அத்தியாயம் 33

லிண்டா கழுத்தைத் துடைத்துக்கொண்டாள். வீடியோ எடுப்பவன், அனாவசியத்திற்கு
அத்தியாயம் 33

லிண்டா கழுத்தைத் துடைத்துக்கொண்டாள். வீடியோ எடுப்பவன், அனாவசியத்திற்கு அவள் அருகே நெருங்கி நின்று கொண்டிருந்தான். ‘போலீஸ் வந்தப்புற்ம தோண்டுங்கய்யா. அவன் வேற சல்லியம் செய்வான்’ என்று பெரியப்பா முணுமுணுத்தார். எவரும் கேட்டதாகத் தெரியவில்லை. முத்துக்குமார் ஒரு ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.

‘செல்லியாத்தா தோண்டக் கூடாதுன்னு கத்துதாளே? அவளும் பாத்தியதைப் பட்டவள்ளா? நாளைக்கு கோர்ட்டு, அவள் சம்மதம் இல்லாம எப்படி தோண்டுனீய?ன்னு கேட்டான்னு வைங்க’ முத்துக்குமார் முடிக்கு முன்னே, பெரியப்பா ஆதரவுடன் அவன் தோளில் கை வைத்தார்.

‘ஏலா. அவ ஏற்கெனவே பயித்தியம்னு ஊரே அறிஞ்ச விசயம். அவ சொல்லுறதெல்லாம் கோர்ட்டு கேக்காது. அதுக்காக நீ போயி கோர்ட்டுல எங்க செல்லியாத்தா வெட்ட வேணாம்னான்னு சொல்லி வைக்காத, கேட்டியா?’

மெல்ல மெல்ல மண்ணில் எலும்புகள் தோன்றத்தொடங்கின. கடப்பாறையையும், மண்வெட்டியையும் மேலே கொடுத்துவிட்டு, சிறு கருவிகளால் கவனமாக மண்ணைத் தோண்டி, ப்ளாஸ்டிக் வாளிகளில் நிறைத்து மேலே அனுப்பினர்.

‘ஏ, வலது பக்கம் கை தெரியுது பாரு. ஆங். அதான். பாத்து, பாத்து’

இரண்டு மணி நேரத்தில் மூன்று எலும்புக்கூடுகள் சற்றே சிதிலமான நிலையில் வெளிப்பட்டன. இரு கூடுகள் ஒன்றோடொன்று  இணையாக, மற்றொன்று, அவர்கள் கால்மாட்டில் குறுக்காக.

‘இடது பக்கம் இருக்கறதுதான் முத்துராசா. கீழ இருக்கறது முத்தாயி. அவ, ‘செத்தா, அண்ணன் கால்மாட்டுலதான் கிடப்பேன்’னு சொன்னான்னுட்டு, அங்கனயே புதச்சம்’

லிண்டாவுடன் இருந்த இருவர், கையுறை, காலுறை இட்டபடி, மூக்கிற்கு முகமூடி அணிந்துகொண்டு, மெல்ல குழிக்குள் இறங்கினர். வீடியோ அவர்களை ஃபோகஸ் செய்து, அவர்கள் செய்வதை படமெடுத்தது.

இறங்கிய ஒருவர் தனது கையிலிருந்த கருவியைப் பார்த்தபடியே, உதட்டருகே நீண்டிருந்த மைக்ரோபோனில் பேசத்தொடங்கினார் ‘ஜி.பி.எஸ், இந்த இடத்தினைக்  இவ்வாறு காட்டுகிறது. என் காலருகே இருக்கும் கூடு மனித எலும்புக்கூடு. அதன் இடது கையின் கட்டைவிரல் இல்லை. ‘

மூன்று எலும்பு கூடுகளுக்கும் இவ்வாறு வீடியோவில் பதிந்தபின், சிறு இயந்திரம் கொண்டு, எலும்புகளின் ஒரு பகுதி வெட்டியெடுக்கப்பட்ட்து. ப்ளாஸ்டிக் உறைகளில் அவை இடப்பட்டு, மார்க்கரால், அவை அடையாளமிடப்பட்டு , மடிக்கணனி ஒன்றில் இருந்த மென்பொருளில் பதிவு செய்யப்பட்டன. பதிவு செய்யப்பட்ட நேரம், இடம், யாருடைய மாதிரி, யாரிடம் அவை இப்போது உள்ளன என்பன அதில் அடங்கும்.  நேரடியாக, இம்மாதிரிகள் ஆய்வுச்சாலையை அடையும்போது, அதன் நேரம், வந்து சேர்ந்த விதம் போன்றவை பதியப்பட்டு, சோதனைகளுக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு இடத்திலும், நேரம், யார் கையில் மாதிரி இருக்கிறது, என்பன சலிப்பில்லாமல் பதிவு செய்யப்படும். இந்த chain of custody இது போன்ற மாதிரிகளுக்கு மிக முக்கியம்.

அனைத்து நிகழ்வும் வீடியோவிலும், புகைப்படத்திலும் பதிந்தபின், குழியை மூடும்முன், லிண்டா ஒருமுறை உள்ளே இறங்கினாள். முத்துராசாவின் மண்டையோடு மற்றும் இடது கையைக் கவனித்தாள். இடது கையிலிருந்த நான்கு விரல்களும் அவளை நோக்கி வளைந்து, வா, வா என்பது போல் இருந்தன. அவன் முகம் பிற மண்டையோடுகள் போல பல்லிளிக்காமல், அவளை ஒரு சினேகப் புன்னகையுடன் பார்ப்பது போல் தோன்றியது. ஒரு நிமிடம் அங்கேயே நின்றிருந்தவளை ‘லெட்ஸ் கோ’ என்ற முத்துக்குமாரின் குரல் உலுக்கியது.

‘சரி, இனிமே எத்தனை நாள்ல பணம் வரும்?’ முத்துவின் தங்கை யாரிடமோ கேட்டாள்.

‘எலும்பெல்லாம் எடுத்துட்டாங்கல்லா? இனிமே ஆராய்ஞ்சி, ஒரு மாசத்துல சொல்லிருவாங்க. யாரு என்னான்னு?’

‘அதான் தெரியுமே, இது பெரிய தாத்தா, கீழ அத்தைப்பாட்டி,’

‘ஏட்டி, லூசா ஒனக்கு? நமக்குத்தாண்டி தாத்தா, பாட்டியெல்லாம். அவுக, இனிமேத்தான் கண்டுபிடிக்கணும்.. அவங்க தேடற முத்துராசா இவுகதானான்னு சொல்லணும்லா?’

‘இவருதான் அவருன்னு தெரியணும்னா, அவங்ககிட்ட அந்த முத்துராசாவோட மரபணுவெல்லாம் இருக்கோ? எப்படி பொருத்திப் பாப்பாங்க?’

‘வேற எதாவது தடயம் இருக்கும். நீ சும்மா இரி. தொணதொணங்காத. பைசா வாரச்சே, ஒனக்கு பங்கு கொடுத்துருவம்’

‘எங்க வீட்டுக்காரரு ஸிட்டி வேணும்னாரு. நாந்தான் அக்கார்டு வேணுங்கேன்.’

முத்துக்குமாரும், லிண்டாவும் ஒன்றும் பேசாமல் நடந்தனர்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com