அனைத்துத் தபால்களும் காலதாமதமின்றி விநியோகிக்கப்படுகின்றன என்று தாம்பரம் அஞ்சல் துறை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
''ஆவடி கேம்ப், ஆவடி ஐஏஎஃப், சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தபால்கள் விநியோகம் முறையாகச் செய்யப்படுவதில்லை'' என 'தினமணி' ஆராய்ச்சிமணி பகுதியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வாசகரின் கடிதம் வெளியானது. இதற்கு தாம்பரம் கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் அளித்துள்ள விளக்கம்: ''வாசகரின் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. பட்டாபிராம், காமராஜ் நகர், திருமுல்லைவாயில், ஆவடி ஐஏஎஃப், ஆவடி ஐஏஎஃப் எஸ்ஓ (துணைத் தபால் அலுவலகம்)
ஆகிய தபால் பிரிப்பகங்களுக்கு வரும் தபால்கள் அனைத்தும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சிஆர்பி கேம்ப், ரயில்வே கார் ஷெட் காம்ப்ளக்ஸ் அஞ்சலகம் ஆகியவை அஞ்சலக பிரிப்பகங்கள் அல்ல என்பதால், வாசகரின் புகார் தவறானது. எனினும், தபால்கள் விநியோகம் தொடர்ந்து கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது'' என்று
முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் கூறியுள்ளது.