புத்தாண்டுப் பலன்கள் 2017: சிம்மம், கன்னி, துலாம், விருட்சிகம்!

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கான புத்தாண்டுப் பலன்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சிம்மம்
(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
 

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் தீராத பிரச்னையாக இருந்த விஷயம் தீர்ந்து விடும். எதிர்காலத்திற்காகப் போடும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறக் காண்பீர்கள். போட்டியாளர்களின் சதிகளை புதிய யுக்திகளை மேற்கொண்டு தகர்ப்பீர்கள். பூர்வீகச்சொத்து சம்பந்தமாக பங்காளிகள் கொடுத்திருந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரும். வருமானமும் படிப்படியாக உயரத்தொடங்கும். மனதிற்கினிய பயணங்களை குடும்பத்துடன் மேற்கொள்வீர்கள். குழந்தைகள் உங்கள் பேச்சிற்கு கட்டுப்பட மாட்டார்கள். அதனால் அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை நல்வழிப் படுத்தவும். மேலும் அனாவசியக் கடன்களையும் வாங்க வேண்டாம். கிடைத்தற்கரிய சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். மேலும் புதிய வாய்ப்புகளையும் நழுவ விடமாட்டீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தை பாக்கியம் ஆகிய இரண்டும் கைகூடும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். மேலும் உங்கள் தைரியம் பளிச்சிடும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கியம் மற்றும் மனவளம் சிறப்பாக இருக்கும். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். நவீன ஆராய்ச்சிகளிலும் மனம் ஈடுபடும்.  

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் தன்னம்பிக்கையுடன் சோதனைகளை கடந்து வெற்றிவாகை சூடுவீர்கள். சிறிய விஷயங்களையும் பெரிதாகப் பேசும் நண்பர்களை விலக்கி விடுவீர்கள். ரகசியங்களை பிறர் அறியாவண்ணம் காப்பீர்கள். செயல்களை குறுக்கு வழிகளைத் தவிர்த்து நேர் வழியிலேயே செய்வீர்கள். கடினமான விஷயங்களிலும் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பீர்கள். உங்களின்கீழ் வேலை செய்பவர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ள மாட்டீர்கள். தாய்வழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். துணிச்சலாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அனைத்து விஷயங்களையும் அனுபவ ரீதியாக அணுகுவீர்கள். வீடு மற்றும் வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவுகள் செய்ய வேண்டி வரும். உடன்பிறந்தோர் முழுமையான ஆதரவு தரமாட்டார்கள். அவர்களுக்காக சிறிது செலவு செய்யவும் நேரிடும். கடன் வாங்கக் கூடிய நிலைமைகள் ஏற்பட்டால் தேவைக்கு மட்டுமே வாங்கவும். குழப்பங்களைத் தவிர்க்க தலைமையை நாடுவீர்கள். தியானம், பிராணாயாமம் போன்றவைகளையும் கற்றுக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.


உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட பணிகளை உடனுக்குடன் முடிக்கும் சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வும் தடையில்லாமல் கிடைக்கும். வருமானம் வளரத்தொடங்கும். சிறிய உழைப்பில் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். விழிப்புடன் இருந்து காரியமாற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபாரிகள் போதிய அக்கறை செலுத்தி வியாபாரத்தைப் பெருக்கவும். வியாபாரத்தில் எந்த முடிவையும் கூட்டாளிகளிடம் ஆலோசித்த பின்னரே எடுக்கவும். இல்லையெனில் சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் அதிக செலவுகள் ஏற்படும். கால்நடைகளால் பெரிய லாபத்தை எதிர்பார்க்க முடியாது. பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு சில நேரங்களில் கிடைக்கும். அதனால் கட்சி மேலிடத்திற்கு தகவல் அனுப்பும்போது அவர்களது எண்ணங்களை அறிந்து எச்சரிக்கையுடன் அனுப்பவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்ங்களைப் பெறுவதில் சற்று சிரமம் இருக்கும். அனைத்தையும் போராடியே பெறவேண்டி இருக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவு உற்சாகம் தரும். பெண்மணிகளுக்கு முன்பிருந்த அனைத்துக் குழப்பங்களும் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலையை காண்பார்கள். திருமணமாகாத பெண்களுக்கு இந்த ஆண்டு திருமணம் கைகூடும். குழந்தைபாக்கியத்திற்குத் தவம் கிடந்தவர்கள் அந்த வாய்ப்பினைப் பெறுவார்கள். மாணவமணிகள் கல்வியில் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற மதிப்பெண்களை அள்ளலாம். விளையாடும் நேரத்தில் காயம் படாமல் இருக்க, கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.

••••

கன்னி
(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

 

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நல்லவர்களின் நட்பு தேடி வரும். அவர்களால் பழைய சிக்கல்கள் தீர்ந்துவிடும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் உதவிகளைப் பெற்று நலமடைவார்கள். பொருளாதார நிலை உயரும். அரசு அதிகாரிகள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிலும் சிந்தித்து நல்ல முறையில் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும்முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்கவும். தெய்வ காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். நெடுநாளாக நடக்காமல் இருந்த பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். உங்கள் மனதில் தன்னம்பிக்கை குடிகொள்ளும். உங்களுக்கு உறுதுணையாக நண்பர்களைச் சேர்த்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் புதிய சூழ்நிலைக்கு உங்களை பழக்கப்படுத்திக் கொள்வீர்கள். அனைத்து விஷயங்களையும் நடைமுறைக்கு ஏற்றவாறு பார்ப்பதால் கஷ்டங்கள் எதையும் சந்திக்க மாட்டீர்கள். நீண்டகால லட்சியங்கள் கனவுகள் நிறைவேற அடித்தளம் அமைத்துக் கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எதிர்பாராத பணவரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு எதுவும் உண்டாகாது. செய்தொழில் விறுவிறுப்பாக நடக்கும். புதிய முயற்சிகளை சிறப்பாக செயல்படுத்துவீர்கள். அனைத்து புதிய வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்தும் கௌரவமும் உயரும். பெற்றோரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும்.பிள்ளைகள் சொல்பேச்சு கேட்டு நடப்பர். போட்டியாளர்களின் தொந்தரவுகள் மறையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். ஆலய திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். பங்குவர்த்தகத்தின் மூலமும் லாபம் வரக்காண்பீர்கள். புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். குறிக்கோள்களை அடைவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். நெடுநாளாக விற்க முடியாமல் கஷ்டப்பட்ட நிலம் இந்த காலகட்டத்தில் நல்ல விலைக்கு விற்கும். மனதில் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கணக்கு வழக்குகளை சரியாகச் சமர்ப்பிக்கவும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பழைய கடன்களையும் முழுமையாக திருப்பிச் செலுத்தி விடுவீர்கள் என்றால் மிகையாது.


உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சரியாகச் செய்தாலும் செய்யாத தவறுகளுக்காக மேலதிகாரிகளின் கண்டனத்திற்கு ஆளாவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு வாய்ப்புகள் நழுவிப்போகலாம். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரிகள் அதிகமாக விற்பனை செய்தும் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியாமல் போகும். சிலருக்கு நண்பர்களுடன் பகை ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தற்சமயம் நடத்திவரும் தொழிலை அக்கறை மற்றும் பொறுமையுடன் செய்வது நல்லது. கடன் கொடுத்து வியாபாரத்தை பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவு விளைச்சல் இருக்காது. ஆகவே கடன் வாங்குவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். கால்நடைகளுக்கு நோய் பாதிப்பும் அதனால் மருத்துவச்
செலவும் உண்டாகும்.

அரசியல்வாதிகள் பெரிய அளவிலான பதவிகளைப் பெற வாய்ப்பு இருக்காது. இந்த ஆண்டு கட்சி மேலிடத்தின் பார்வையிலிருந்து ஒதுங்கி நின்று செயல்படவும். எந்த முடிவையும் தீவிரமாக ஆலோசித்து எடுத்தால் கெட்டப்பெயர் ஏற்படாமல் தப்பிக்கலாம். கலைத்துறையினருக்கு சிறப்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அனைத்து தடைகளையும் திறமையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். திறமைகளுக்கு தக்க அங்கீகாரம் கிடைக்கும். பெண்மணிகள் கணவரிடம் பாராட்டுகளைப் பெறுவார்கள். ஆடை ஆபரணங்களையும் வாங்குவார்கள். மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படித்தால் எதிர்பார்த்த பலனை அடையலாம். நண்பர்களால் பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியரை வழிபட்டு வரவும்.

•••

துலாம்
(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

 

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு வலிய சென்று உதவி செய்வீர்கள். இதனால் பகைமை பாராட்டுபவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். உங்கள் பேச்சாற்றல் கூடும். வருமானம் படிப்படியாக உயரும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் தேடிவரும். கடின உழைப்பை மேற்கொண்டாலும் தேவையான ஓய்வெடுத்துக் கொள்வீர்கள்.

அறிமுகமில்லாதோரின் ஆதரவும் நன்மைகளைத் தேடித்தரும். செய்தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். உங்கள் செல்வாக்கும் உயரும். வம்பு வழக்குகள் சாதகமான முடிவுக்கு வரும். உடன்பிறந்தோர் கோபப்பட்டாலும் நீங்கள் பொறுமையை கடைப்பிடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. செயல்களை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல ஆற்றல் உண்டாகும். சிறிது சிரமங்களுக்குப்பிறகு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் புதிய அனுபவங்களையும் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்களுக்கென தனியான இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்ப குழப்பங்களைத் தீர்க்க, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பயன்படும். பழைய விட்டுப்போன உறவுகளைப் புதுப்பித்து உங்கள் கௌரவம் உயரக் காண்பீர்கள். செய்தொழிலை மேம்படுத்த அடிக்கடி பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். அனைத்துச் செயல்களிலும் மனத் தைரியமும் உறுதியான சிந்தனைகளும் உருவாகும். உங்கள் முயற்சிகளில் பங்கு கொள்ள பலர் முன்வருவார்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களும் பணிவாக நடந்து கொள்வார்கள். உடல் நலமும் மேன்மையாகவே இருக்கும். யோகா பிரணாயாமம் போன்றவற்றையும் கற்றுக்கொள்வீர்கள். தடைபட்டிருந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். களவு போயிருந்த பொருள்களும் திரும்பக் கிடைக்கும். தீயவர்களின் சகவாசத்தை விலக்கி விடுவீர்கள். எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம்.



தாழ்வுமனப்பான்மையை தவிர்த்து விடுங்கள். எவருடனும் வீண் விவாதமோ, வாக்குவாதமோ வேண்டாம். எவருக்கும் இந்த காலகட்டத்தில் கடன் கொடுக்க வேண்டாம். அதோடு உங்கள் பெயரிலும் பணம் வாங்கிக் கொடுக்கக் கூடாது.  
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்க சற்று அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைப்பதால் வேலைப்பளு சற்று குறையும். கோரிக்கைகள் நல்லபடியாக நிறைவேறும். இந்த ஆண்டு இடமாற்ற முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் பணப்பிரச்னையும் மனக்கஷ்டமும் அடைவார்கள். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வெளியிலிருந்து வரக்கூடிய பணம் விஷயமாக சற்று சிரமம் இருக்கும். கடன் வாங்காமல் தொழிலில் சிக்கனம் கடைப்பிடிக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் எதிர்பார்த்த அளவு இருக்காது. கால்நடைகளும் எதிர்பார்த்த வருமானத்தைத் தராமல் போகலாம். பழைய குத்தகைகளைச் சரிவர முடித்து அதற்கான லாபத்தைப் பெறுவதே சிறப்பு. சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கத் தாமதமாகும். அதனால் யாரையும் நம்பி எந்த வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். உங்கள் பணிகளை மற்றவர்கள் செய்யும்போதும் கவனமுடனிருங்கள். கலைத்துறையினருக்கு இந்த ஆண்டு சற்று ஆறுதலைக் கொடுத்தாலும் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டிருக்கும். உடல் ஆரோக்கியம் சீர்படும். சக கலைஞர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பெண்மணிகள் திருமணம், வேலை, குழந்தைப்பேறு என்று எல்லா நிலைகளிலும் சிறிது காலம் சிரமத்தைக் காண்பார்கள். பேசும்போது சுமுகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வீண்பழி மற்றும் கெட்ட பெயர் ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள். மாணவமணிகள் கல்வியில் அதிக அக்கறை செலுத்தவும். எந்த பாடத்தையும் பலமுறை படித்து மனப்பாடம் செய்யவும்.

பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும்.

•••

விருச்சிகம்
(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய
)

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சோம்பலின்றி சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். எதிரிகளின் கை தாழ்ந்து உங்கள் கை உயரும். உங்கள் காரியங்கள் அனைத்தும் நன்மையாகவே முடிவடையும். உங்களை ஒதுக்கி வைத்தவர்கள் மறுபடியும் உங்களிடம் வந்து சேர்வார்கள். நண்பர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் பக்குவமாகப் பேசி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். "கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் செயல்களில் கவனம் சிதறாமல் செயல்படுவீர்கள். வெளியிடங்களில் கௌரவமாக நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து உயரும்படியான சம்பவங்கள் நடக்கும். உடல்நலமும் மனநலமும் சீராக இருக்கும். நெடுநாளாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்த வியாதிகள் முழுவதுமாகத் தீர்ந்து விடும். வருமானம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும். மிகவும் நலிந்தவர்களுக்கு பணஉதவி செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வ காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். குலதெய்வ வழிபாட்டையும் இந்த காலகட்டத்தில் மேற்கொள்வீர்கள். குழந்தைகளின் வளர்ச்சியும் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே இருக்கும்.  



செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எதிலும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. நண்பர்கள் உற்றார் உறவினர்களாலும் சில பிரச்னைகள் ஏற்படும். அதனால் அவர்களிடம் கூடிய வரை வீண் சர்ச்சைகளையும் வாக்குவாதங்களையும் தவிர்த்து நேசத்துடன் பழகவும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். உழைப்பைக் கூட்டிக்கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு வீண் போகாது. நல்ல நெறிமுறைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். எதிலும் வேகத்தைக் குறைத்துக் கொள்வதோடு விவேகத்தையும் கூட்டிக் கொண்டு செயல்பட்டால் தோல்விகளையும் தவிர்த்து வெற்றிகளைக் காணலாம். சிலருக்கு குடும்பத்தில் சற்று கூடுதலான அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். கண், வயிறு போன்றவற்றில் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழப்பங்களையும் சஞ்சலங்களையும் தவிர்க்க தனிமையை நாடுவீர்கள். சமயோசித புத்தியால் எதிர்வரும் இடையூறுகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்திலும் சுபச் செலவுகளைச் செய்வீர்கள். உங்கள் செயல்களை தகுந்த முறையில் திட்டமிட்டு கச்சிதமாக முடிக்க முயற்சி செய்யவும். வீடு மனை போன்ற ஸ்திர சொத்துக்களை வாங்குவதையும் தள்ளி வைக்கவும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முழுமையாகச் செய்து முடிக்க முயற்சி செய்யவும். மேலதிகாரிகளின் வெறுப்புகளுக்கு ஆளாகாமல் தப்பிப்பீர்கள். பிரச்னைகளும் தடைகளும் வராமல் இருக்க சற்று ஒதுங்கியே இருக்கவும். பணியாற்றும் நேரத்தில் பொறுமை தேவை. அத்தியாவசியப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ளவும். சக ஊழியர்களை பெரிதாக நம்ப வேண்டாம். வியாபாரிகள் போதிய அக்கறை செலுத்தி வியாபாரம் செய்வர். எந்த முடிவுகளையும் கூட்டாளிகளை கலந்தாலோசித்த பின்னரே எடுக்கவும். வெற்றிகள் தாமதமாக வரும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்களைச் செயல்படுத்துங்கள். விவசாயிகள் உடலாரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கால்நடை பராமரிப்புகளுக்காக செலவுகள் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சில நேரங்களில் கட்சித் தலைமையின் ஆதரவு கிடைக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். எதிரிகளின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் காலதாமதம் ஏற்படும். இதனால் சில இடையூறுகளும் உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதோ முன்ஜாமீன் போடுவதோ கூடாது. கலைத்துறையினரின் பெயரும் புகழும் அதிகரிக்கும். நல்ல பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்கவும். புதிய ஒப்பந்தங்கள் தானாகவே கிடைக்கும். பல நாள்களாக வராமலிருந்த தொகை தற்போது கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்திற்காக விட்டுக்கொடுத்து நடந்துகொள்வர். குடும்ப விஷயங்களில் யோசித்து நடந்துகொள்ளவும். பிறருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை பெறுவர். பெற்றோர், ஆசிரியரின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சோம்பேறித்தனத்தை விட்டொழித்து சுறுசுறுப்பாக பாணியாற்றுவீர்கள். விளையாட்டுகளில் சாதனை செய்வீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும்.

•••

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com