காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் பங்குனி மாதம் நடைபெறும்.
இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கடந்த 17-ஆம் தேதி கடைவெள்ளி உற்சவமும், 18-ஆம் தேதி செல்வர் உற்சவமும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, மார்ச் 21-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பங்குனி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை வியாழக்கிழமை காலை 6 மணியளவில் நடைபெறும். இதில், யதோக்தகாரி பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மார்ச் 27-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். அன்று காலை 6 மணியளவில் உற்சவர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மார்ச் 30-ஆம் தேதி கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை நல்லப்பா பாஷ்யகாரர் பரம்பரை தர்மகர்த்தாக்கள் செய்துள்ளனர்.