எம்.பிக்கள் வேறு தொழில் செய்வதற்கு தடை: மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பணியன்றி வேறு ஒரு தொழில் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ..
எம்.பிக்கள் வேறு தொழில் செய்வதற்கு தடை: மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

புதுதில்லி: பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பணியன்றி வேறு ஒரு தொழில் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பணியன்றி வேறு ஒரு தொழில் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி பாஜகவின் செய்தித்தொடர்பாளரும், வழக்கறிஞருமான அஷ்வினி குமார் உபாத்யாய் மனு ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனுவானது தலைமை நீதிபதி ஜே எஸ் கேஹர், நீதிபதி டி ஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகளும், பொது ஊழியர்களும் எப்படி வேறொரு தொழில் செய்ய இயலாது என்று முறை உள்ளதோ, அது போலவே சட்டத்தை வகுக்கும் எம்.பிக்களும் வேறொரு தொழிலை செய்யக்கூடாது என்று அஷ்வினி குமார் வாதிட்டார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமமான சட்டத்திற்கு உட்பட்டவர்களாக வேறொரு தொழில் செய்வதிலிருந்து விலக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் மக்கள்  பணிக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்..

பின்னர் நீதிபதிகள், “மனுதாரர் சொல்வது செல்லத்தக்கது என்றாலும் நீதிமன்றம் இது தொடர்பாக கொள்கைகளை வகுக்க முடியாது. மருத்துவர்களாக இருப்பவர்கள் ஐ ஏ எஸ் அதிகாரியாக ஆக முடியும், பொறியாளர்கள் அயல்நாட்டு தூதுவர்களாக முடியும். இவ்வளவு ஏன் மனுதாரரே ஒரு அரசியல் கட்சி உறுப்பினராகத்தான் உள்ளார். எனவே அரசியலமைப்பு சட்டம் 32 இன் படி நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் இந்த விவகாரம் அடங்காது என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தீர்ப்பளித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com