கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னை என்ற இடத்தில் செயல்பட்டு வரும் எம்.இ.எஸ் பொன்னை கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக அக்கல்லூரியின் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. தலைமை நீதிபதி நவநிதி பிரசாத் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.
பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட படிப்பகங்களில் மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமே செல்ல வேண்டும். அது படிப்பதற்கான இடம், போராடும் இடமல்ல.
குறிப்பிட்ட பள்ளி, கல்லூரி நிர்வாகங்களின் மீது மாணவர்களுக்கு ஏதேனும் கோரிக்கை இருந்தால், அதனை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம். அவ்வாறு செய்த பின்பும் அவர்கள் அதன் மீதான நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடலாம்.
எனவே எக்காரணம் கொண்டும் பள்ளி, கல்லூரி வளாகங்களில் போராடக் கூடாது. அவ்வாறு ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளலாம். அதிலும் மீறினால் தகுதி நீக்கம் செய்யலாம்.
இவ்விகாரம் வரம்பு மீறினால் சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் காவல்துறையின் உதவியை நாடலாம்.
அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் இதுமாதிரியான செயல்களை மறந்துவிட்டு, அவர்கள் தங்கள் படிப்பை துறந்து நேரடி அரசியலில் ஈடுபடலாம். அதை விடுத்து சம்பந்தப்பட்ட மற்ற மாணவர்களின் படிப்பையும், கனவையும் சேர்த்து கலைக்கும் விதத்தில் நடந்துகொள்வது முற்றிலும் புறம்பானதாகும் என்று தீர்ப்பளித்தது.