‘உன்னுடைய தாமரைப் பாதத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கோருகிற இந்தப் பாடலும் விரிஞ்சிபுரத்துக்கானது. இத்தலம் வேலூருக்கருகிலுள்ள காட்பாடியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறோம்.
அமைப்பு முறையில் ஒற்றொழித்து அடிக்கு 28 எழுத்துகளைக் கொண்ட பாடலிது. 1, 4, 7 ஆகிய சீர்கள் ஒற்றொழித்து மூன்றெழுத்துகளைக் கொண்டவை; 2, 5, 8 ஆகிய சீர்களில் ஒற்றொழித்து இரண்டெழுத்துகளும், இரண்டாம் எழுத்து மெல்லொற்றாகவும் அமைந்துள்ளது; 3, 6, 9 ஆகிய சீர்களில் மூன்றெழுத்துகள் பயில்கின்றன; முதலெழுத்து நெடிலாகத் தொடங்குகிறது.
தனன தந்த தானன தனன தந்த தானன
தனன தந்த தானன - தனதான
நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு
நெகிழ வந்து நேர்படு - மவிரோதம்
நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர
நிருப அங்கு மாரவெ - ளெனவேதம்
சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
சமய பஞ்ச பாதக - ரறியாத
தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
சரண புண்ட ரீகம - தருள்வாயே
மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி
மறுகி வெந்து வாய்விட - நெடுவான
வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த சூரனு
மடிய இந்தி ராதியர் - குடியேறச்
சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு
சிறுவ சந்த்ர சேகரர் - பெருவாழ்வே
திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவிய
திருவி ரிஞ்சை மேவிய - பெருமாளே.