தினமும் காலையில் எழுந்தவுடன் நம்மில் அனேகம் பேர் தேடுவது மொபைல் போனைத்தான். அதிலுள்ள வாட்ஸ்அப்பில் வந்து குவியும் காலை வணக்கத்துக்கு பதில் வணக்கமும் போட்டுவிட்டுத்தான் நாளைத் துவங்குவோம். நேரில் சந்திக்க முடியாதவர்களிடம் வாட்ஸ்அப் நலம் விசாரணைகள், தொலைதூரத்தில் இருப்பவர்களுடன் விடியோ சாட் என்று அனைவரும் அதன் பல பயன்பாடுகளை தினமும் பிரயோகித்து வருகிறோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்று தகவல் வந்தது. கிட்டத்தட்ட 200 மில்லியன் பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ் அப்பில் இந்த பண வர்த்தகங்கள் தொடங்கவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது பத்து லட்சம் பயனாளர்கள் இதில் சோதனை முறையில் வாட்ஸ்அப் பேமன்ட் வசதியை பயன்படுத்த உள்ளனர்.
வாட்ஸ்அப் நிர்வாகிகள் இதுகுறித்து கூறுகையில், 'இந்தியாவில் இந்த வசதியை 10 லட்சம் பயனாளர்கள் சோதனை முறையில் பயன்படுத்த முடியும். பண பரிவர்த்தணைகளை எளிமைப்படுத்தும் வகையில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் பிறகு பணம் அனுப்புவது ஒரு மெசேஜை அனுப்புவது போல மிக சுலபகிவிடும். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது’ என்றார்.
அனைத்து வங்கிகளுடனும் சுலபமான பரிவர்த்தணை செய்ய UPI (ஒருங்கிணைந்த பரிவர்த்தணை முகமை) மற்றும் NPCI (தேசிய பண பரிவர்த்தணை சங்கத்திடம் ) ஒப்புதல் பெற்றுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். இனி நாம் வாட்ஸ்அப் மூலமாகவே யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம், பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த சோதனை இயக்கம் முடிந்தபின், மேற்கொள்ள வேண்டிய சிற்சில மாறுதல்களுடன் விரைவில் வெளியாகும் என்றனர் வாட்ஸ் அப் நிறுவனத்தினர்.