புது தில்லி: பசு பாதுகாப்பு மற்றும் கும்பல் கொலைகள் தடுப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மூன்று நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மீதமுள்ள 8 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் பசு பாதுகாப்பு மற்றும் கும்பல் கொலைகள் அதிகரித்து வந்த நிலையில், இதை தடுப்பதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இதனை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்றுமாறு மத்திய அரசு மற்றும் நாடாளுமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், ராஜஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி பசுக்களை கடத்திச் செல்வதாக சந்தேகிக்கப்பட்டு ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து, ராஜஸ்தான் மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு பத்திரிகையாளர் துஷார் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் தெசீன் பூனாவலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பசு பாதுகாப்பு மற்றும் கும்பல் கொலைகள் தடுப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மூன்று நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாமல் உள்ள எட்டு மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் பசு பாதுகாப்பு மற்றும் கும்பல் கொலைகளில் ஈடுபடுவர்கள் சட்டத்தின் கோபத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதை அவர்கள் உணர்நது கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்த நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் தெசீன் பூனாவலாவின் மனுவினை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.