கலைஞர் கருணாநிதியின் மேடைப் பேச்சு மட்டுமல்ல அவர் பிற படைப்பாளிகளுக்கு வழங்கியிருக்கும் புத்தக வெளியீட்டு உரைகளும் கூட அவரது அபிமானிகளுக்கு எப்போதும் தேன் தடவிய பலாச்சுளைகளே! அபிமானிகள் என்பதை விட அவரது உரையைக் கேட்க வாய்க்கும் ஒவ்வொருவருமே ஒப்புக் கொள்வார்கள் அவரது பகடிச்சுவையும்... வாழைப்பழ ஊசியாகக் குத்திப் பேசி உண்மையை பிட்டு வைக்கும் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் வேறெவருக்கும் அத்தனை எளிதில் கை வரப் பெறாதது என்று. இதோ அதற்கொரு சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது இந்த ‘கலைஞர் பேசுகிறார்’ எனும் முன்னுரை. 1996 ஆம் ஆண்டில் பிரபல சமூக சீர்த்திருந்த எழுத்தாளரான சு.சமுத்திரம் ‘என் பார்வையில் கலைஞர்’ எனும் புத்தகத்தை எழுதி அதன் வெளியீட்டு விழாவையும் கலைஞர் தலைமையில் நடத்தினார். அந்த விழாவில் பங்கேற்ற அன்றைய முதல்வர் கலைஞர் ஆற்றிய இந்த கலைஞர் பேசுகிறார் உரை காலம் பல கடந்தும் முதன் முறை வாசிப்பவர்களுக்கு சுவை குன்றாததாகவே இருக்கிறது. ஏனெனில் அந்த காலகட்டத்தில் சு.சமுத்திரம் கலைஞரின் ஆதரவாளராக மாறியிருந்த போதும் அதற்கு முந்தைய காலங்களில் கலைஞரை தீவிரமாக எதிர்ப்பவரும், விமர்சிப்பவருமாகவும் இருந்தார் என்பதையும் இந்தப் புத்தக அறிமுக உரையில் சு.சமுத்திரமே தம் கைப்பட சொல்லியிருக்கிறார். அதனால் இந்த உரை முக்கியத்துவம் பெற்றதாகிறது.
விழாவிற்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்த அன்றைய முதல்வர் கலைஞர் புத்தகம் குறித்தும், சு.சமுத்திரம் குறித்தும் பேசுவதற்கு முன்பு இந்த உலகம் சாமான்ய எழுத்தாளனை எப்படியெல்லாம் புறக்கணிக்கிறது? அதே எழுத்தாளன் அதிகாரப் பதவியில் அமரும் போது அவனை எப்படி கெளரவிக்கிறது? என்பதை மக்கள் முன்னிலையில் பிட்டு வைக்கிறார்.
‘நான் முதலமைச்சர் என்பதற்காக என் எழுத்தையும், என்னையும் கெளரவிக்காதீர்கள்... உண்மையில் ஒரு படைப்பின், படைப்பூக்கத்தின் தகுதி என்னவோ அதை அடிப்படையாகக் கொண்டு அதை எழுதியவரையும் அவரது படைப்பையும் அங்கீகரியுங்கள்’. என்பதை அகில இந்திய வானொலி நிலையத்திற்கு அவர் ‘மந்திரி குமாரி’ நாடகத்தை அனுப்பி அது திரும்பி வந்த கதையையும். பின்னொரு காலத்தில் முதலமைச்சரான பின் அதே வானொலி நிலையம் அதே மந்திரி குமாரி கதையைத் தன்னிடம் வேண்டி விரும்பு ஒலிபரப்ப வாங்கிச் சென்றதையும் புத்தக வெளியீட்டு முன்னுரையில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல அவரது வாழ்க்கையில் இப்படியான அங்கீகார ஏற்றத்தாழ்வுகளை அவர் தனது வாழ்நாள் முழுவதிலுமே பல்வேறு காலகட்டங்களில் துளித்துளியாகக் கடந்து வந்தே இன்றைய ‘கலைஞர் ஓர் அரசியல் சகாப்தம்’ எனும் நிலையை எட்டியிருக்கிறார்.
அவர் மறைந்த துயரத்திலிருந்து உடன்பிறப்புகள் இன்னும் வெளிவந்திருக்க மாட்டார்கள். இச்சூழலில் 1996 ஆம் வருடத்தில் வெளியான இந்த ‘கலைஞர் பேசுகிறார்’ உரையை அவரது நினைவுகளைப் போற்றும் வகையில் வெளியிடுவதில் தினமணி இணையதளம் பெருமை கொள்கிறது.
கலைஞர் பேசுகிறார் உரையில் கலைஞர் அன்று குறிப்பிட்ட நிலை தான் இன்றும் எழுத்தாளர்களுக்கு நீடிக்கிறது. இதே சு. சமுத்திரம் 2013 ஆம் வருடம் ஒரு விபத்தில் அகால மரணமடைந்த போது ஆங்கில நாளிதழ்கள் அவரதுமரணத்துக்கு அளித்த முக்கியத்துவம் கலைஞர் சொன்ன வகையிலேயே இருந்தது. என்ன நடிகையின் திருமணச் செய்தி மேலே இடம்பெறவில்லை அவ்வளவு தான்.