மாறு(தலை) பெற்ற ரேணுகா தேவி!

விதர்ப நாட்டின் மன்னன் விஜரவதன் தவவாய் தவமிருந்து பெற்ற மகள் ரேணுகா தேவி.
மாறு(தலை) பெற்ற ரேணுகா தேவி!

விதர்ப நாட்டின் மன்னன் விஜரவதன் தவவாய் தவமிருந்து பெற்ற மகள் ரேணுகா தேவி. அவ்வாறு தவமிருந்து பெற்ற புதல்வியை சீரும் சிறப்புமாக வளர்த்து வருகையில் சப்தரிஷிகளுள் ஒருவரான ஜமதக்னி முனிவர் விஜரவத மன்னனிடம் அவர் மகளை மணமுடித்து தருமாறு கேட்டார். சகல செளபாக்கியத்துடன் ஓவியமாக வளர்த்த பெண்ணை ரிஷி ஒருவருக்கு மணமுடிப்பதா என்று மனத்துக்குள் விஜரவதன் நினைத்தாலும், ஜமதக்னி முனிவரின் கோபம் பிரசித்தி பெற்ற ஒன்றாததால் அவர் சாபத்துக்கு ஆளாவதை விட மகளை மணமுடித்துத் தருவதே சாலச் சிறந்தது என முடிவெடுத்து திருமணத்திற்குச் சம்மதித்தார். தியானம், தவம் என்றிருக்கும் ஒரு ரிஷிக்கு கோபம் எப்படி வரலாம் என்று நினைக்கத் தோன்றுகிறதா? ஜமதக்னி முனிவரின் பூர்விகம் அறிந்தால் அது தெளிந்துவிடும்.

மன்னன் காதி சந்திர வம்சத்தில் பிரசித்தி பெற்ற ஒரு மன்னன் மன்னன். அவனது தாய் தேவலோக பேரழகி ஊர்வசி. தந்தை மன்னன் புரூரவசுவு. ஆற்றலும் அழகும் வாய்ந்த காதிக்கு சத்தியவதி என்ற மகள் இருந்தாள். அவளை ரிஷிகன் என்ற பிராமணன் திருமணம் செய்து கொண்டான். சிறிது காலத்துக்குப் பிறகு, சத்தியவதி தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். சத்தியவதியின் தாய்க்கும் அதே ஆசை தோன்றியது. இருவரும் ஒரே சமயத்தில் கர்ப்பம் தரிக்க, ரிஷிகன் இருவருக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்பினான். தியானம் செய்து முடித்து அதன் பின் தயாரிக்கப்பட்ட விசேஷ சக்தி கொண்ட பாயாசம் தயாரித்து அதை இரண்டு பாகமாகப் பிரித்து முதல் பாகத்தைத் தன மனைவிக்கும், இரண்டாவது பாகத்தை அவள் தாயும் குடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நீராடச் சென்று விட்டான்.

அச் சமயத்தில் சத்தியவதியின் தாய் ரிஷிகன் தன்னுடைய மனைவிக்குத் தான் அதிக சக்தியுள்ள பானத்தைத் தந்திருப்பான் எனவே அதைப் பருகிவிடலாம் என்று எண்ணி அவ்வாறே செய்துவிட்டாள். தனக்குரிய இரண்டாம் பாகத்தைத் தன் மகளுக்கும் தந்துவிட்டாள். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ரிஷிகன், உண்மை அறிந்து என்ன செய்வது என்று திகைத்துவிட்டான். காரணம் சத்தியவதிக்கு உரிய பாகத்தில் பிராமண மந்திரம் ஏற்றியதால் அவளுக்குப் பிறக்கப் போகும் மகன் பிரம்ம ஞானியாகப் பிறப்பான். அவள் தாய்க்கு க்ஷத்ரிய மந்திர உருவேற்றிய பாகத்தைத் தந்திருந்தான். ஆனால் இப்போது அவர்கள் வரிசை மாற்றி அருந்திவிட்டதால், சத்தியவதிக்கு  பிறக்கும் மகன் கொடிய அரச குணங்களோடு விளங்குவான் என்று கூறி வருந்தினான். இதற்குப் பரிகாரமே கிடையாது என்று சத்தியவதி கேட்டபோது,  இந்த மந்திரத்தின் வீரியத்தைக் குறைக்க இரண்டு தலைமுறையாக அந்த கோபம் பிரிக்கப்பட்டுவிடும் என்று சொன்னான். அதே போல சத்தியவதிக்கு ஜமதக்னி என்னும் மகன் பிறந்தான். ஜமதக்னியின் அவர் மகன் பரசுராமர் இருவரின் கோபமும் உலகறிந்த ஒன்றானது.

அத்தகைய ஜமதக்னி ரிஷியை மென்மனதுடைய ரேணுகா தேவிக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டனர். அரண்மனை துறந்து மிகவும் எளிமையாக தம் கணவரின் பின்னே ஆசிரமக் குடிலில் வாழப் புறப்பட்டாள் ரேணுகா. அவர்கள் இல்வாழ்க்கை இனிதே அமைந்தது. ஐந்து மகன்களை பெற்றெடுத்தாள் ரேணுகா. கற்புக்கும் கணவர் மீதான பக்திக்கும் ரேணுகா பெயர் பெற்றவள். கணவனின் குறிப்பறந்து அனைத்து வேலைகளையும் மிகவும் சிரத்தையுடன் செய்து கண் போன்று குடும்பத்தைப் பாதுகாத்து வந்தார். தான் அரசர் மகள் என்று ஒருபோதும் இருமாந்து இருந்தவளில்லை. அவளுடைய கற்பின் சிறப்பாக அபூர்வமானதொரு சித்தி அவளுக்குக் கிடைத்திருந்தது. களி மண்ணால் அவள் பல கைவினைப் பொருட்களைச் செய்ய வல்லவள். தானே வடிவமைத்த மண் பாண்டத்தை தினமும் தாமரைக் குளக்கரைக்கு எடுத்துச் செல்வாள் அப்பெண் தாரகை. தன்னுடைய மாசில்லாத பதிவிரதா சக்தியின் துணை கொண்டு சுடப்படாத களிமண் பானையில் தண்ணீர் எடுத்தாலும் அது ஒழுகாது. பச்சை மண்ணில் செய்யப்பட்ட அந்த குடத்தில் தண்ணீர் பிடித்தாலும் அது நீரில் கரையாது. சுட்ட பானை போல் அப்படியே தண்ணீரை பிடித்துக் கொள்ளும். ஒரு துளி நீரும் வெளியில் தெறிக்காது. பானையும் சிறிதும் கரையாது. இது மற்றவர்களுக்கு அதிசயமாக இருக்கலாம். ஆனால் ரேணுகாவுக்கு இது மிகச் சாதாரணம். தினம் தினம் புதுப் பானையை தன் கரங்களால் வனைந்து நீர் பிடித்து ஆசிரமத் தேவைகளுக்கு அதையே பயன்படுத்து வருவாள்.

வழக்கமாக ஒரு நாள் அதிகாலை எழுந்து தினமும் செல்லும் அக்குளத்தருகே ஒரு அதிசயக் காட்சியைப் பார்த்தாள் ரேணுகா. அழகிலும் அழகனான ஒரு கந்தர்வன் தன் வானவூர்தியில் பறந்து கொண்டிருந்தான். மயக்குறும் தோற்றத்துடன் ஒளிவெள்ளமாக அவன் இருப்பைக் கண்ட ரேணுகா செயலற்றுப் போனாள். ஒரு கணம் தன்னை மறந்தாள், உலகை மறந்தாள், தான் ஒரு ரிஷி பத்தினி என்பதை மறந்தாள், அவள் நினைவைத் திருடிய அக்கந்தர்வனின் அழகில் புற உலகம் துறந்தாள். ஆனால் அடுத்த கணத்தில் சுதாரித்துக் கொண்டு, என்ன இது ஏனிப்படி என்று குளத்தில் இறங்கி வழக்கம் போல நீராடி விட்டு, புத்தம் புது மணல் குடத்தை தயார் செய்து அதில் நீர் முகர்ந்தாள். ஆனால் அவள் அதிர்ச்சியடையும் விதமாக அந்தப் பானை நீரில் கரைந்தது. மறுபடியும் மனத்தை ஒருமுகப்படுத்தி மற்றொரு குடத்தை தயார் செய்து அதில் நீர் நிறைக்க முயன்றாள். அந்தோ பரிதாபம். அவளுடைய முயற்சிகள் யாவும் வீணானதேயன்றி குடத்தை அவள் முன்பு போல் வனைய முடியவில்லை. என்ன செய்வது தண்ணீர் இல்லாமல் வீடு திரும்புதல் சாத்தியமில்லை, என்று திகைத்து அங்கேயே யோசனையி ஆழ்ந்து அமர்ந்துவிட்டாள்.

குளக்கரைக்குச் சென்று இத்தனை நாழிகையாகியும் மனைவி வீடு திரும்பவில்லையே என்னவாயிற்று என்று யோசித்த ஜமதக்னி முனிவர் நடந்தவற்றை தன் ஞான திருஷ்டி மூலம் அறிந்து கொண்டார். உடனடியாக சினம் பெற்றார். மற்றொரு ஆடவனை மனத்தாலும் நினைக்காத ஒரு பதிவிரதையின் மனத்துக்குள் நொடி நேர சபலம் எப்படி விழையலாம் என்று ஆத்திரப்பட்டார். தன்னுடைய ஐந்து மகன்களையும் அழைத்து உடனடியாக தாயின் தலையை கொய்துவருமாறு பணித்தார். ஆனால் ஒருவரும் அதற்கு இசையவில்லை. கோபம் கொண்ட முனிவர் அவர்கள் நால்வரையும் கல்லாக மாறும்படி சபித்துவிட்டார். ஐந்தாவது மகனான பரசுராமன் மட்டும் தந்தையின் கட்டளையை ஏற்றுக் கொண்டான். ஆனால் பதிலாக இரண்டு வரத்தைக் கேட்டான். சரி தருகிறேன் முதலில் அவள் தலையை கொய்துவிட்டு செய்தி சொல் என்று அனுப்பி வைத்தான். 

குளத்தங்கரையில் துயருடன் முகம் வாடி களைப்புற்ற ரேணுகா தேவி செய்வதறியாது அங்கேயே சிலையாக நின்றுவிட, அவளைப் பார்த்த வெட்டியானின் மனைவி அவளை தன் வீட்டுக்கு வந்து இளைபார வருமாறு கேட்டுக் கொண்டாள். அச்சத்திலும், மனத் துயரிலும் பீடிக்கப்பட்டிருந்த ரேணுகா தேவி எதுவும் சொல்லாமல் அவள் பின்னால் சென்றாள். தாயை தேடிக் கொண்டிருந்த பரசுராமன் இக்காட்சியை கண்டு அவர்களை வேகமாக நெருங்கி வந்தான். கையில் கோடரியுடன் மகன் வருவதைப் பார்த்த ரேணுகா அமைதியாகவே இருந்தாள். ஆனால் உடன் இருந்த வெட்டியானின் மனைவி பதற்றத்துடன் அவனை வழி மறித்தாள். பெற்ற தாயை கொல்லத் துணிந்துவிட்டாயே, உனக்கு எப்படி மனம் வந்தது, இங்கிருந்து போய் விடு, நான் உயிருடன் இருக்கும்வரை நீ இதைச் செய்யலாகாது என்று உரக்கக் கூறவே, பரசுராமன் எதுவும் பேசாமல் அவள் தலையை முதலில் கொய்துவிட்டான். அடுத்து ரேணுகா தேவியை அணுகி ஒரே வீச்சில் அவள் தலையையும் வெட்டி எறிந்து தாயின் குருதியொழுகும் கோடரியுடன் நேராக தகப்பனிடம் வந்து சேர்ந்தான். அவன் செயலில் மகிழ்ச்சியடைந்த ஜமதக்னி முனிவர் அவனிடம் நீ வேண்டும் வரங்களை கேள் தருகிறேன் எனச் சொல்ல, அவன் கல்லாகச் சபிக்கப்பட்ட தனயங்கள் மீண்டும் உயிர் பெறவும், வெட்டி எறியப்பட்ட தன் தாயின் தலையை இணைத்து மீண்டும் உயிர்த்தெழச் செய்யும்படியும் வேண்டிக் கொண்டான்.

பரசுராமனின் சமயோசித புத்தியை வியந்த ஜமதக்னி அவனுக்கு அவ்வரங்களைத் தந்தார். உடனடியாக செயல்பட்டு தன் சகோதரர்களை மீட்டெடுத்து, குளத்தங்கரைக்கு ஓடினான். அங்கு அந்த வெட்டியானின் சிறு குடிலில் தலை வேறு உடல் வேறாக கிடந்த இரண்டு பெண்மணிகளின் தலையையும் உடலையும் ஜமதக்னி முனிவர் கொடுத்திருந்த புனித நீரைத் தெளித்து ஒன்று சேர்த்தான். உடனடியாக அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தவர்கள் போல உயிர் பெற்றனர். ஆனால் பரசுராமனின் அதிரும் வண்ணம் அவன் தாயின் முகம் வெட்டியானின் மனைவி முகமாகவும், வெட்டியானின் மனைவிக்கு தாயின் முகத்தையும் அவசரத்தின் பொருத்தியிருந்தான். இனி அவனால் அதை மாற்றவும் முடியாது. என்ன செய்வது என்று திகைத்தவனிடம் ரேணுகா கலங்காதே மகனே, நீ உன் பணிகளைத் திறம்பட செய். உலகம் உள்ள வரை உன் புகழ் நிலைக்கும். அன்னையைக் கொன்றவன் என்ற பழிச்சொல்லில் இருந்து நீ மீண்டுவிட்டாய். நான் பார்வதிதேவியின் அம்சம். இனி என்னை உலக மக்கள் எல்லை அம்மன் அல்லது மாரியம்மன் என்று அழைத்து வழிபடுவார்கள். சிவ ரூபமான உன் தந்தைக்கு என் வந்தனத்தைச் சொல் என்று கூறிவிட்டு என்றாள் ரேணுகா தேவி. ஆனால் தந்தையின் கோபத்தைப் பற்றி நன்கறிந்த பரசுராமன் நீயே நேரில் வந்து கூறம்மா என்று பணிவுடன் கூற வேறு வழியின்றி மீண்டும் ஆசிரமத்துக்கு வந்தாள். நடந்ததை ஞான திருஷ்டியில் அறிந்த மகரிஷி அவளை அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. முனிவரின் கோபம் தீரும் வரை அங்கேயே இருந்து பழையபடி பணிவிடைகளைச் செய்து வந்தாள் ரேணுகா. 

இந்த நிகழ்வுக்கு பிறகு, கார்த்தவீரிய அர்ச்சுனன் எனும் மன்னன் ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தான். பெரும் சேனையுடன் வந்த அரசனுக்கு ஜமதக்னி முனிவர் அறுசுவை விருந்து படைத்தார். மிகக் குறுகிய கால அவகாசத்தில் படை முழுவதற்கும் அமுது படைக்க எவ்வாறு இயன்றது என்று மன்னன் முனிவரிடம் வற்புறுத்திக் கேட்க, ஜமதக்னி முனிவர் இது முன்பு ஒரு முறை இந்திரன் தனக்கு பரிசாக அளித்த காமதேனுவின் அருளால் தான் என்று உரைத்து காமதேனுவை காண்பித்தான். கேட்கும் வரங்களை அருளும் தெய்வீக பசுவான காமதேனுவைப் பார்த்ததும் மன்னனுக்கு அதைக் கவர்ந்தெடுத்துச் சென்றுவிட ஆசை பிறந்தது. முனிவருக்குத் தெரியாமல் காமதேனுவை அபகரித்துச் சென்றுவிட்டான். பரசுராமன் அச்சமயத்தில் காட்டில் தவமியற்றப் போயிருந்தான். திரும்பி வந்ததும் செய்தியறிந்து கார்த்தவீரியனின் அரண்மனைக்குச் சென்றான். கோபத்துடன் கோடரியை வீசி அவனை கொன்று காமதேனுவை மீட்டெடுத்தான். மகனின் ரத்த வேட்கையைப் பார்த்து ஜமதக்னி அவனை சாந்தப்படுத்தி மீண்டும் காட்டுக்குச் சென்று சிறிது காலம் தவம் இயற்றும்படி கூறவே, தந்தைச் சொல்லுக்கு என்றும் கட்டுப்படும் மகனாகைய பரசுராமன் காடேகினான்.

கார்த்தவீரியன் மகன்கள் தந்தையின் உடலைப் பார்த்து பதறி, இக்காரியத்தினைச் செய்தவன் பரசுராமன் என்பதை அறிந்து நேராக முனிவரின் ஆசிரமத்திற்கு விரைந்தனர். அங்கு அவன் இல்லாததைப் பார்த்து இதற்கெல்லாம் காரணமான ஜமதக்னியை சூழ்ந்து அவர்மீது பலவிதமான அம்புகளை கண் இமைக்கும் நேரத்தில் எய்து கொன்றனர். தவம் முடிந்த நிலையில் ஆசிரமத்துக்குத் திரும்பிய பரசுராமன் இறந்து கிடந்த தந்தையப் பார்த்து துடித்துப் போனான். ஜமதக்னி முனிவர் இறந்த அதிர்ச்சியில் அவரின் உடலருகே பித்து நிலையில் தாய் ரேணுகா தேவி அழுது அரற்றிக் கொண்டிருந்தாள். தன் மார்பின் மீது 21 முறை அடித்து அழுத அவளை சமாதானப் படுத்த அவனிடம் ஒரு வார்த்தையும் இல்லை. ரெளத்திரம் தலைக்கேறிய அவன் நேராக அரண்மனைக்குச் சென்று கார்த்தவீரியனின் மகன்கள் அனைவரையும் அதே முறையில் கொன்றொழித்தான். தன் தாய் 21 முறை அடித்து அழுத காரணத்தால் ஷத்திரிய மன்னர்களின் 21 தலைமுறைகளைக் கருவறுக்க சபதம் பூண்டார்.

ரேணுகா தேவி தன்னிலை இழந்தாள். கணவன் இறந்தபின் அவள் உயிர் வாழ விரும்பாமல் உடன்கட்டை ஏற தலைப்பட்டாள். நெருப்பு கொழுந்துவிட்டு எறிய அதில் ஏறிப் படுத்த ரேணுகா தேவியைக் காப்பாற்றியது மழை. பெரும் மழை பொழிந்து தீயை அணைத்துவிட, உடல் முழுவதும் நெருப்பு பட்ட கொப்பளங்களுடன் சிதையிலிருந்து வெளியேறினாள் ரேணுகா தேவி. உடலில் ஆடையற்ற நிலையில் அங்கிருந்து வேப்பிலைகளை உடையாக அணிந்து மகனிடம் வந்து சேர்ந்தாள். 

பரசுராமன் தன் பழி வாங்கும் சபதத்தால் ஷத்திரியர்களை கொன்றொழித்தான். ஒரு கட்டத்தில் ரத்தம் தோய்ந்த தன் கோடரியைப் பார்த்து வெறுத்துப் போன பரசுராமன் துறவுக் கோலம் பூண்டு சாத்விகமானவனாக மாறினான். தன்னுடைய ரெளத்திரத்தை கைவிட்டு, தன்னுடைய உடைமையான கோடரியை துறந்து, தியானம் செய்த பரசுராமன் தான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் என்ற உண்மை நிலை உணர்ந்தான். 

வாழ்வின் ஒரே ஒரு கணத்தில் தன்னிலை மறந்து கந்தர்வனை நினைத்துவிட்டதினால் பல துன்பங்களுக்கு உள்ளான ரேணுகா தேவிக்கு சிவபெருமான் காட்சியளித்தார். அவளுடைய முகத்தை இந்த உலகம் உள்ளவரை யாரும் மறக்க மாட்டார்கள் இனி நீ இறைவியாக ரேணுகா தேவியாக மாரியம்மனாக எல்லையம்மனாக மக்களை உய்விக்கும்படி வரம் தருகிறார். ரேணுகா தேவி ரேணுகா பரமேஸ்வரியாகவும், ரேணுகாம்பாளாகவும் தமிழகத்தில் பல கோயில்களில் வழிபடப்படுகிறாள்.

ரேணுகா தேவி புராணங்களின்படி ஸ்தூல சரீரமும் நிராகாரம் என்ற ஜேஷ்ட சரீரத்தையும் கொண்டவள். அவளுக்கு இரண்டு உருவங்கள் உள்ளன. அவளே உலகு அனைத்தையும் ஆளும் லோகமாதா. அவளுக்கு  யாவுமே அவளேதான்.  தாய், தந்தை, கணவன், மனைவி, சொந்தம், பந்தம் என அனைத்துமே அவளுக்கு அவளேதான். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com