இலக்கு தவறுகிறது!

ரூபாய் நோட்டு செல்லாததாக்கப்பட்டதைத் தொடர்ந்து ரொக்கமில்லாப் பரிவர்த்தனைகள் அதிகரித்தன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவு உண்மை

ரூபாய் நோட்டு செல்லாததாக்கப்பட்டதைத் தொடர்ந்து ரொக்கமில்லாப் பரிவர்த்தனைகள் அதிகரித்தன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவு உண்மை இப்போது மக்கள் மீண்டும் ரொக்கப் பரிவர்த்தனைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது. கடந்த ஏப்ரல் மாதப் புள்ளிவிவரங்களின்படி, பண அட்டைப் பரிவர்த்தனை, மொபைல் வங்கி சேவை உள்ளிட்டவை எண்ணிக்கை அளவிலும், பண மதிப்பு அளவிலும் கணிசமாகக் குறைந்து விட்டிருப்பதாகத் தெரிகிறது.
ரொக்கத் தட்டுப்பாடு இருந்தபோது வேறு வழியில்லாமல் பண அட்டைகள் மூலமாகவும், பணப் பரிமாற்ற செயலிகள் மூலமாகவும் வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட மக்கள், இப்போது தாராளமாகப் பணப்புழக்கம் ஏற்பட்டுவிட்ட நிலையில் மறுபடியும் ரொக்கப் பரிவர்த்தனைக்கே திரும்பி விட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம்.
பண அட்டை மூலம் பரிவர்த்தனை நடத்துவதற்கான கருவிக்குத் தட்டுப்பாடு இருந்ததுபோய், இப்போது அவற்றின் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்படியே இருந்தாலும்கூட, வியாபாரிகள் பண அட்டை பரிவர்த்தனையையோ, செல்லிடப்பேசிச் செயலியையோ பயன்படுத்தி வியாபாரம் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படிப் பரிவர்த்தனைகள் செய்யும்போது வங்கிகளுக்கு அதற்கான பரிவர்த்தனைக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது என்பதுதான் அதற்குக் காரணம்.
ரொக்கப் பரிவர்த்தனையில் 100 ரூபாய் நோட்டு நூறு முறை கைமாறினாலும் அதனால் எந்தவித இழப்பும் ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் ரொக்கமில்லாப் பரிவர்த்தனையின் மூலம் 100 ரூபாய் நோட்டு நூறு பேரிடம் கைமாறும்போது, சேவைக் கட்டணம் 2.5% என்று வைத்துக் கொண்டால், வங்கிகளுக்கு ரூ.250 போய் விடுகிறது. இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க முடியாது என்பதால், வியாபாரிகள் தங்கள் லாபத்திலிருந்து இழக்க வேண்டும் அல்லது பொருள்களின் விலையை அதிகரித்து ஈடுகட்ட வேண்டும்.
அதேபோல, வங்கி சேவைகளுக்கு இப்போது பல்வேறு வரம்புகளும், கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வங்கிகளில் நமது சேமிப்புக் கணக்கிலிருந்து நான்கு அல்லது ஐந்து முறைக்கு அதிகமாக பரிவர்த்தனை செய்தால் அதற்குக்கூடக் கட்டணம் வசூலிக்கும் முறையை எல்லா தனியார் வங்கிகளும், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அரசு வங்கிகளும் அறிவித்து விட்டன. வங்கி அட்டைப் பரிவர்த்தனை, குறைந்தபட்ச சேமிப்புக் கணக்கு இருப்பு என்று எந்தெந்த வழியில் எல்லாம் நுகர்வோரிடமிருந்து கட்டணம் வசூலிக்க முடியுமோ அந்த வகைகளில் எல்லாம் கட்டணம் வசூலிக்கும் போக்கு வங்கிகளின் செயல்பாட்டில் காணப்படுகிறது.
இதுவும் ரொக்கமில்லாப் பரிவர்த்தனை என்கிற ஆக்கப்பூர்வமான அரசின் முனைப்புக்கு பாதகமாக அமையப் போகிறது. இப்படியே தொடர்ந்தால், இப்போது வங்கிகளின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையே மெல்ல மெல்லக் குறையத் தொடங்கி, அதன் தொடர் விளைவாக பணக்காரர்களுக்கு மட்டுமே அரசு சாதகமாக செயல்படுகிறது என்கிற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும்.
மத்திய அரசின் ரொக்கமில்லாப் பரிவர்த்தனைத் திட்டம் போதிய அடிப்படை அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமலும், முன்யோசனை இல்லாமலும் செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் நிஜம். பெரும்பாலான பணப் பரிவர்த்தனைகள் வங்கிகளின் மூலம் நடத்தப்படும் நிலை ஏற்படும்போது, அவை கணக்கில் காட்டப்படும் என்பதுடன் இயல்பாக அரசின் வரி வருவாயை அதிகரிக்கும். இதுவரை தெளிவாக இருக்கும் நிதியமைச்சகம், அதை உறுதிப்படுத்துவதை விட்டுவிட்டு வங்கிகளின் வருவாய் குறித்துக் கவலைப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி, புதிதாக 91 லட்சம் பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருப்பதாகவும், கடந்த ஆண்டைவிட ரூ.1.46 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்புக்கு வருமான வரிக் கணக்கு காட்டப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கிறார். வருமான வரி மூலம் வருவாய் அதிகரிக்கும்போது, வருமான வரியைக் குறைக்கலாம். அப்படி குறைப்பதில் ஒரு பகுதியை வங்கிகளுக்கு அளிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் அடாவடியாக வசூலிக்கும் வங்கி சேவைக் கட்டணங்களைத் தவிர்க்கச் சொல்லி விடலாம்.
பொதுமக்களின் சேமிப்புக் கணக்கிற்கு வங்கிகள் மிகக் குறைந்த வட்டிதான் தருகின்றன. அவர்களது பணத்தைக் கூடுதல் வட்டிக்குக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடனாகக் கொடுத்து லாபம் ஈட்டுகின்றன. வாடிக்கையாளர்களின் பணத்தை வட்டிக்கு விட்டு லாபமும் ஈட்டிக் கொண்டு, வாடிக்கையாளர்களிடம் கட்டணமும் வசூலிக்கும் தவறான செயல்பாட்டில் தனியார் வங்கிகள் ஈடுபடுவதுபோல, அரசு வங்கிகளும் ஈடுபடுவது குறித்து எந்தவோர் அரசியல் கட்சியோ, தன்னார்வ அமைப்புகளோ குரல் கொடுக்காமல் இருப்பதுதான் வேதனை.
1969 ஜூலை மாதம் 19-ஆம் தேதி, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 14 பெரிய தனியார் வங்கிகளை தேசியமயமாக்கியதற்குக் காரணமே, தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றி அவர்களது சேமிப்பை பயன்படுத்தி, அந்த வங்கிகளை நடத்தும் தனியார்தொழில் நிறுவனங்கள் கொழிக்கின்றன என்பதால்தான். இப்போது அரசுடைமை வங்கிகளே அதைத்தான் செய்கின்றன எனும்போது, அதை என்னவென்று சொல்வது?
ரொக்கமில்லாப் பரிமாற்றங்களுக்கு சேவைக் கட்டணம் அகற்றப்படுவதும், சேமிப்புகள் தொடர்புள்ள வங்கிச் சேவைகளுக்குக் கட்டண வசூல் நிறுத்தப்படுவதும்தான் ரொக்கப் பரிமாற்றத்தைக் குறைக்க உதவும். இதைச் செய்யாவிட்டால், அரசின் முயற்சிகள் பயனளிக்காது என்பது மட்டுமல்ல, அவப்பெயரையும் கூடிய விரைவில் பெற்றுத் தரும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com