எச்சரிக்கை! இப்படியும் ‘சைக்கோ’ தனமாகக் கொலைகள் நிகழ்த்தப் படுகின்றன... பதற வைக்கும் நிஜ சம்பவம்!

ஏனெனில் கொலைகளில் பலவிதம் உண்டு. ஆனால், இப்படி பசை கொண்டு கொடூரமாகக் கொலையைத் திட்டமிடுவது அரிதானது. மனிதமனம் விசித்திரமானது. கொலைக்காக அது தேர்ந்தெடுக்கும் உத்திகள் வன்முறையின், வக்கிரத்தின் உச்சம்
எச்சரிக்கை! இப்படியும் ‘சைக்கோ’ தனமாகக் கொலைகள் நிகழ்த்தப் படுகின்றன... பதற வைக்கும் நிஜ சம்பவம்!

மத்தியப்பிரதேசம், விதிஷா மாவட்டத்தைச் சார்ந்த 35 வயதுப் பெண்மணி ஒருவர் முகத்தில் கண்கள், வாய், மூக்கு அனைத்தும் பசையால் ஒட்டப்பட்ட நிலையில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக  அம்மாநில காவல்துறையினர் நேற்று தெரிவித்துள்ளனர்.

ராஜ்புத்தில் இருக்கும் அப்பெண்ணின் வீட்டில், அப்பெண்ணின் முகத்தில் துவாரங்கள் இருக்கும் பாகங்கள் அனைத்தும் தீவிரமான ஒட்டும் திறன் கொண்ட பசையால் ஒட்டப்பட்ட நிலையில் மூச்சுத்திணறி அவர் உயிரிழந்ததாக அவரது மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. அவரை  இப்படி ஒரு நூதன முறையில் கொலை செய்தது யார்? என்று காவல்துறையினர் தேடுதல் வேட்டை நிகழ்த்தும் போது அப்பெண்ணின் மகனே, காவல்நிலையத்திற்கு வந்து, தனது தந்தை தான், தாயை இப்படிக் கொன்றிருக்க வேண்டும் என புகார் அளித்த செய்தி அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மனைவி துர்காபாயைக் கொலை செய்யத் திட்டமிட்ட ஹல்கிராம் குஷ்வாஹா, வீட்டில் உடைந்த பொருட்களை ஒட்டுவதற்காக வைத்திருந்த தீவிர ஒட்டும் தன்மை கொண்ட பசையைத் தேர்ந்தெடுத்து, அதைக் கொண்டு தன் மனைவி துர்காபாயின் கண்கள், வாய், மூக்கு என முகத்தில் இருந்த பாகங்கள் அனைத்தையும் ஒட்டியிருக்கிறார். இதனால் மூச்சுத்திணறி மரணம் நிகழ்ந்திருக்கிறது என இந்த வழக்கை விசாரித்து வரும் கோட்வால் காவல்நிலைய ஆய்வாளர் ஆர்.என் ஷர்மா தெரிவித்துள்ளார்.

மனைவியைக் கொலை செய்வதற்கு முன்பு கொலையாளி ஹல்கிராம், அப்போது வீட்டினுள் இருந்த தனது மகன்கள் இருவரையும் வீட்டை விட்டு சற்று நேரம் வெளியில் செல்லுமாறு கூறி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி இருக்கிறார்.

தந்தையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து வெளியில் சென்ற மகன்களில் ஒருவர் மாலையில் வீடு திரும்புகையில் தங்களது தாய், மூச்சுப் பேச்சின்றி அசைவற்ற நிலையில் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போய் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்த போது தான் துர்காபாய் இறந்த விவரமே வெளியில் தெரிய வந்திருக்கிறது.

பின்னர் நிகழ்ந்தவற்றை ஊகித்து அறிந்த துர்காபாயின் இளைய மகன், காலையில் தந்தை தங்களை வெளியில் அனுப்பியது இதற்காகத் தானோ? என சந்தேகப்பட்டு காவல்துறையில் தந்தையின் பேரில் புகார் அளிக்கவே, தற்போது மகனின் புகாரின் பேரில் ஹல்கிராமின் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு அவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார்.

ஹல்கிராமின் மகனது குற்றச்சாட்டின் படி, ஹல்கிராம் குடிவெறியர் என்பதும், குடித்து விட்டு மனைவியுடன் அடிக்கடி சண்டையிடும் வழக்குமுள்ளவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்ல, ஹல்கிராம் இதற்கு முன்பே ஒருமுறை, மனைவியை விஷம் வைத்துக் கொல்ல முயன்றவர் தான் என்பதும் காவல்துறை விசாரணையின் பின் தெரிய வந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இதே ரீதியில் கடந்த 2016 ஆம் ஆண்டிலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை நாம் தற்போது நினைவுகூர வேண்டியது அவசியமாகிறது.

ஏனெனில் கொலைகளில் பலவிதம் உண்டு. ஆனால், இப்படி பசை கொண்டு கொடூரமாகக் கொலையைத் திட்டமிடுவது அரிதானது. மனிதமனம் விசித்திரமானது. கொலைக்காக அது தேர்ந்தெடுக்கும் உத்திகள் வன்முறையின், வக்கிரத்தின் உச்சம் வரை செல்வதை இது போன்ற நவீன உத்திகளின் வாயிலாக அறிந்து கொண்டு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இம்மாதிரியான சந்தர்பங்களில் அவசியமாகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த ‘ஆசை’ திரைப்படத்தில் மனைவி ரோஹிணியை கொலை செய்யத் திட்டமிடும் கணவராக நடித்த பிரகாஷ் ராஜ்,  ரோஹிணி தூங்கும் போது அவரது முகத்தை பிளாஸ்டிக் உறை ஒன்றால் மூடி இறுகக் கட்டி விட்டு அவர் மூச்சுத்திணறி இறப்பதை அணு அணுவாக ரசிப்பதாக ஒரு காட்சி இடம்பெறும். அந்தக்காட்சி அன்று முதல் இன்று வரை பலத்த கண்டனத்துக்குரிய காட்சியாகவே நீடித்து வருகிறது. அந்தத் திரைப்படத்தைப் பார்த்து விட்டு அதே விதமாக சில கொலைகள் நிகழ்த்தப்பட்டதற்கும் அவ்வப்போது சில ஊடகச் செய்தி சான்றுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஆசை திரைப்பட சைக்கோ கொலையையும் மீறிய இந்த ‘பசை’ கொலைகள் தற்போது வட இந்தியாவை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த 2016 ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது குடிகாரக் கணவனின் சித்ரவதை பொறுக்க முடியாமல், கணவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவனது கண்களை இதே விதமான பசையால் ஒட்டியதாக வழக்கொன்று பதியப்பட்டுள்ளது. எனவே மது, மாது, லாஹிரி வஸ்துக்களின் மீதான போதை காரணமாக அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடிய தம்பதிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. முன்பே சுட்டிக் காட்டியவாறு மனித மனம் விசித்திரமானது. அதைவிட போதைக்கு ஆட்பட்ட மனித மனம் சைக்கோத்தனத்தின் உச்சத்திற்குச் செல்லவும் தயங்காது என்பதற்கு நம்மிடையே பலவிதமான திரைப்பட மற்றும் செய்தி அடிப்படையிலான உதாரண சம்பவங்கள் உள்ளன.

எனவே தேவை எச்சரிக்கை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com