிலால் இணையதளங்களில் வில்லங்க விமரிசனத்தில் மாட்டிக் கொண்ட ராஜஸ்தான் நீதிபதி!

மயிலின் இந்த சுத்த பிரம்மச்சரியத்தால் தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது குழலில் மயிற்பீலி சூடி கெளரவப் படுத்தி இருக்கிறார். என்று தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் கருத்துச் சொல்லி இருக்கிறார்.
மயிலால் இணையதளங்களில் வில்லங்க விமரிசனத்தில் மாட்டிக் கொண்ட ராஜஸ்தான் நீதிபதி!

நேற்று முதல் ராஜஸ்தான் நீதிபதி மகேஷ் சந்த் சர்மா ‘இந்திய தேசியப் பறவையான மயில் பற்றி தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் கடுமையான விமரிசனத்துக்கு உள்ளாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது. நீதிபதி அப்படி என்ன சொன்னார்? அதன் பின்னணி என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்;

பின்னணி:

பசுவை தேசிய விலங்காக மத்திய-மாநில அரசுகள் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பசுவைக் கொல்வோருக்கு அளிக்கப்படும் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்த் சர்மா பரிந்துரை செய்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அரசால் பராமரிக்கப்பட்டு வரும் கோசாலைகளில் போதிய கவனிப்பின்மை காரணமாக நூற்றுக்கணக்கான பசுக்கள் கடந்த ஆண்டு உயிரிழந்தன. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்ததையடுத்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்த் சர்மா தீர்ப்பளித்தார். அதில் தெரிவித்திருப்பதாவது:

ஹிந்து நாடான நேபாளத்தில், தேசிய விலங்காகப் பசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் கால்நடை வளர்ப்பை அடிப்படையாகக் கொண்ட விவசாய நாடாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 48 மற்றும் 51ஏ (ஜி) ஆகிய பிரிவுகளில், பசுவுக்கு சட்ட ரீதியில் அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கையை மாநில அரசுதான் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலரும், அட்வகேட் ஜெனரல் ஆகியோரே பசுவுக்கு சட்டரீதியிலான பாதுகாவலர்களாகிறார்கள் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்ப்பின் தொடர்ச்சியாக, மாநில அரசுக்கு நீதிபதி சர்மா சில யோசனைகளையும் முன்வைத்தார். அதில் அவர், '1995-ஆம் ஆண்டைய ராஜஸ்தான் கால்நடை விலங்குகள் சட்டத்தில் பசுவை கொல்வோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்கும் வகையில், அந்தச் சட்டத்தில் ராஜஸ்தான் அரசு திருத்தம் கொண்டு வர வேண்டுமென எதிர்பார்க்கிறேன்' என்றார். 

இந்த உத்தரவு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு நீதிபதி சர்மா அளித்த பேட்டியில், 'எனது உத்தரவுகளை பரிந்துரைகளாகவே பார்க்க வேண்டும்; யாரையும் இது கட்டுப்படுத்தாது. பசுவைக் கொல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனது ஆன்மா தெரிவிக்கிறது. இதே கருத்தைத்தான் உங்களது ஆன்மாவும், அனைவரின் ஆன்மாவும் தெரிவிக்கும் என்று கருதுகிறேன். சட்டத்தின் மூல ஆதாரமே மதம்தான். பசுவைக் கொல்வதை விட, கொடிய குற்றம் வேறு எதுவும் கிடையாது. பசு என்பது நமது தாய் போன்றது. பல்வேறு நோய்களில் இருந்தும் பல பேரின் உயிர்களை பசு காத்து வருகிறது' என்றார்.

அறிவியலைப் பொய்யாக்கும் வித்யாசமான பரிந்துரை...

இதோடு முடிந்து விடவில்லை அவரது பரிந்துரைகள்; மயில் நமது தேசியப் பறவையாக அறிவிக்கப் பட்டிருப்பதற்கு காரணம் அது பெண் மயிலோடு கலவியில் ஈடுபடுவது இல்லை. ஆண் மயிலின் கண்ணீரைக் குடித்து தான் பெண் மயில்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. மயிலின் இந்த சுத்த பிரம்மச்சரியத்தால் தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது குழலில் மயிற்பீலி சூடி கெளரவப் படுத்தி இருக்கிறார். என்று தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் கருத்துச் சொல்லி இருக்கிறார். இதைப் பற்றி வேறொரு ஊடகவியலாளர் இப்படிச் சொல்லி இருக்கிறீர்களே? இது அறிவியலுக்கு அப்பாற்பட்ட செயல் அல்லவா? இதை எப்படி நிரூபிப்பீர்கள்? இணையதளங்களில் உங்களது கருத்து தான் நேற்று முதலே வைரலாகி அதிகம் விமரிசிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்று  கேள்வி எழுப்ப;

அதற்கும் அசராமல்;  என்னால் மத ரீதியாக சான்று காட்ட முடியும் என்று பதில் அளித்திருக்கிறார்.

இத்தனை களேபரங்களும் பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரிய அவரது பரிந்துரையால் வந்தவை.

தமது பரிந்துரையை மறுக்கத் தோன்றாத நீதிபதியின் பதிலுரையை இங்கே காணலாம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com