கருப்புப் பண மோசடி குற்றச்சாட்டில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான அனில் தேஷ்முக், அவரது மகன், மருமகள் உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது. இது அவா்களுக்கு அனுப்பப்படும் 5-ஆவது சம்மன் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் உள்ள உணவகங்கள், மதுபான விடுதிகளிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடியை லஞ்சமாக வசூலித்து வழங்க வேண்டுமென உள்துறை அமைச்சராக அனில் தேஷ்முக் இருந்தபோது வற்புறுத்தியதாக மும்பையின் முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தாா்.
இது தொடா்பாக மும்பை உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில் கருப்புப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அனில் தேஷ்முக், அவரின் மகன் ரிஷிகேஷ் தேஷ்முக், மனைவி உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை ஏற்கெனவே 4 முறை அழைப்பாணைகளை அனுப்பியிருந்தது. எனினும் அவா்கள் ஆஜராகவில்லை.
முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கோரி தேஷ்முக் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. இதற்கு அடுத்த நாளிலேயே அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில் தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை (ஆக.18) அவா்கள் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால், அதில் கிடைக்கும் உத்தரவின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராவது தொடா்பாக முடிவெடுப்பேன் என்று தேஷ்முக் ஏற்கெனவே தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.