இதற்கு அதுவே மேல்!

கடந்த சனிக்கிழமை சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள், தமிழக அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத களங்கம் என்றுதான் கூற வேண்டும். சட்டப்பேரவைக்கு வெளியே எது வேண்டு

கடந்த சனிக்கிழமை சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள், தமிழக அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத களங்கம் என்றுதான் கூற வேண்டும். சட்டப்பேரவைக்கு வெளியே எது வேண்டு மானாலும் நடக்கலாம். ஆனால் சட்டப்பேரவையில் அதன் செயல்பாட்டை முடக்குவதும், குழப்பம் விளைவித்து அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எந்தக் காரணத்துக்காகவும் ஏற்றுக் கொள்ளவே முடியாத கீழ்த்தரமான செயல்பாடுகள்.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிசாமியை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்வரை, காலம் தாழ்த்தியது தவறு என்பதுதான் நமது கருத்து. அதே நேரத்தில், முறையாகக் காவல்துறையின் மூலம் கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த ஒவ்வோர் உறுப்பினரும் அவர் சொந்த விருப்பத்தில்தான் தங்கியிருக்கிறாரா என்பதைத் தனித்தனியாக அழைத்து விசாரித்து, அவர்களது வாக்குமூலத்தைப் பெற்ற பிறகுதான் எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைத்திருக்கிறார் எனும்போது, அவரது செயல்பாட்டில் குற்றம் காண முடியவில்லை.
எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைத்து, அவர் தனது சட்டப்பேரவைப் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் ஆளுநர் அளித்தபோது, கடந்த 16-ஆம் தேதி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், "சட்டப்பேரவையில் மெஜாரிட்டியைக் காட்ட 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்து, மிகப்பெரிய அளவிலான குதிரைப் பேரங்கள் நடப்பதற்கான வாய்ப்பை ஆளுநர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்' என்று விமர்சித்தார்.
15 நாட்கள் அவகாசத்திற்குக் காத்திருக்காமல் அடுத்த மூன்றே நாட்களில் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாரானபோது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அதை வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், இவ்வளவு அவசரமாக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன என்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினாரே, அதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
1972-இல் எம்ஜிஆர் பிரிந்து அ.தி.மு.க.வைத் தொடங்கியபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இப்போதைய நிலையில்தான் அன்றைய முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி இருந்தார். மக்கள் செல்வாக்கு, தனக்கு எதிராக இருக்கிறது என்று அவர் பதவி விலகவும் இல்லை, எம்ஜிஆர் ஆதரவாளர்களால் எல்லா தொகுதிகளிலும் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் முற்றுகையிடப்பட்டபோது அதை சட்டை செய்யவும் இல்லை. அந்த சரித்திரத்தைத் தி.மு.க.வினர் நினைவுகூர்வது நல்லது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் சட்டப்பேரவையில் நடந்துகொண்ட விதம், அவர்கள் எந்த அளவுக்குத் தெளிவாக இருந்தனர் என்பதை வெளிப்படுத்தியது. அவர்களில் ஐந்தாறு பேர் ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி இருந்தாலோ அல்லது அவர்களை வம்புக்கு இழுக்க முற்பட்ட தி.மு.க.வினருக்கு எதிர்வினையாற்ற முற்பட்டிருந்தாலோ, மிகப்பெரிய கலவரம் அரங்கேறி இருக்கும். அவர்கள் கையைக் கட்டிக் கொண்டு கற்சிலைகளாக அமர்ந்து விட்டதுதான், வன்முறையைத் தூண்டி ஆட்சிக் கலைப்புக்கு வழிகோலும் எண்ணத்துடன் வந்திருந்த தி.மு.க.வின் ஆத்திரத்தை மேலும் அதிகரித்தது என்று தோன்றுகிறது.
"சட்டப்பேரவையில் தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. எதிர்த்தரப்பில் இருந்தும் எங்களோடு சண்டையிட்டால்தான் அதை வன்முறை என்று சொல்ல முடியும். அவர்கள் வாக்களிக்கும் குறிக்கோளுடன் காசைப் பெற்றுக்கொண்டு நன்றிக்கடன் காட்டுவதற்காக அமைதி காத்தனர்' என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்திருக்கிறார். "காசைப் பெற்றுக்கொண்டு நன்றிக் கடன் காட்டினார்கள்' என்று பேரவை உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டுவது, உரிமை மீறலுக்கு வழிகோலும் என்பதுகூடவா அவருக்குத் தெரியவில்லை?
சசிகலா மீதான இனம்புரியாத வெறுப்பால், ஓ.பி.எஸ். அணியினரும், தி.மு.க.வினரும் செய்கின்ற ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்லாத செயல்பாடுகளை ஆதரிப்பது என்பது தவறான முன்னுதாரணங்களுக்கு வழிகோலும். இந்திய ஜனநாயக வரலாற்றில் பெரும்பான்மையை நிரூபிக்க மறைமுக வாக்கெடுப்புமுறை என்பது கிடையாது. தங்களது உறுப்பினர் பதவி கட்சித்தாவல் சட்டத்தின்படி பறிபோகக்கூடாது என்பதற்காக ஓ.பி.எஸ். அணியினர் எழுப்பும் இந்தக் கோரிக்கையை தி.மு.க. ஆதரிப்பதற்குக் காரணம், ஆட்சி கவிழ்ந்து, தேர்தல் நடந்து பதவிக்கு வந்துவிடமாட்டோமா என்கிற தி.மு.க.வின் ஆதங்கம்தான்.
குறைந்த அளவு பெரும்பான்மையுடன்தான் முதல்வர் பழனிசாமி அரசு வென்றிருக்கிறது. இப்போதும்கூடக் காலம் கடந்துவிடவில்லை. இரண்டு அணியினரும் நடந்ததை மறந்து இணைந்து செயல்பட முடியும். இரண்டு அணியின் பலவீனங்களும் வெளிப்பட்டிருக்கும் நிலையில், இணைவதுதான் பலமே தவிர, பிரிந்து செயல்படுவது அல்ல.
மு.க. ஸ்டாலின் தலைமையில், புதியதொரு பாதையில் தி.மு.க.வும், தமிழகமும் செயல்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இதைவிடப் பெரிய அதிர்ச்சி இருக்க முடியாது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் அரசியலில் இல்லாத நிலைமை ஏற்பட்டால்தான் தமிழகத்திற்கும், தமிழக அரசியலுக்கும் விடிவுகாலம் என்று பரவலாகவே ஒரு கருத்து நிலவி வந்தது. அந்தக் கருத்து தவறு என்பதை, நடைபெறும் சம்பவங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு அதுவே மேல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com