ஃபேஸ்புக் பற்றிய புதிய ஆராய்ச்சி ஒன்று சமீபத்தில் வெளிவந்துள்ளது. பெரும்பாலானவர்கள் பேஸ்புக்கில் தங்கள் புகைப்படங்களை ஃப்ரொஃபைல் படமாக வைத்திருப்பார்கள். சிலர் ஒரே ஃபோட்டோவை நிரந்தரமாக வைத்திருப்பார்கள். சிலர் எப்போதாவது புகைப்படத்தை மாற்றுவார்கள். இன்னும் சிலர் தினமும் புகைப்படத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஒரே புகைப்படத்தை வைத்திருப்பவர்களுக்கும், எப்போதாவது ஃபோட்டாவை மாற்றுபவர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அடிக்கடி தங்கள் ஃபோட்டோவை அப்லோட் செய்பவர்களுக்குத் தான் அனேக பிரச்னைகள் என்கிறது இந்த ஆராய்ச்சி.
இப்படி அடிக்கடி, நொடிக்கு நொடி தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஃப்ரொஃபைல் படம் மாற்றுபவர்கள் ஒரு கட்டத்தில் மன பாதிப்புக்களுக்கு உள்ளாகி கடுமையான சோகத்துக்கும் காரணம் தெரியாத ஒருவித நடுக்கத்துக்கும் உள்ளாகிறார்கள் என்றும் அவர்களின் மன நலமும் பாதிப்படைகிறது என்றும் யேல் பல்கலைகழகம் மற்றும் சான் டியகோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் சேர்ந்து ஃபேஸ்புக் பயன்பாடுகளைப் பற்றிய ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. இந்த ஆய்வினை மேற்கொண்டவர்கள் பேராசிரியர்களான ஷாக்யா மற்றும் நிகோலஸ் க்றிஸ்டாகிஸ் ஆகியோர். இதற்காக ஃபேஸ்புக் 5208 பதிவர்களை 2013 ஆண்டிலிருந்து 2015 ஆண்டு வரை இவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அதிகப்படியாக ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் கூடிய விரைவில் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறார்கள். எப்போதும் மானிட்டரில் வாழும் அவர்கள் சமூக அக்கறையை இழக்கிறார்கள், மேலும் அவர்களது உடல் மற்றும் மன நலனும் பெருமளவு பாதிப்படைகிறது என்று பதிவு செய்கிறது மெட்ரோ.கோ.யூகே (Metro.co.uk ) எனும் இணையதளம்.
மேலும் அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிடுவது அல்லது மற்றவர்களுடைய பதிவுகளுக்கு அதிகப்படியாக லைக் போடுவது, போன்ற செயல்கள் ஃபேஸ்புக் பிரியர்களை நாளாவட்டத்தில் கடுமையான மனச் சிக்கல்களுக்குள் இழுத்துச் சென்றுவிடும் என்கிறது இந்த ஆய்வு.
இந்த ஆராய்ச்சி முடிவு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜியில் வெளியிடப்பட்டுள்ளது.