புதுதில்லி: உலக அளவில் பிரபல தேடுபொறி தளமான கூகுளில் கடந்த வாரம் இந்திய அளவில் 'ட்ரெண்டிங்' ஆன வார்த்தைகளில் 'பக்கோடா' முதலிடம் பிடித்துள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் மோடி தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் பொழுது, ' பக்கோடா விற்பது என்பதும் ஒரு வேலை வாய்ப்புதான், பக்கோடா விற்பனை செய்யும் நபர் தன் வீட்டிற்கு ரூ. 200-ஐ வருமானமாகக் கொண்டு சென்றால், அதனை நாம் வேலைவாய்ப்பாக கருத வேண்டுமா? இல்லையா?' என்று கருத்து தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்து பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்வினைகளை உண்டாக்கியது. அவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகாவில் பாஜக அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மோடியின் இந்த பேச்சினை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரமும் விமர்சனம் செய்து இருந்தார்.அவர் கூறும்பொழுது, “பக்கோடா விற்பனை செய்வதை பிரதமர் வேலைவாய்ப்பு என குறிப்பிட்டு உள்ளார். அப்படிப்பு பார்த்தால் பிச்சையெடுப்பது என்பது கூட ஒரு வேலைதான். ஏழ்மை காரணமாக வாழ்க்கைக்காக பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர்களையும் நீங்கள் ‘வேலை வழங்கப்பட்டவர்களாக’ கருதலாம் என்று காட்டமாக விமர்சித்தார்.
செவ்வாய்க்கிழமையன்று கூட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஜ்ஜி மற்றும் பக்கோடா விற்பனை செய்யும் போராட்டத்தினை புதுச்சேரியில் நடத்தினார். இப்படியாக பக்கோடா தொடர்பான விவாதம் எதோ ஒரு வகையில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.
இதன் விளைவாக உலக அளவில் பிரபல தேடுபொறி தளமான கூகுளில் கடந்த வாரம் இந்திய அளவில் 'ட்ரெண்டிங்' ஆன வார்த்தைகளில் 'பக்கோடா' முதலிடம் பிடித்துள்ளது. அதிலும் அதிகமான தடவைகள் அந்த வார்த்தையினைத் தேடியவர்கள் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது