நீதித்துறையில் மோதல்

நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், இப்போது உச்சநீதிமன்றம் சந்தித்துக் கொண்டிருக்கும் வழக்கு,

நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், இப்போது உச்சநீதிமன்றம் சந்தித்துக் கொண்டிருக்கும் வழக்கு, விசித்திரத்திலும் விசித்திரமானது. 
கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் இதுவரை சந்திக்காத சோதனையைச் சந்திக்க நேர்ந்தது. ஏறத்தாழ 75 நிமிடங்கள் உச்ச நீதிமன்றத்தில் காணப்பட்ட பதற்றம், அதன் மரியாதையையும் நம்பகத்தன்மையையும் சிதைப்பதாக அமைந்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகளுக்கு இடையே ஏற்பட்ட வெளிப்படையான மோதல், கூச்சலிலும் வாக்குவாதத்திலும் வெளிப்பட்டது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது பொறுமையை இழக்காமல் அமைதியாக இருந்ததால் பிரச்னை எல்லை மீறிவிடவில்லை.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு, முந்தைய நாள் இரண்டாவது இடத்தில் இருக்கும் நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வின் முடிவை நிராகரித்தது. வழக்குகளை அமர்வுகளுக்கு ஒதுக்கும் உரிமையான ரோஸ்டர் தயாரிப்பு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தனி உரிமை என்று அறிவித்தது. உச்சநீதிமன்றத்தில் அமர்வுகளைத் தீர்மானிப்பதும், எந்த அமர்வுக்கு எந்த வழக்குகளை ஒதுக்குவது என்பதும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் முடிவில் தவறு காண முடியாது. ஆனால், அவசரமான பிரச்னைகளில்கூட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் என்கிற கருத்து விவாதத்திற்குரியது. 
கடந்த வியாழக்கிழமை வழக்குரைஞர் காமினி ஜெய்ஸ்வாலின் மனு, நீதிபதி செலமேஸ்வரின் அமர்விடம் விசாரணைக்கு வந்தது. வழக்கின் முக்கியத்துவம் கருதி, தலைமை நீதிபதிக்கும், தனக்கும் அடுத்த பதவி மூப்பு அடிப்படையிலான முதல் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த மனுவை திங்கள்கிழமை விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி செலமேஸ்வர் உத்தரவிடுகிறார்.
இதே பிரச்னையில் இன்னொரு மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரின் அமர்வுக்கு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த அமர்வு இந்த வழக்கைத் தகுதியான இன்னோர் அமர்விடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் விடுத்தது. அந்த வேண்டுகோள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்விடம் வந்தது. 
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையில் நீதிபதிகள் ஆர்.கே. அகர்வால், அருண் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் முன் அன்று மதியமே உடனடியாக விசாரணைக்கு வந்தபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண். வாதம் செய்வதற்குப் போதுமான அவகாசம் தரப்படவில்லை என்கிற அவரது கூற்றுக்கு வழக்குரைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுகிறது. ஆத்திரப்பட்ட பிரசாந்த் பூஷண், நீதிபதிகள் என்ன முடிவை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி வெளியேறுகிறார்.
நீதிபதிகள் செலமேஸ்வர், அப்துல்நசீர் ஆகியோரின் அமர்வின் முன் வியாழக்கிழமை வந்த மனுவுக்கும் இப்போது பிரசாந்த் பூஷண் தரப்பால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவுக்கும் வேறுபாடில்லை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. இரண்டு மனுக்களுமே ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் ஒரே காரணத்துக்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அது உச்சநீதிமன்ற அமர்வுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளையும் பிரச்னைகளையும் உருவாக்கும் எண்ணத்துடன் தாக்கல் செய்யப்பட்டனவா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.
லக்னௌவைச் சேர்ந்த பிரசாத் கல்வி அறக்கட்டளை, பிரசாத் மருத்துவக் கல்லூரியை நடத்தி வருகிறது. இந்தியாவிலுள்ள 46 கல்லூரிகளில் போதுமான தரமும் கட்டமைப்பு வசதியும் இல்லை என்பதால் இந்திய மருத்துவ கவுன்சிலால் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் இதுவும் ஒன்று. 
ஒடிஸா உயர்நீதிமன்றத்தில் 2004 முதல் 2010 வரை நீதிபதியாக இருந்தவர் இஷ்ரத் மஸ்ரூர் குத்துசி என்பவர். இவரும் பாவனா பாண்டே என்பவரும் பிரசாத் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர்கள். இவர்கள் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கையூட்டுக் கொடுத்து தங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர் பிரசாத் அறக்கட்டளை நிர்வாகிகள். 
இதுதொடர்பாக விசாரணையும் சோதனையும் தில்லி, புவனேசுவரம் உள்ளிட்ட எட்டு இடங்களில் நடந்தன. ஏறத்தாழ ரூ.1.90 கோடி கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. வழக்கு இப்போதும் மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணையில் இருக்கிறது என்பது மட்டுமல்ல, ஒடிஸா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி 
இஷ்ரத் மஸ்ரூர் குத்துசி உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தங்களது மருத்துவக் கல்லூரியின் மீதான தடையை விலக்கக் கோரி பிரசாத் கல்வி அறக்கட்டளையின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, அது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அமர்வால் விசாரிக்கப்பட்டு அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு நேரடியான தொடர்பு இல்லை என்றாலும், அவரது தலைமையின் கீழான அமர்வில் வழக்கு விசாரிக்கப்பட்டதால் இந்த வழக்குத் தொடர்பான எந்த ஒரு மனுவின் மீதும் விசாரணையில் தலைமை நீதிபதி பங்குகொள்ளக் கூடாது என்பது வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணின் வாதம். அதற்குக் காரணம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது தனக்குச் செல்வாக்கு இருக்கிறது என்று கைது செய்யப்பட்ட ஒடிஸா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கூறியிருக்கும் நிலையில், அந்த அமர்வில் இடம்பெற்றவர்கள் விசாரணையில் இடம்பெறக் கூடாது என்கிறார்கள் மனுதாரர்கள்.
உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது நீதிபதியாக இருக்கும் நீதிபதி செலமேஸ்வர் தனது முடிவை அறிவிப்பதற்கு முன்னால் தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்திருந்தால் இந்தப் பிரச்னையே எழுந்திருக்காது. வலுவான ஆதாரங்கள் இல்லாமல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது களங்கம் சுமத்துவதோ, சந்தேகம் ஏற்படுத்துவதோ பொறுபற்றத்தனம். அதேநேரத்தில், தனது அமர்வால் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கில், மேல்முறையீட்டு அமர்வின் தலைமைப் பொறுப்பில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர வேண்டிய அவசியமில்லை. அவர் இன்னோர் அமர்வைத் தேர்ந்தெடுத்து அந்த அமர்விடம் விசாரணையை ஒப்படைத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி செலமேஸ்வர், வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகிய மூவருமே நீதித்துறையின் சுதந்திரத்துக்காகவும், ஊழலுக்கு எதிரான கருத்துக்கு ஆதரவாகவும் இருப்பவர்கள். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பது நீதித்துறை என்கிற அரசியல் சாசன அமைப்பை பலவீனப்படுத்துகிறது.
நீதித்துறையில் ஊழல் என்பது மிக முக்கியமான பிரச்னை. அதை நீதித்துறை தனக்குத்தானே தீர்த்துக்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com