சர்ச்சைகளின் சிகரமாக விளங்கும் நீட் தேர்வு என்றால் என்ன?

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான 'நீட்' பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் மே 7ம் தேதி நடைபெற்றது. 
சர்ச்சைகளின் சிகரமாக விளங்கும் நீட் தேர்வு என்றால் என்ன?

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான 'நீட்' பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் மே 7ம் தேதி நடைபெற்றது.  மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) நடத்திய இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 11 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் (?) நாடு முழுவதும் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் 'நீட்' பொது நுழைவுத்தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

கடந்த ஆண்டு அவசரச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே கடந்த கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 'நீட்' தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

இந்நிலையில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் இரண்டு சட்ட மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத் தர மறுத்தது. மேலும் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.

10 மொழிகளில் தேர்வு: ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், அஸாமி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா ஆகிய 10 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. அடுத்த ஆண்டில் இருந்து உருது மொழியிலும் தேர்வு நடைபெறும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என நான்கு பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.

நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள்? இதற்கு பதில் அதுவும் சரியான புள்ளிவிவரம் தெரிய வந்தால் நிச்சயம் நமக்கு அது பேரதிர்ச்சியாகவே இருக்கும்.

2006-2016ம் ஆண்டுகளில், நீட் தேர்வு மூலமாக மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தால், தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 0.7%மும், தனியார் மருத்துவக் கல்லுரிகளில் 1.1 சதவீதம் மட்டுமே சேர்ந்திருக்க முடியும் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

அதாவது, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 29,925 சேர்க்கை இடங்களில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் வெறும் 213 இடங்களை மட்டுமே பெற்றிருக்கலாம். இதை விட, தனியார் மருத்துவக் கல்லுரிகளில் உள்ள 6,132 இடங்களில் 65 இடங்களை மட்டுமே பிடித்திருக்க முடியும் என்கிறது அந்த ஆய்வு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அளித்த பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது இப்போதைய புள்ளி விவரம் இல்லை. 2006 - 2016ம் ஆண்டுகளில் கிடைக்கப் பெற்ற புள்ளி விவரங்களாகும்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலை என்றால், தற்போது இன்னும் இந்த நிலை மோசமாகவே இருக்கும். ஏன் எனில், கடந்த 30 ஆண்டுகளாக தமிழக பள்ளிக் கல்விப் பாடப் புத்தகங்கள் செழுமையாக்கப்படவில்லை என்ற கல்வியாளர்களின் குற்றச்சாட்டை இங்கே நினைவு கூர்ந்தால் நிலைமை என்னவாகும் என்பதை எளிதாகவே புரிந்து கொள்ளலாம். இதில் கிராமப்புற மாணவர்களின் நிலையை குறிப்பெடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படப் போவது தமிழக கிராமப்புற மாணவர்கள்தான். ஆனால், இதற்குக் காரணம், அவர்களது திறமையின்மையா.. அறிவின்மையா? நிச்சயம் இல்லை. தமிழக அரசு அவர்களுக்காக தொகுத்து வழங்கியுள்ள பாடத்திட்டத்தின் இயலாமை தான். குற்றம் செய்தது ஒருவர், தண்டனை மற்றொருவருக்கு.

மதிப்பீடு எவ்வாறு?: ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்குத் தேர்வு நடைபெறும். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்தால் 4 மதிப்பெண் வழங்கப்படும். அதே சமயம், தவறான பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் (Negative marking). . ஒரே கேள்விக்கு பல பதில்களை அளித்தாலும், அது தவறான பதிலாகவே கருதப்படும்.

ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும். இடஒதுக்கீடு பெறும் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதுக்குள் மூன்று முறையும், பிற மாணவர்கள் 25 வயதுக்குள் 3 முறையும் நீட் தேர்வை எழுத முடியும்.

தேர்வு எதற்காக?: நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்துக்கும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.

இதில் தவறு நடந்தது எங்கே?
தமிழக அரசு, கடந்த 30 ஆண்டுகளாக பள்ளிப் பாடத் திட்டத்தை செழுமைப்படுத்தத் தவறி விட்டதாகக் கல்வியாளர் பி.பி. பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றம்சாட்டியிருந்தார். இது முற்றிலும் உண்மை என்பது இந்த நீட் தேர்வு மூலம் நாட்டுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் அரசுப் பள்ளிகளைத் திறக்க அம்மாநில அரசுகள் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகள் மாணவர்கள் இல்லாததால் மூடப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில், பள்ளிப் பாடத் திட்டங்களை மாற்றி அமைத்து, செழுமைபடுத்தாமலேயே, தமிழகத்தில் நீட் தேர்வை எழுத அனுமதித்தது தமிழக அரசின் தவறாகவே பார்க்கப்படுகிறது.

பள்ளிக் கல்வித் தரத்தை உயர்த்தாமல், பாடத் திட்டத்தை செழுமைப்படுத்தாமல், நீட் தேர்வை எழுதும் இக்கட்டான நிலைக்கு தமிழக மாணவர்களை இட்டுச் சென்றிருப்பது நமது இயலாமையையேக் காட்டுகிறது.

இந்த நிலையில்தான், பள்ளிக் கல்விப் பாடத் திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இதனால் பள்ளிக் கல்விப் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருப்பதை அரசு மிக தாமதமாகவே உணர்ந்துள்ளது. அதற்கு அபராதம் ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு.

தேர்விலும் சர்ச்சை
நீட் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. மத்தியப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படுவதால் அதில் படித்தவர்களுக்கு தேர்வுகள் எளிதாக இருக்கும். அதே சமயம், தமிழக அரசுப் பள்ளியில் சமச்சீர் அல்லது தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வெழுத வேண்டும் என்பதால், அதற்கான பயிற்சி மையங்களில் படித்து தேர்வெழுதியுள்ளனர். இதனால், அவர்களுக்கு நீட் தேர்வு சிரமத்தையே ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, 10 மொழிகளில் நடத்தப்பட்ட நீட் தேர்வில், ஒவ்வொரு மொழி வினாத்தாளும் ஒவ்வொரு வகையில் அமைந்துள்ளது. ஹிந்தி வினாத்தாளும் ஆங்கில வினாத்தாளும் எளிதாக இருந்ததாக பெங்காலி மொழியில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் குற்றம்சாட்டிய நிலையில், ஆங்கில மொழி வினாத்தாளை விட தமிழ் மொழி வினாத்தாள் எளிதாக இருந்ததாக ஆங்கிலத்தில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுமைக்குமான பொதுத் தேர்வு ஒன்றில், 10 விதமான வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதும், அது பற்றி சிபிஎஸ்இ நிர்வாகம் முன்னதாக எந்த அறிவிப்பையும் செய்யாததும், இதுவரை விளக்கம் அளிக்காததும் புதிய சர்ச்சையாக உள்ளது.

இதனால் தமிழகத்துக்கு என்ன பாதிப்பு?
தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெற்றால் சமூக நீதிக்கும், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. தமிழகத்தில் இன்றைய நிலையில், புதிதாக தொடங்கப்படவுள்ள புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி உட்பட 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில், அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கு 15% வழங்கியது போக 2445 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படவுள்ள 1198 இடங்கள் என மொத்தம் 3643 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் ஒற்றைச்சாளர முறையில்  நிரப்பப்பட உள்ளன. அதேபோல், அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1330  பல் மருத்துவ இடங்களுக்கும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில்  தான் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. அதில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட இடங்களை  கிராமப்புற, ஏழை மாணவர்கள் தான் கைப்பற்றி வந்தனர். சாதாரண கூலித் தொழிலாளியின் பிள்ளைகள் கூட மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது என்றால், 2007ஆம் ஆண்டில் மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது தான். ஆனால், இப்போது தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகள் அறிமுகப்படுத்துவதன் மூலம் 2007ஆம் ஆண்டுக்கு முன்பிருந்ததை விட மிக மோசமான அளவில் தமிழக கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு மத்திய அரசால் பறிக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் மாநிலப்பாடத் திட்டத்தின்படி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 9 லட்சம் பேரில் 4 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான உயிரியல் மற்றும் விலங்கியல் பாடம் படித்தவர்கள். அதேநேரத்தில் மத்திய பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 12,000 பேரில் 4000 பேர் மட்டுமே உயிரியல் மற்றும் விலங்கியல் பாடம் படித்தவர்கள். ஆனால், மொத்தமுள்ள 3623 மாணவர் சேர்க்கை இடங்களில் 3,300 இடங்களை மத்தியப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தான் பிடிக்கப் போகிறார்கள். மாநிலப் பாடத்திட்டத்தில் உயிரியல் பாடம் படித்த 4 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டினருக்குக் கூட மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புக் கிடைக்கப்போவதில்லை. இதைவிட சமூக நீதிக்கு தீங்கு இழைக்க முடியுமா?

தமிழகத்தில் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.25,000 கோடி ஆகும். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை எப்படி சேர்ப்பது என்பதை மாநில அரசு தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இதை மத்திய அரசு  தீர்மானிப்பதை எப்படி ஏற்க முடியும்? இதைவிடக் கொடுமையான அதிகார அத்துமீறல் இருக்க முடியாது. இந்த அத்துமீறலைத் தடுப்பதற்காகத் தான் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான  சட்டம் பேரவையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிப்ரவரி ஒன்றாம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு 90 நாட்களாகியும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறமுடியவில்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்த சட்டத்துக்கு ஒப்புதலைப் பெற தவறிய தமிழக அரசால், ஏராளமான கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவு தகர்க்கப்பட்டுள்ளது.

திறமைக்கு முன்னுரிமையா?
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்கள் படிப்பது, திறமையான மருத்துவர்களை உருவாக்க மட்டுமே என்றும், திறமைக்கு முன்னுரிமை கொடுப்பதை தமிழகம் ஏன் எதிர்க்க வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்பலாம். நாடு முழுவதும் திறந்து பரந்த வாய்ப்பு வழங்குவது நம் மாநில மாணவர்களுக்கும் நல்லதுதானே என்று கேள்வி எழுப்பலாம்.

இங்கே திறமை என்பதை மாணவர்களின் அறிவைக் கொண்டு அளந்தால், எந்த மாநில மாணவர்களைக் காட்டிலும் தமிழக மாணவர்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டத்தில்தான் பழுது என்றால், அதை செழுமையாக்கிய பிறகே நீட் தேர்வை நடத்தியிருக்க வேண்டும். இது இரண்டும் இல்லாமல், நட்டாற்றில் நம் மாநில மாணவர்களின் எதிர்காலத்தை குப்புறத் தள்ளுவது சரியல்ல.

தமிழகத்தில் தற்போது பொறியியல் கல்லூரிகள் போல மாணவர் சேர்க்கையை விட, சேர்க்கை இடங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் இதுபோன்ற நீட் தேர்வை நடத்தி, மருத்துவக் கல்லூரிகள் குறைவாக இருக்கும் மாநில மாணவர்களுக்கும் நாம் வாய்ப்பு வழங்குவதில் எந்த தடையும் இல்லை. சில ஆயிரம் மாணவர் சேர்க்கை இடங்களை வைத்துக் கொண்டு, அவற்றையும் நீட் என்ற பெயரில் வெளி மாநில மாணவர்கள் அபகரித்துக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்துவது சரியல்ல என்றுதான் தமிழகம் இதுநாள் வரை நீட் தேர்வை எதிர்த்தது.

தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டு, தமிழகத்தில் தற்போதுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு சேர்க்கை அளிக்காமல், பிற மாநில மாணவர்களுக்கு சேர்க்கை அளிப்பதால் தமிழகத்துக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் மாநிலங்களின் வரிசையில் மத்தியப் பிரதேசம், தமிழகம் போன்ற ஒருசில மாநிலங்களே முன்னிலை வகிக்கின்றன. இதனால், குறைவான மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலங்களுக்கு இது வரப்பிரசாதமே. அவர்கள் நீட் தேர்வை வரவேற்பார்கள். ஆனால், தமிழக மாணவர்களுக்குத் தேவையான இடங்களை வெளி மாநில மாணவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் நிலை உருவாகும் என்பதால்தான் தமிழகம் அதை எதிர்த்து வருகிறது.

வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்து முடித்தால், அவர்கள் தமிழகத்தில் பணியாற்ற முடியாது. அவர்களது சொந்த மாநிலங்களுக்குச் சென்று பணியாற்றவே விரும்புவார்கள். அப்படி இருக்கும் போது அடுத்த சில ஆண்டுகளில், தமிழகத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும்.

சரி. வேறு மாநில மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவர்களாக பணியாற்றினால்... இது மேலும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும், வேறு எந்த தொழிலைக் காட்டிலும், மருத்துவத் தொழிலில் மொழி என்பது மிகவும் முக்கியம். கிராமப் புறங்களில் வெளி மாநில மாணவர்கள் மருத்துவம் பார்ப்பதும், சிகிச்சை அளிப்பதும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு நிலைமையை மோசமாக்கும்.

இவ்வளவு சர்ச்சையை தாண்டி, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இத்தனை நாள் தமிழகம் எதற்காகப் போராடி வந்ததோ, அதற்கு வலு சேர்க்கும் வகையில்தான், சிபிஎஸ்இ நிர்வாகமும் பெங்காலி மாணவர்களுக்கு கடினமான வினாத்தாள், குஜராத் மாணவர்களுக்கு எளிதான வினாத்தாள், ஹிந்தி வினாத்தாளில் அதிகமான கேள்விகள் என பல வழிகளில் வினாத்தாள்களை தயாரித்து, இதில் அரசியல் உள்நோக்கம் இருக்குமோ என்ற மேலும் ஒரு சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

இதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோஷம் மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com