உங்கள் மூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமா?

மனித மூளை சிறப்பாகவும் சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான்
உங்கள் மூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமா?

மனித மூளை சிறப்பாகவும் சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான். பழங்கள் நமது மூளைக்கு அதிக சத்துக்களைத் தருகின்றன. பழங்கள் சாப்பிடுவதால் மூளை இத்தனை செயல்திறனுடன் இருப்பதற்கான காரணங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்துகொண்டு இருக்கின்றனர்.

ஒன்றரை கிலோ எடையுள்ள பழுப்பும், வெள்ளையுமான திசுக்களாலான ஒரு பொருள்தான் நமது மூளை. அந்த மூளையை பெரியதாகவும் சக்தி வாய்ந்ததாக மாற்ற பழ உணவுகளால் மட்டும் தான் இயலும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.  

நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவிகித சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. பழங்களையே அடிப்படை உணவாக சாப்பிடுபவர்களுக்கு மூளைக்குத் தேவையான சத்துக்களை அனைத்தும் கிடைப்பதுடன் மூளை அதிக கனத்துடன் இருக்கும் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.

நான் பழங்களை சாப்பிடுவதால் தான் புத்திசாலிகளாக இருக்கிறேன் என்று பெருமையுடன் சொல்கிறார் அலெக்ஸ் டெகாசியன். இவர் ந்யூயார்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஆவார். எங்கள் உணவுப் பழக்கத்தை மிகவும் தரமானதாக மாற்றிக் கொண்டுள்ளோம் என்றார்.

உலகம் 70% அளவு தண்ணீரால் சூழப்பட்டிருக்கிறது. மனித உடலில் 80% நீர்ச் சத்து உள்ளது. உலகோடு உடலை ஒத்து வாழச் செய்ய 80% நீர்ச்சத்து உள்ள பழங்களைச் சாப்பிடுவதே சிறப்பாகும். நீர்ச் சத்துள்ள காய்கறிகளையும், பழங்களையும் ஏன் அதிகம் சாப்பிட வேண்டும்? திட உணவுகளைச் சாப்பிடும்போது அவை ஜீரணிக்க அதிக நேரமாகும். அதுவே ஒரு கப் பழ சாலட் அரைமணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். இதையே பழச்சாறாகச் சாப்பிடும்போது அதன் சத்துக்கள் ரத்தத்தில் வெகு வேகமாகக் கலந்துவிடும். இதனால் உடலின் சக்தி, உணவை ஜீரணிக்கச் செலவிடுவதற்குப் பதிலாக உடலின் வேறு செயல்பாடுகளுக்குப் பயன்படக்கூடும்!

பழங்களில் உள்ள ஃபோலிக் அமிலம், மூளையின்  கொழுப்பு அமிலச் சங்கிலியை (Long chain fatty acids)   உறுதியாக்குகிறது. தினமும் இரவு, ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது நல்லது. பழங்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், அறிவுக்கூர்மையை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பழங்களைத் தினமும் சாப்பிட்டால், எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் ஞாபகத்துக்குக் கொண்டு வரலாம்.

ஒரு மனிதனின் எடையில் மூளையின் பங்கு இரண்டு சதவிகிதம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். ஆனால் அதற்கு 25 சதவிகிதம் சத்து தேவைப்படுகிறது என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்கிறார் டெகாசியன். அத்தகைய விலை உயர்ந்த மதிப்பான ஒரு உறுப்பு தான் மூளை என்கிறார்.

பழ உணவுகளை உட்கொண்டதால் தான் குரங்கிலிருந்து பரிமாண வளர்ச்சி அடைந்திருக்கிறான் மனிதன் என்கிறார் இந்த ஆய்வாளர். அவரின் கணிப்புப்படி இலை தழைகளை சாப்பிட்டு வாழும் மிருகங்களை விட பழங்களை உண்டு வாழும் மிருகங்களின் மூளையானது 25 சதவிகிதம் அளவில் பெரிதாக இருக்கும் என்கிறார்.

1990 களில் ஆய்வு முடிவுகளின்படி அதிக மூளையுடைய உயர் குரங்கினம் எத்தகைய சூழல்களிலும் தப்பித்து அடுத்த கட்ட நகர்வுக்கான திட்டமிடல்களை சரியாகச் செய்து வாழ்தலை எளிமையாக்கிக் கொண்டன. 

டெகாசியன் கூறுகையில் பரிணாம வளர்ச்சியின் போது உயர் குரங்கினங்களுள் சில, சவால்களையும் சிக்கல்களையும் தாண்டி வெற்றிகரமாக வாழ்வதற்கான முக்கிய காரணம் அவை பழங்களை உணவாகக் கொள்வதுதான்.

இலைகளை விட பழங்களில் அதிக சத்துக்கள் உள்ளன. அவை மூளைக்குத் தேவையான சக்தியைப் பெற்றுத் தருவதால் அவற்றின் மூளை வளர்ச்சியும் சிந்திக்கும் திறனும் நன்றாக இருந்துள்ளது. அதே சமயம் எந்த செடியிலிருந்து எந்த பழங்கள் கிடைக்கிறது, அது எங்கிருக்கிறது, அதை எப்படி எடுப்பது போன்ற பல விஷயங்களை அவை ஆராய்ந்து அறிந்து கொள்கின்றன.

க்ரிஸ் வெண்டெட்டி எனும் ஆராய்ச்சியாளர் கூறும் போது, பழங்கள் உணவுகளால் மனித இனத்தின் பரிமாண வளர்ச்சியும் இந்த ஆய்வு பாலுண்ணிகள் மற்றும் குரங்கினங்களுக்கான மூளை செயல்பாட்டு ஆராய்ச்சியின் திசையை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புவதாகக் கூறுகிறார். இது குறித்த ஆய்வில் இன்னும் நிறைய விஷயங்களை கண்டு அடைய வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பழ உணவைப் பற்றிய இந்த  ஆய்வின் முடிவுகளை நேச்சர் எகாலஜி & எவலூஷன் (Nature Ecology & Evolution) பத்திரிகை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com