பயனாளர்களின் தகவல்களை முகநூலுடன் பகிரக் கூடாது என்று தில்லி உயர்நீதிமன்றம் விதித்த தடை எங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்று வாட்ஸப் அறிவித்துள்ளது.
பிரபல செய்திப்பரிமற்ற செயலியான வாட்சப் தனது பயனாளர்களின் அந்தரங்க நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தது. அதனபடி பயனாளர்களின் அலைபேசி எண் உள்ளிட்ட அந்தரங்க தகவல்களை தனது மூல நிறுவனமான முகநூலுடன் பகிர்ந்து கொள்வது என்று முடிவு எடுத்தது. அதன்படி ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், பயனாளர்கள் சேவையில் இருந்து விலகி கொள்ள செப்டம்பர் 25-ஆம் தேதிவரை அவகாசம் கொடுத்திருந்தது. அதன் பிறகு சேவையை பயன்படுத்துவோரின் தகவல்கள் பகிரப்படும் என்றும் அறிவித்தது.
இதனை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் முதலாவது டிவிஷன் பெஞ்சு அளித்த தீர்ப்பில் வாட்சப் நிறுவனம் முகநூலுடன் தகவல்களை பகிர தடை விதித்து செப்டம்பர் 22-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் பிரபல செய்தி இணையதளம் ஒன்றில் வாட்சப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அன்னீ யா வெளியிட்ட அறிக்கையொன்று இடம் பெற்றுள்ளது. அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பானது வாட்சப் நிறுவனத்தின் கொள்கையில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. நாங்கள் திட்டமிட்டபடி பயனாளர்களின் தகவல்களை முகநூலுடன் பகிர உள்ளோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.