சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆதரவாளர்கள் போல் நடித்து அவர் இல்லத்துக்குள் நுழைந்து சங்கு ஊதியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை போயஸ் கார்டனில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தங்கியுள்ள இல்லத்திற்கு நேற்று நள்ளிரவு பத்து பேர் அவரது புகழ்பாடியபடி வந்தனர். வீட்டின் முன்பு நின்று சசிகலாவை வாழ்த்து பாட்டுப்பாடினர்.
தொடர்ந்து வீட்டிற்குள் சென்று சசிகலாவைச் சந்தித்து வாழத்துகூற அவர்கள் விரும்பினர். அதற்கு அப்பகுதியில் இருந்த காவலர்கள் முதலில் அனுமதி மறுத்தனர். பின்னர், வாழ்த்து தெரிவிக்கத்தானே கோருகிறார்கள் என்று உள்ளே அனுமதித்தனர். ஆனால், உள்ளே சென்றதும் அவர்கள் சங்கு ஊதி சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டு பாடினர்.
வி.கே.சசிகலாவின் தொண்டர்கள் போல் நாடகமாடி பின் போயஸ் கார்டனுக்குள் நுழைந்து சங்கு ஊதிய அந்த பலே நடிகர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் போரூரைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையில் தெரிந்துள்ளது.