இரு தரப்பு வர்த்தகத்திற்கு உதவும் வகையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள 'மிகவும் சாதகமான நாடு'என்ற தகுதி நிலை குறித்து இந்தியா வரும் வியாழனன்று ஆய்வு செய்ய உள்ளது.
இந்த மாத துவக்கத்தில் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள உரி ராணுவ முகாம் மீது, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். அதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் பதட்டம் நிலவி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இரு தரப்பு வர்த்தகத்திற்கு உதவக் கூடிய வகையில்,பாகிஸ்தானுக்கு 1996-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ' மிகவும் சாதகமான நாடு'என்ற தகுதி நிலை குறித்து இந்தியா வரும் வியாழன்று ஆய்வு செய்ய உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
1996-ஆம் ஆண்டு உலக நாடுகளிடையே தடையில்லா வர்த்தகத்தை உருவாக்கும் பொருட்டு, உலக வர்த்தக நிறுவனம் முன்னெடுப்பில் 'காட் ' ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் கையெழுத்திட்டன. அதன் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளனைத்தும் இதர நாடுகளை வர்த்தகத்திற்கு மிகவும் சாதகமான நாடுகளாக கருதவேண்டும் என்பது முக்கிய விதியாகும்.
இந்தியாவின் மொத்த ஆண்டு வர்த்தக மதிப்பான 641 பில்லியன் அமெரிக்க டாலர்களில், பாகிஸ்தானின் பங்கு என்பது மிகவும் குறைவான 2.67 பில்லியன் டாலர்கள் மட்டுமே ஆகும்.