
புது தில்லி: பட்ஜெட் என்றால் ஏதோ போரடிக்கும் விஷயம் என்று மட்டும் நினைக்க வேண்டாம். இந்திய பொருளாதாரத்தின் ஆணி வேராக விளங்கும் பட்ஜெட் பற்றிய ஏராளமான சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிக்கும் முன்பு, அல்வா கிண்டும் விழா நடத்தப்படுகிறது. அதிக அளவில் அல்வா தயாரித்து, அவை நாடாளுமன்றத்தின் வடக்கு பிளாக்கில் மிகவும் பத்திரமாக எடுத்து வைக்கப்படும். பிறகு பட்ஜெட் தயாரிக்கும் பணி நடந்து, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், இந்த அல்வாவை, மத்திய நிதி அமைச்சர், பட்ஜெட் தயாரிக்க உதவிய அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவருக்கும் கொடுப்பார்.
எந்த ஒரு நல்ல காரியத்தை செய்யும் முன்பும் இனிப்பு செய்வது இந்தியர்களின் பாரம்பரியம். அதன் அடிப்படையில் தான் பட்ஜெட் தயாரிக்கும் முன்பு அல்வா கிண்டும் விழா நடத்தப்படுகிறது. ஆனால், ஏன் குறிப்பாக அல்வா கிண்டுகிறார்கள் என்று கேட்டால் அதற்கு எங்களிடம் பதில் இல்லை. மன்னிக்கவும்.
அடுத்து, சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக 2017 - 18ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் இணைந்து ஒருங்கிணைந்த பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆனால், இதுவரை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 26 அல்லது 27ம் தேதியில் ரயில்வே பட்ஜெட்டும், பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளில் பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுவது தான் வழக்கம்.
இந்த ஆண்டு அதிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தின் முதல் நாளிலேயே ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஒரே குடும்பத்தில் மூன்று பேர்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பலருக்கும் தெரியும்.
ஆம், 1958ம் ஆண்டு ஜவகர்லால் நேரு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிறகு அவரது மகள் இந்திரா காந்தி 1970ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்ய, பிறகு 1987ம் ஆண்டு ராஜீவ் காந்தி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒரே பெண்
இந்தியப் பிரதமராக பதவி வகித்த இந்திரா காந்தி தான், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒரே ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
கால் நூற்றாண்டு இடைவெளியில் பட்ஜெட்
சரியாக கால் நூற்றாண்டு இடைவெளியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்ற பெயரை பெறுபவர் பிரணாப் முகர்ஜி. நிதியமைச்சராக இருந்த பிரணாப் 1982-83, 1983-84, 1984-85 ஆகிய 3 ஆண்டுகள் தொடர்ந்து பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு 2009ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மீண்டும் பொது பட்ஜெட் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம்
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மதியத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகு 1999ம் ஆண்டு வரை பொது பட்ஜெட் என்பது பிப்ரவரி மாதம் கடைசி நாளில் மாலை 5 மணிக்குத்தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
அதன்பிறகு பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதும், வாஜ்பாயி பிரதமரானார். மத்திய நிதியமைச்சராக யஷ்வந்த் சின்ஹா பொறுப்பேற்றார். அப்போதுதான் பட்ஜெட்டை முற்பகல் 11 மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறை மாற்றப்பட்டது.
சுதந்திர இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில் மத்திய அரசின் மொத்த செலவு ரூ.164 கோடியாகும். அதுவே, 2009ம் ஆண்டின் மொத்த செலவு ரூ.ஒரு லட்சம் கோடியாக மாறியது.
இவ்வளவு பாரம்பரியத்தையும், பல்வேறு மாற்றங்களையும் தாங்கி நிற்கும் பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.