‘உன் பாதங்களை அறிந்துணர வேண்டும்’ என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாகிய அன்பைத் தந்தருள்வாயாக என்று வேண்டுகிற இந்தப் பாடல் வள்ளிமலைக்கானது.
ஓரடிக்கு ஒற்று நீக்கி 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். மெல்லொற்றுகளையே பிரதானமாகக் கொண்டமைந்த பாடல். இப்பாடலில் வல்லொற்று ஏதும் பயிலவில்லை. தொங்கல் சீரைத் தவிர்த்து மற்ற அனைத்துச் சீர்களிலும் குற்றெழுத்தே பயில்கிறது; நெடில் வரவில்லை. ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒற்றொழித்து நான்கெழுத்துகளைக் கொண்டவை. இவற்றில் கணக்கில் சேராத நான்காவது எழுத்தாக மெல்லொற்று பயில்கிறது; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஒற்றொழித்து மூன்று குற்றெழுத்துகளைக் கொண்டவை. இவற்றில் கணக்கில் சேராத இரண்டாம் எழுத்தும் நான்காம் எழுத்தும் மெல்லொற்றாக அமைந்துள்ளன.
தனதந்த தந்தனந் தனதந்த தந்தனந்
தனதந்த தந்தனந் தனதான
சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்
சலமென்பு திண்பொருந் திடுமாயம்
சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்
தழலின்கண் வெந்துசிந் திடஆவி
விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந்
துயர்கொண்ட லைந்துலைந் தழியாமுன்
வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
வினவென்று அன்புதந் தருள்வாயே
அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண்
டமரஞ்ச மண்டிவந் திடுசூரன்
அகலம்பி ளந்தணைந் தகிலம்ப ரந்திரங்
கிடஅன்று டன்றுகொன் றிடும்வேலா
மரைவெங்க யம்பொருந் திடவண்டி னங்குவிந்
திசையொன்ற மந்திசந் துடனாடும்
வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்
வரநின்று கும்பிடும் பெருமாளே.