உலகம் முழுவதுமே தலைமுறை வித்யாசங்களின்றி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து பதிவாகிக் கொண்டே தான் இருக்கின்றன. 80 களில் இருந்தது. 90 களில், 2000 ல் இன்று 2017 ல் என எப்போதும் மாறாத் தன்மையுடன் அது தனது கோர முகம் காட்டி பல் இளிக்கத் தவறுவதில்லை. இத்தகைய வன்முறைகளை ஒடுக்க அரசு கடுமையான சட்டங்கள் இயற்றினால் ஒழிய அதற்கொரு விடிவு காலம் வரப் போவதே இல்லை.
நினைத்துப் பார்க்கவே அஞ்சும் கொடூரத்தை ஒரு பிஞ்சுப் பூவின் மீது நிகழ்த்தி விட்டு ஒரு குற்றவாளி தன்னை மனநலம் தவறியவன் என நிரூபித்து குற்றத்திலிருந்து விலக்குப் பெற முடியுமென்றால் இங்கு எதற்கு மக்களைக் காப்பதற்கான சட்டங்களும்? நியாயங்களும், தர்மங்களும் வகுக்கப்பட வேண்டும்? உண்மையில் இப்போது மனநலம் குன்றிய நிலையில் இருப்பவர்கள் என கொடுமைக்கு ஆளான குழந்தையின் பெற்றோர்களைத் தான் சொல்ல வேண்டும். எதை எண்ணியும் இனி அவர்களால் ஆறுதலடைய முடியாதே!
நீதிமன்றப் படியேறி தங்களது குழந்தைக்கு நிகழ்ந்து விட்ட அநீதிக்காகப் போராடுவதை விட பெற்றோர்கள் அனைவரும் இனிமேல் இப்படியான குற்றச் செயல்களுக்கு எதிராக குற்றவாளியை நேரடியாகத் தாங்களே தண்டித்து விட ஆவண செய்யப்படலாம். ஏனெனில் ஒரு அப்பாவிக் குழந்தையை கொன்று விட்டு எனக்கு மனநலம் இல்லை என்று வழக்கிலிருந்து ஒருவர் தப்ப வழியிருக்கும் போது பெற்றோர்களும் அதையே காரணமாக்கி குற்றவாளியைத் தண்டித்து விட்டு வழக்கிலிருந்து தப்ப முடியாதா என்ன? சட்டத்தின் ஓட்டைகள் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை அம்மாதிரியான நிலைக்குத் தள்ளாமலிருக்க வேண்டும்.
ஹாசினி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்தும், தண்டனையிலிருந்தும் எந்தக் காரணம் கொண்டும் தப்பி விடக் கூடாது எனும் ஆதங்கம் பெண் குழந்தைகளைப் பெற்ற அத்தனை பெற்றோர்களையும் இப்போது வாட்டிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கானது இந்தச் சிறுகதை;
குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் எப்படியெல்லாம் நிகழ வாய்ப்புகள் இருக்கின்றனவோ, அதில் ஒரு வாய்ப்பு இது. இதில் வரும் கிருஷ்ணி , ஹாசினியாகவில்லை. ஆனால் அதற்கொரு வாய்ப்பு இருந்தது என்பது நிஜம்.
இனி கதைக்குச் செல்லலாம். 90 களில் நானறிய நேர்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் மீதான புனைகதையே இந்தக் ‘கிருஷ்ணி’
‘கிருஷ்ணி’ - சிறுகதை
கிருஷ்ணி கடலலைகளைப் போல ஓயாது பேசிக்கொண்டே வந்தாள்.
நல்ல வெயில் நேரத்தில் குளத்தின் அடியில் வெது வெதுப்பாகவும் மேலே சில்லென்றும் உணரவைக்கும் நீரின் மாயாஜாலம் அவள் குரலுக்கும் இருந்தது. குளத்துக் குளியலைப் போல அவள் குரல் கேட்க கேட்க மயக்கம் தருவதாய் அவளில் லயித்துப் போயிருந்தேன் நான்.
குடியிருப்புப் பகுதி தாண்டி நகரின் ஒதுக்குப் புறத்தில் இருக்கும் ஜிப்சம் பேக்டரியை சுற்றிப் பார்க்க வேண்டுமென்று அவளாகத்தான் என்னுடன் கிளம்பி வந்தாள். என் சைக்கிள்ளில் தான் போய்க் கொண்டு இருக்கிறோம்.
முன்புறம் உட்கார்ந்து கொள்ளச் சொன்னதற்கு ,
"வேண்டாம் நான் கீழ விழுந்துடுவேன்..."
கருப்பு ரிப்பனில் தூக்கிக் கட்டிய ரெட்டை ஜடைகளில் ஒன்று முன்புறமும் மற்றொன்று முதுகிலும் துள்ளி விழ, நீல நிற பாலிஸ்டர் யூனிபார்ம் பாவாடை அழுந்த பின்புற கேரியரில் குதித்து ஏறி அமர்ந்து கொண்டாள். பிஞ்சென்று வகுக்க முடியாது. சிரிக்கையில் பூவாய் முகம் விரிந்தாலும் இவள் பூவில்லை.
என் போன்ற கல்யாணம் கழிந்தும் பிரம்மச்சரியம் அனுஷ்டிக்கும் கட்டாயத்தில் உழல்பவன் கண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் பழுக்கக் காத்திருக்கும் காய் தான். திட்டாதிர்கள் நினைப்பதைச் சொன்னேன்.
சைக்கிள் முன்புறக் கம்பியில் உட்காராத கிருஷ்ணியை மனதிற்குள் திட்டிக் கொண்டே ஹார்மோன்களை சபித்துக் கொண்டு வேகமாக பெடலை மிதித்தேன்.
மெயின் ரோடில் இருந்து பிரியும் செம்மண் பாதை, ஆளரவமே இல்லை, இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தூரம் போனால் தான் ஜிப்சம் பேக்டரி வரும். மெல்லத் தூண்டில் போட்டுப் பார்க்கும் ஆசையில் ...மீன் மாட்டினால் மீன்!... இல்லையேல் கற்பனை பிடிக்கவில்லை.
கிருஷ்ணி பக்கத்துல தான் நான் தங்கி இருக்கற ரூம், அங்க போயிட்டு போலாமா?!
சன்னமான யோசனையுடன் ,
அங்கிள் உங்க ரூம் இங்கயா இருக்கு? சிட்டிக்குள்ள இல்ல இருக்கிங்கன்னு சொன்னாங்க அமுதா ஆன்ட்டி!
ஒரு சிறுமியின் கேள்வி மிதக்கும் கண்கள் என்னைக் குற்றவாளியாக்கி விடும் வாய்ப்பு... தப்பித்து விடும் வேகத்தில் ,
ஆமா ஆனா இங்கயும் ரூம் இருக்கு, பேக்டரி இங்க இருக்குல்ல, நைட் லேட் ஆச்சுனா ரெஸ்ட் எடுக்க இந்த ரூம், என் பிரெண்ட் தங்குவான் ...
சும்மா ஒரு 10 மினிட்ஸ் அங்க போயிட்டுப் போலாமா? சமாளித்தேன்.
வேண்டாம் அங்கிள் அங்க போயிட்டு போக லேட் ஆயிடும், அம்மா திட்டுவாங்க. (சுலபமாய் மீன் நழுவியது.)
சும்மா ஒரு காப்பி சாப்பிட்டுப் போலாம்னா வேண்டாங்கற... நான் நல்லா காபி போடுவேன் தெரியுமா?
படிப்பது ஏழாம் வகுப்பு தான் , பாலில் விழுந்த திராட்சையாய் மிதக்கும் கருவிழிகள், அகஸ்மாத்தாய் கைகள் படும் போதெலாம் இளநீரின் சில்லிப்பை உணர்த்தும் இதமான ஸ்பரிசம், ஈரம் மினுங்கும் பன்னீர் ரோஜாக்களாய் பரிசுத்த உதடுகள். தேகமெங்கும் இழுத்துக் கட்டிய வில்லின் நிமிர்வு, புதிதாய் வரையப் பட்ட வளைவுகளும் நெளிவுகளும், சிறுமி தான்... வளரிளம் சிறுமி... அதனாலென்ன! இத்தனை வனப்பாய் என் கண்ணை உறுத்தியது அவள் குற்றமே!
தூரத்தில் ஜிப்சம் பேக்டரி மரங்களின் நடுவில் கண்ணில் பட்டது.கிருஷ்ணி முதன் முதலில் என் கண்ணில் விழுந்ததைப் போல,
அங்கிள் அந்த பில்டிங் தான ?
முகம் முழுக்க சிரிப்பை விதைத்துக் கொண்டு கிருஷ்ணி கேட்டாள், அமுதா ஆண்ட்டியோட அங்கிள் இருப்பாங்க இல்ல அங்க?
ஜிப்சம்னா என்ன? அது எதுக்கு யூஸ் பண்றாங்க? அதனோட மூலப் பொருள் எது? அது இந்தியால எங்க அதிகமா கிடைக்கும்? எல்லா கேள்விக்கும் பதில் தெரியும் எனக்கு, ஆனா கூட இந்த ஜிப்சம் கல்லையும் எடுத்துட்டுப் போய் காட்டினா எங்க ஜியாகிரபி மிஸ் என்னை ரொம்ப பிரைஸ் பண்ணுவாங்க தெரியுமா?
ஹை... நாளைக்கு நான் ஜிப்சம் கொண்டு போவேனே ஸ்கூல்க்கு. ஹை...ஹை..ஹை புஷ்பா தோத்துப் போவா பாருங்க, நாளைக்கு நான் தான் ‘வின்’ பண்ணுவேன்.
நான் அவளை இளம் பெண்ணாக வரைய முயல சித்திரம் அறியாச் சிறுமியையே மீண்டும் மீண்டும் காட்டிக் காட்டி இம்சித்தது.
நேரம் கரைகிறதென்ற பிரஞ்ஞை இருந்தும் என்ன செய்து விட முடியும்?!
அங்க பாருங்க அங்கிள்... அமுதா ஆண்ட்டியோட அங்கிள் வரார். கிருஷ்ணி சைக்கிளை நிறுத்தும் முன் குதித்து இறங்கி பாக்டரிக்குள் ஓடினாள்.
முகம் வரவேற்று சிரிப்பதாய் தோன்றினாலும் "என்னப்பா இது வில்லங்கம்?!" ரீதியில் என்னிடம் வந்த அமுதாவின் கணவன் ;
வா கணேசா... கிருஷ்ணி ஏன் உன்கூட வந்திருக்கா, இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த? என்றான்.
ஜிப்சம் வேணுமாம்... ஸ்கூல்ல காட்டணும்னு கேட்டா அதான் இங்க இருக்குன்னேன், கூட வந்துட்டா.
கடற் கிளிஞ்சல்களாய் கலர் கலராய் குன்று போல சிதறிக் கிடந்த ஜிப்சக் குவியலில் சின்னதும் பெருசுமாய் சிலவற்றை கிருஷ்ணி தேடித் தேடி எடுத்து பிளாஸ்டிக் பையில் சேகரித்துக் கொண்டாள்.
இது எதுக்கு கிருஷ்ணி ஒனக்கு?! சம்பிரதாயமாய் அவன் ஏதோ கேட்டு விட்டு பதிலை எதிர்பாராதவனாய் ,
நேரமாகுது... சீக்கிரமா கொண்டு வீட்ல விட்று, அமுதா எப்பிடி ஒன்கூட அனுப்பினா இவள?! நட்பின் இலகுவில் நோகாது அவன் கேட்க .
அவ தான் என்னை கூட்டிட்டு வந்தா வழி காட்ட, நீ என்னப்பா இப்பிடிக் கேட்கற! சிரித்தேன் நான்.
பாம்பின் கால் பாம்பறியும்.
இருட்டப் போகுது கணேஷா... பத்திரமா கொண்டு போய் வீட்ல விட்று,
கிருஷ்ணியின் அமுதா ஆன்ட்டி என் நண்பனின் மனைவி, அவன் வீட்டுக்கு அடிக்கடி போகும் ஆசையை என்னுள் பதித்ததில் நண்பனை விட பக்கத்து வீட்டுச் சிறுமியான இந்தக் கிருஷ்ணிக்கு தான் பெரும் பங்கு.
அமுதா நல் மனையாள் இலக்கணம் பிசகாதவள், என்னை கணவனின் நண்பன் எனும் கோட்டிற்குள் நிறுத்தக் கற்றிருந்தாள். இப்போதும் கிருஷ்ணி என்னுடன் வந்ததை அவள் அத்தனை ரசிக்கவில்லை என்பதை அறிந்தே இருக்கிறேன் நான்.,
"கிருஷ்ணி... பயமறியாக் கன்று" ருசி கண்ட பூனையுடன் ஒரு பச்சைக் கிளியாக்கும்?! எனக்கே சகிக்கவில்லை என் கற்பனைகள்.
சந்தர்பங்களை நொந்து நண்பனிடம் சொல்லிக் கொண்டு கிருஷ்ணி பின்புற கேரியரில் அமர வீட்டுக்குப் போகும் பாதையில் சைக்கிளை விட்டேன் .
குளிரத் தொடங்கி இருந்தது. உடலைக் குறுக்கிக் கொண்டு பெடலை மிதித்தேன். சட்டைப் பையில் செல்...
‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை" யாய் கிணு கிணுத்து கிறங்கடிக்க...
என் மனைவி தான் உற்சாகமாய் எடுத்துப் பேசினேன்.
‘சொல்லுடா...’
‘....................................’
‘இன்னும் ரூம்க்கு போகலப்பா நான்...’
‘.....................................’
‘இனிமே தான் சாப்பிடனும் ராகவனோட ஜிப்சம் பேக்டரில இருந்து இப்ப தான் கிளம்பறேன்...’
..................................
‘ம்...சரி...நீ சாப்பிட்டியா?’
‘..........................................................’
‘சரிடா... ரூம்க்கு போனதும் கூப்பிடறேன். வச்சுடவா!...’
.........................
‘அங்கிள் உங்க வீட்டு ஆன்ட்டியா?’ கிருஷ்ணி தான்.
‘ம்...ஆமாம்.’
‘அவங்கள ஏன் ஊர்ல விட்டுட்டு வந்துட்டிங்க?’
‘அவங்க அங்க வொர்க் பண்றாங்களே! ஒடனே இங்க மாத்திக்க முடியாது. அதான்.’
‘ஓ...’ புரிந்தவளைப் போல ஜிமிக்கிகள் அசைய அவள் தன் சின்னஞ்சிறு தலையை ஆட்ட ...
‘ம்...’ என்றேன்.
அடுத்ததாய் ... ‘ம்...எங்க அம்மாவப் போல இல்ல?!’
சின்னக் கேள்வி தான் ஆனாலும் சுக்கு சுக்காய் உடைந்தேன் நான்.
‘இந்த மாசம் அப்பா வருவாரே லீவ்ல... எங்களுக்கு ஒரே ஜாலி தான்.’
கிட்ட வரத் தொடங்கியிருந்த குடியிருப்புகளின் வெளிச்சத்தை நோக்கி இருளுக்குப் பயந்தவனைப் போல வேக வேகமாய் பெடல் மிதித்தேன்.
பாட்டியின் நிழல் கண்டதும் சந்தோசமாய் பிடி நழுவாமல் ஜிப்சப் பையை எடுத்துக் கொண்டு உள்ளே ஓடினாள் கிருஷ்ணி.
Image courtsy: pinterest