ராமானுஜர் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேஷவப் பெருமாள் கோயிலில் உள்ள அவதார மண்டபத்தைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேஷவப் பெருமாள், பாஷ்யகார சுவாமி கோயிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக (உற்சவர்) அருள்பாலித்து வருகிறார்.
ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு அவதார உற்சவம் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி மே 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு, ராமானுஜர் கோயிலில் உள்ள சிற்பங்கள் மற்றும் மண்டபங்களைச் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ராமானுஜர் கோயிலுக்கு எதிரே உள்ள அவதார மண்டபத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
மேலும், புராதனச் சின்னங்கள் மற்றும் கோயில்களை மறைக்கும் வகையில் உள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருப்பதால், கோயில் நுழைவாயிலின் இடதுபுறம் இருந்த 7 கடைகளை கோயில் நிர்வாகத்தினர் திங்கள்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.
மேலும், நுழைவாயிலின் இடதுபுறம் இருந்த சிறிய தேரை இடமாற்றம் செய்யவும், ஜெனரேட்டர் அறையை இடித்துவிட்டு கூரத்தாழ்வார் சந்நிதி அருகே ஜெனரேட்டருக்கு ஷெட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.