சரியான முடிவு தவறான நேரம்!

தனக்கு எதிராக யாருமே வேட்புமனு

தனக்கு எதிராக யாருமே வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட இருப்பதில் வியப்பொன்றுமில்லை. காங்கிரஸில் ஏற்பட இருக்கும் மாற்றம் வெறும் தலைமை மாற்றமா அல்லது தலைமுறை மாற்றமா அல்லது வரலாற்றுத் திருப்பமா என்பதை அடுத்து வர இருக்கும் தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்கும்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட இருப்பது மாற்றம் மட்டுமல்ல, சோனியா காந்தியின் தலைமை முடிவுக்கு வருவதன் அடையாளமும் கூட. காங்கிரஸ் கட்சியின் 132 ஆண்டு வரலாற்றில் மிக அதிக காலம், அதாவது 19 ஆண்டுகள், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த பெருமை சோனியா காந்திக்கு மட்டுமே உண்டு. சோனியா காந்தியின் தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய எழுச்சியையும், மிகப்பெரிய வீழ்ச்சியையும் சந்தித்தது. 
வலுவிழந்து போயிருந்த காங்கிரஸ் கட்சியையும், மனம் சோர்ந்து போயிருந்த காங்கிரஸ் தொண்டர்களையும் சோனியா காந்தியின் தலைமைதான் நம்பிக்கையை ஊட்டிப் புத்துணர்ச்சி அடைய வைத்தது. 1998-1999 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றாலும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிரான வலிமையான எதிர்க்கட்சியாகக் காங்கிரஸால் செயல்பட முடிந்தது. அதற்குக் காரணம் சோனியா காந்தியின் தலைமை.
சோனியா காந்தியின் அரசியல் சாதுர்யத்தால்தான் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி 2004-இல் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. 2004-லிலும் 2009-லிலும் சோனியா காந்தியின் தலைமை தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தியது என்றாலும், அவர் நேரிடை
யாகப் பதவி வகிக்காமல் மன்மோகன் சிங்கை பிரதமராக்கி, மறை
முகமாக ஆட்சி நடத்த முற்பட்டதுதான் காங்கிரஸின் வீழ்ச்சிக்கும் காரணம்.
இதுநாள் வரை கட்சித் தலைமையை ஏற்கத் தயங்கிய ராகுல் காந்தி குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரசாரத்தில் தனக்குக் கூடும் கூட்டத்தை கருத்தில் கொண்டு துணிந்து தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. பேரணிகளுக்குக் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்பதை அவருக்கு 2012-லும் 2017-லும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்கள் உணர்த்தி இருக்கும். 
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகத் தன்னை குஜராத்தில் களமிறக்கிக் கொண்டிருப்பதற்கு சில காரணங்கள் இருக்கக் கூடும். அவரது பாட்டனார் பெரோஸ் காந்தி குஜராத் மாநிலக்காரர். குஜராத்தில் இருந்துதான் நரேந்திர மோடி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிப் பிரதமராகி இருக்கிறார். சிங்கத்தை சிங்கத்தின் குகையிலேயே சந்திப்பது என்றுகூட முடிவெடுத்து நரேந்திர மோடியின் செல்வாக்குக் கேந்திரமான குஜராத்தில் ராகுல் காந்தி பா.ஜ.க.வை எதிர்க்கத் துணிந்திருக்கிறார் என்றுகூடக் கருத இடமிருக்கிறது.
ராகுல் காந்தியின் கடந்தகால அரசியல் செயல்பாடுகள் குறிப்பிடும்படியாக இல்லை. அவரிடம் இருக்கும் ஆற்றலுக்கும், துடிப்புக்கும், பல்வேறு பிரச்னைகள் குறித்த புரிதலுக்கும், அவர் நாடாளுமன்றத்தில் தனது திறமையை நிரூபித்திருக்க வேண்டும். கட்சி அளவிலும்கூட அவரது பிரசாரங்களால் காங்கிரஸ் கட்சி பெரிய அளவு வெற்றியை அடைந்துவிடவில்லை. அமைப்பு ரீதியாகவும், காங்கிரஸ் கட்சியில் பெரிய மாற்றங்களைத் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி ஏற்படுத்தி இருக்கிறாரா என்றால், அதுவும் கிடையாது. இந்த நிலைமையில் அவரது தலைமையில் கட்சியில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடும் என்று காங்கிரஸ்காரர்களே கருதுவதாகத் தெரியவில்லை.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தியும் அவரது சமூக, ஊடகக் குழுவினரும் களமிறங்கிய பிறகு சலசலப்பு போய் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதென்னவோ உண்மை. ராஜதந்திர ரீதியாக ஜிக்னேஷ் மேவானி, ஹார்திக் படேல், அல்பேஷ் தாக்கூர் ஆகிய மூன்று இளைஞர்களையும் காங்கிரஸ் பக்கம் இழுத்துக் கூட்டணி அமைத்துக் கொண்டிருப்பது ஆளும் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இருவருடைய சொந்த மாநிலமான குஜராத்தில், தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ராகுல் காந்தியால் காங்கிரûஸ வெற்றிபெறச் செய்ய முடியுமேயானால், தேசிய அளவில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் தங்களது முழு கவனத்தையும் செலுத்தி குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்திரா காந்தியோ, ராஜீவ் காந்தியோ, சோனியா காந்தியோ எதிர்கொள்ளாத அளவிலான வலுவான எதிர்க்கட்சியாக மோடி-அமித் ஷா தலைமையிலான பா.ஜ.க.வை ராகுல் காந்தி எதிர்கொள்கிறார். முன்பு போல, தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியால் மற்றவர்கள் மீது பழியைச் சுமத்திவிட முடியாது. குஜராத், ஹிமாசலப் பிரதேசம் மட்டுமல்ல, 2018-இல் மேலும் பல சட்டப்பேரவைத் தேர்தல்களையும், 2019-இல் மக்களவைத் தேர்தலையும் ராகுல் காந்தியின் தலைமை சந்தித்தாக வேண்டும்.
இதெல்லாம் தெரிந்தும் குஜராத் சட்டப்பேரவை முடிவுகள் வருவதற்கு முன்னால் ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது! இது தன்னம்பிக்கையின்பாற்பட்டதா, அசட்டு தைரியமா என்பதை குஜராத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com