இடம்விளங்காத தலங்கள் என்று குறிக்கப்பட்டிருப்பனவற்றுள் இந்தப் பாடலும் ஒன்று. இதில் குறிக்கப்படும் ஒடுக்கத்துச் செறிவாய் எனப்படும் தலம் எதுவென்று தெரியவில்லையென குகத்திரு செங்கல்வராய பிள்ளையவர்கள் குறித்திருக்கிறார்கள். கெட்ட (பாழ்த்த) புத்தியை ஒழித்து நல்ல புத்தியை அடையவேண்டும் என்று கோருகிற பாடல்.
அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்; ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் மூன்றெழுத்துகளைக் கொண்டவை; இவற்றில் மூன்றாம், ஐந்தாம் எழுத்துகள் வல்லொற்று; இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு ஆகிய சீர்கள் மூன்றெழுத்துகளைக் கொண்டவை; இவற்றில் இரண்டாம் எழுத்து வல்லொற்று; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்கள் இரண்டெழுத்துகளால் அமைந்தவை; இவற்றில் (கணக்கில் வராத) இரண்டாமெழுத்து வல்லொற்று.
தனத்தத் தத்தன தாத்த தத்தன
தனத்தத் தத்தன தாத்த தத்தன
தனத்தத் தத்தன தாத்த தத்தன தனதான
வழக்குச் சொற்பயில் வாற்ச ளப்படு
மருத்துப் பச்சிலை தீற்று மட்டைகள்
வளைத்துச் சித்தச சாத்திர ரக்கள வதனாலே
மனத்துக் கற்களை நீற்று ருக்கிகள்
சுகித்துத் தெட்டிக ளூர்த்து திப்பரை
மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள் மதியாதே
கழுத்தைக் கட்டிய ணாப்பி நட்பொடு
சிரித்துப் பற்கறை காட்டி கைப்பொருள்
கழற்றிக் கற்புகர் மாற்று ரைப்பது கரிசாணி
கணக்கிட் டுப்பொழு தேற்றி வைத்தொரு
பிணக்கிட் டுச்சிலு காக்கு பட்டிகள்
கலைக்குட் புக்கிடு பாழ்த்த புத்தியை யொழியேனோ
அழற்கட் டப்பறை மோட்ட ரக்கரை
நெருக்கிற் பொட்டெழ நூக்கி யக்கணம்
அழித்திட் டுக்குற வாட்டி பொற்றன கிரிதோய்வாய்
அகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர்
சமத்துக் கட்டியி லாத்த முற்றவன்
அலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையி லுறைமாயன்
உழைக்கட் பொற்கொடி மாக்கு லக்குயில்
விருப்புற் றுப்புணர் தோட்க்ரு பைக்கடல்
உறிக்குட் கைத்தல நீட்டு மச்சுதன் மருகோனே
உரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்
மதித்திட் டுச்செறி நாற்க விப்பணர்
ஒடுக்கத் துச்செறி வாய்த்தா லத்துறை பெருமாளே.